டிராகன் படம் என்னுடைய பெற்றோர்களுக்கு சொல்லும் மன்னிப்பு - அஸ்வத் மாரிமுத்துவின் எமோஷனல் பதிவு

By subhashini · 24/2/2025

தன்னுடைய பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்டு அஸ்வத் மாரிமுத்து போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இயக்குனராக திகழ்ந்து கொண்டிருப்பவர் அஸ்வத் மாரிமுத்து. இவர் இயக்குனர் மட்டும் இல்லாமல் திரைக்கதை எழுத்தாளரும் ஆவார். இவர் முதன்முதலாக 2020 ஆம் ஆண்டு வெளிவந்த ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகியிருந்தார்.

இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், விஜய் சேதுபதி உட்பட பலர் நடித்திருந்தார்கள். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றிருந்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும் இந்த படம் வெளியாகி இருந்தது. இதை அடுத்து தற்போது இவர் ட்ராகன் என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர், மிஷ்கின், கௌதம் மேனன் உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

ட்ராகன் படம்:

இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்து இருக்கிறார். சில தினங்களுக்கு முன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. எதிர்பார்த்ததை விட இந்த படம் வசூல் சாதனையும் செய்திருக்கிறது என்றே சொல்லலாம். மேலும், இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து பிரதிப் ரங்கநாதன், அஸ்வத் மாரிமுத்து இருவருமே நன்றி தெரிவித்து வருகிறார்கள்.

அஸ்வத் மாரிமுத்து பதிவு:

இந்த நிலையில் தற்போது அஸ்வத் மாரிமுத்து இன்ஸ்டாவில் தன்னுடைய பெற்றோர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இவர்கள்தான் என்னுடைய பெற்றோர். மாரிமுத்து என்ற தனபால். எங்க போனாலும் ஜோல்னா பையோடதான் போவார். என்னுடைய அம்மா சித்ரா. நான் 12 ஆம் வகுப்பு முடித்த பிறகு டாக்டராக வேண்டும் என்று விரும்பினார்கள். ஆனால், நான் ஒரு மோசமான ஆங்கில மாணவன் ஆனேன். அதற்கு பிறகு தான் நான் செய்த தவறுகளை உணர்ந்தேன். டிராகன் படம் நான் அவர்களுக்கு சொல்லும் மன்னிப்பு என்று கூறியிருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Ashwath Marimuthu (@ashwath_marimuthu)

படம் குறித்த தகவல்:

படத்தில் ஹீரோ பிரதீப் ரங்கநாதன், 12ஆம் வகுப்பில் நன்றாக படித்து 96 சதவீதம் மதிப்பெண் எடுத்து மெரீட்டில் கல்லூரிக்கு செல்கிறார். ஆனால், இவர் பள்ளியில் நன்றாக படித்தும், நல்ல பையனாக இருந்துமே ஒரு பெண் இவரை வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதனால் கல்லூரியில் இவர் அடாவடி செய்யும் ரகளை பையனாக வலம் வருகிறார். 48 அரியர் வைத்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கதாநாயகி அனுபமாவை காதலிக்கிறார். இன்னொரு பக்கம் கல்லூரி ப்ரொபசர் மிஸ்கினை எதிர்த்து இவர் நிறைய சேட்டைகள் எல்லாம் செய்கிறார். மேலும், இவருடன் படித்தவர்கள் எல்லோருமே வேலைக்கு போகிறார்கள். ஆனால், இவர் மட்டும்தான் பிக் பாஸ் பார்த்து வாழ்க்கை கழித்துக் கொண்டிருக்கிறார்.

படத்தின் கதை:

இதனால் அனுபமா இவருடைய காதலை பிரேக் அப் செய்து விடுகிறார். இதனால் பொங்கி எழுந்த பிரதீப், அனுபமா முன்னாடி நன்றாக வாழ வேண்டும் என்று போலி சர்டிபிகேட் தயார் செய்கிறார். இதன் மூலம் இவர் மூன்று லட்சம் சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறார். வாழ்க்கையில் எல்லாம் செட்டில் ஆகிறார். அப்போது ஒரு நாள் மிஸ்கின், பிரதீப் போலீஸ் சான்றிதழ் மூலம் தான் வேலைக்கு போனார் என்ற விஷயம் தெரியவந்தது. அதைப் பற்றி மிஸ்கின், பிரதீப்பிடம் கேட்கிறார். உடனே அவர், மிஸ்கின் காலில் விழுந்து எல்லாம் கெஞ்சுகிறார். உடனே மிஸ்கின், நீ 48 அரியரையும் இப்போது கிளியர் செய். உன்னுடைய தப்பை மன்னித்து விடுகிறேன் என்று சொல்கிறார். அதற்குப்பின் பிரதீப் என்ன செய்தார்? தன்னுடைய அரியரை எல்லாம் கிளியர் செய்தாரா? தன்னுடைய காதலில் ஜெயித்தாரா? என்பது தான் படத்தின் உடைய மீதி கதை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full