என்னுடைய திருமண வாழ்க்கையின் வெற்றிக்கு காரணம் இவர் தான் - இயக்குனர் இரா.சரவணன் எமோஷனல் பதிவு
இயக்குனர் இரா.சரவணன் போட்ட பதிவில், வெற்றிகரமான 20-வது திருமண வருடம். இந்தச் சாதனை சாத்தியமாகச் சத்தியமாகக் கலாதான் காரணம். “இந்தப் பொண்ணுகூட சரவணன் ஆறு மாசம் சேர்ந்து வாழ்ந்துட்டா பெரிசு. எனக் கலாவின் காதுபடவே உறவினர்கள் பேசிய காலம் உண்டு. எதற்கும் பதில் சொல்லாமல், துவண்டு போகாமல் 20 வருட வாழ்க்கையையே பதிலாக்கி இருக்கிறார் கலா. கலா என்னைவிட மூன்று வயது மூத்தவர். நான் திருமணத்தில் விருப்பம் காட்டாதபோது, “அவ உன்னையவிட வயசு மூப்பா இருக்கதுதான் உன் பிரச்னையா?” என்றார் என் அம்மா. “ஆணுக்கு அதிக வயசு. பொண்ணுக்கு கம்மியான வயசா இருக்கனும்கிற சம்பிரதாயத்தில் எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லைம்மா, எனக்கு இப்போ கல்யாணம் வேணாம்னுதான் சொல்றேன்” என்றேன்.
இதையெல்லாம் தாண்டி என் 21 வயதிலேயே திருமணத்தை நடத்தி முடித்து விட்டார்கள். இத்தனை வருடங்களுக்குப் பிறகு கடந்த பொங்கல் அன்றுதான், “மூணு வயசு மூப்பான கலாவை சரவணனுக்கு ஏன்மா கட்டி வைச்சீங்க?” என்கிற கேள்வி பேச்சாக எழுந்தது. நான் அதை ஒருபோதும் பொருட்படுத்தியது இல்லை என்றாலும், எனக்குள்ளும் அம்மா ஏன் அப்படி செய்தார் என்கிற கேள்வி பல காலமாக இருந்தது. அம்மா சொன்னார்: “சரவணன் ரொம்ப கூச்ச சுபாவி. யார்கூடவும் ஒட்ட மாட்டான். கோபப்படுவான். வாழ்க்கையோட நெளிவு சுளிவு தெரியாது.
இரா.சரவணன் பதிவு:
அவனைப் பக்குவப்படுத்தனும்னா அவனைவிட வயசு மூப்பான பொண்ணாலதான் முடியும். ஆணுக்கு வயசு அதிகமாவும் பொண்ணுக்கு கம்மியாகவும் இருக்கனும்கிற அவசியமெல்லாம் அர்த்தம் இல்லாதது. மனைவி தனக்குக் கீழானவள் என்கிற எண்ணத்தை இந்த மாதிரி சம்பிரதாயம்தான் உருவாக்குது. எனக்குத் தெரிஞ்சு பொறுப்பானவங்க வாழ்க்கையை முன்னெடுக்கனும். அந்த வகையில கலா கெட்டிக்காரி. அவ சரவணனை சரி பண்ணி வாழ்க்கைய ஓட்டிருவான்னு நான் நம்பினேன். இப்போ அவ சாதிச்சுக் காட்டிட்டா. உண்மையில் இது கலாவின் சாதனைதான். விகடனில் பணியாற்றிய 15 வருடங்களில் வீட்டிற்காக நான் எதையுமே கண்டு கொண்டதில்லை.
திருமண நாள் தினம்:
குழந்தைகள் என்ன படிக்கிறார்கள் என்பதுகூடத் தெரியாது. விகடனிலிருந்து வெளியே வந்த நாளில் மொத்த உலகமும் இருண்டு போனதுபோல் நான் திகைத்து நின்றபோது, அக்கம்பக்கக் குழந்தைகளுக்கு ட்யூஷன் எடுக்கத் தொடங்கி இருந்தார் கலா. போட்டித் தேர்வுகள் எழுதினார். அதுவரை வெளியுலகம் என்றால் என்னவென்றே தெரியாதவர், ஒன்றுக்கு இரண்டு அரசு வேலைகளுக்குத் தேர்வானார். அவருக்கு மிக விருப்பமான ஆசிரியர் வேலையைத் தேர்ந்தெடுத்தார். “குடும்பத்தை நான் பார்த்துக்குறேன். நீங்க தைரியமா சினிமா பக்கம் போங்க” என்றார். ‘நந்தன்’ படப்பிடிப்பில் ஒருநாள் கோபத்தில் கத்திக் கொண்டிருந்தேன். படப்பிடிப்பே நின்றுவிடும் அளவுக்கு நெருக்கடி. சசிகுமார் சாரே அருகில் வரவில்லை. கலாவிடமிருந்து போன் வந்தது. ஐந்து நிமிடங்களில் சரியாகி “ஸ்டார்ட் கேமிரா. சொல்லத் தொடங்கினேன்.
மனைவி பற்றி சொன்னது:
நீங்க பேசினாத்தான் அவரைச் சரிபண்ண முடியும்” எனக் கலாவுக்கு போன் பண்ணிச் சசிகுமார் சார் சொன்னாராம். சமீபத்தில் சிறிய அறுவை சிகிச்சைக்காகக் கலாவின் அப்பாவை மருத்துமனையில் சேர்த்தோம். கலாவின் கைகளைப் பற்றி நின்றேன். “எங்க அப்பா கண்ணை மூடுறதுக்குள்ள எல்லாருக்கும் தெரியிற மாதிரி பெரிசா ஜெயிச்சிடு சரவணா…” என்றார் கலங்கியபடி. எது வெற்றி என்பதில் இருவருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கிறது. அதனால் அந்த கோரிக்கை குறித்து சட்டை பண்ணவில்லை. ஆனால், கட்டிய கணவனின் பெயரைக் கலா சொல்ல 20 வருடங்கள் ஆகியிருக்கிறதே என்பதில்தான் ரொம்பவே கலங்கிப் போனேன். எப்போதும் என் பெயர் சொல்லி அழைக்கிற ஒருவனாக நான் கலாவிடம் நடந்துகொள்ளும் விதத்திலேயே என் மீத வாழ்க்கை இருக்கிறது.