விஜய் நல்ல மனிதர் ஆனா, பாவமா இருக்கு- விஜயின் அரசியல் குறித்து அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டி

By subhashini · 16/8/2023

விஜய் அரசியல் குறித்து தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அளித்து இருக்கும் பேட்டி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் ரசிகர் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

இப்படி இருக்கும் நிலையில் 2020 ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்கள். இந்த வெற்றி அரசியல் வட்டாரத்தை கதிகலங்க வைத்தது. இப்படி விஜய் மக்கள் இயக்கம் அரசியலில் ஈடுபட்டாலும், தங்களின் ஜனநாயக கடமையை செய்வதில் தவறுவதில்லை. மேலும், விஜய் சினிமாவை தாண்டி பொதுநல சேவைகளையும் செய்து கொண்டு வருகிறார். இதனால் இவர் கூடிய விரைவில் அரசியலுக்கு வருவார் என்று கூறப்படுகிறது.

விஜய் மக்கள் இயக்கம்:

மேலும், இவர் சமீபத்தில் தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் பத்தாம் மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்களில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை நடிகர் விஜய் நேரில் சந்தித்து வழங்கி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் சில மாணவர்கள் வைத்த கோரிக்கைகளை விஜய் அவர்கள் மேடையிலேயே நிறைவேற்றி இருக்கிறார். கிட்டத்தட்ட 12 மணி நேரத்திற்கு மேலாக இந்த விழா நடைபெற்றிருக்கிறது.

விஜய் நடத்திய விழா:

இந்த விழாவில் விஜய் அவர்கள் மாணவர்களின் எதிர்காலம், கல்வி, அரசியல், தலைவர்கள் குறித்தும் பல விஷயங்களை பேசி இருக்கிறார். மாணவர்களுக்கு விஜய் பரிசு பேசி குறித்து பலருமே பாராட்டி இருந்தார்கள். இந்த நிகழ்வின் மூலம் விஜய் அரசியலுக்கு வருவதற்காக தான் செய்கிறார் என்றெல்லாம் பல தரப்பினர் மத்தியில் கருத்துக்கள் வந்தது. அதுமட்டுமில்லாமல் 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவை தேர்தலில் விஜய் கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதனால் விஜய் அரசியலுக்கு வருவதை சிலர் ஆதரவு தெரிவித்தும், சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் வருகிறார்கள்.

துரைமுருகன் அளித்த பேட்டி:

இந்த நிலையில் விஜய் அரசியல் குறித்து தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியது, விஜய் அரசியல் கட்சி தொடங்க இருப்பது பாவமா இருக்கு. ஏன் சொல்கிறேன் என அப்புறமாக தெரியும். விஜய் நல்ல மனிதர். கஷ்டப்பட்டு இரவு, பகலா உழைக்கிறாரு. அவங்க அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரை எனக்கு தெரியும். என் பையனோட கிளாஸ்மேட் தான் விஜய். என்னமோ அவருக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

விஜய் அரசியல் குறித்து சொன்னது:

அரசியல் களம் பொன் விளையுற பூமி என நினைத்து வருகிறார்கள். ஆனால் அதான் இல்லை. அரசியலில் 50 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலை இப்போது மாறி இருக்கிறது. தற்போது மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்கிறார்கள். ஏன்னா, 20 வருடத்துக்கு முன்னாடி கரண்ட் போயிடுச்சி என்றால் கரண்ட் போயிடுச்சின்னு பேசாம தூங்குவாங்க. ஆனால், இப்ப நிலைமை அப்படி இல்லை. அந்த துறை அமைச்சர்களின் போன் நம்பரை வைத்துள்ள அளவுக்கு உள்ளார்கள். எங்களை தூங்க விட மாட்டார்கள். இது ஆரோக்கியமான விஷயம் தான் என்று கூறி இருக்கிறார்.

அதே போல விஜய் கல்லி நிதி உதவி வழங்கும் விழாவில் ஓட்டுக்கு பணம் வாங்கி கொண்டு ஓட்டு போட வேண்டாம் என்று விஜய் பேசிய வீடியோ துரை முருகனுக்கு காண்பிக்கப்பட்டு இருந்தது. அந்த வீடியோவை கண்ட பின்னர் 'விஜய் என்ன புது கதை சொல்றாரு. ஓட்டுக்கு பணம் கொடுக்கிறார்களா என்ன ? நாட்டில் அப்படியெல்லாம் பணம் தருகிறார்களா என்ன ? யாரும் ஓட்டிற்கு பணம் கொடுப்பதே கிடையாது. கையெடுத்து கும்பிடுகிறோம் ஓட்டு போட்டு விடுகிறார்கள்' என்று கூறியுள்ளார் துரைமுருகன்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full