ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த 22 ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகி இருந்தது. ஆர்யா, துஷாரா, விஜயன், பசுபதி, அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், கலையரசன், ஜான் கொக்கன், சந்தோஷ் பிரதாப், ஜான் விஜய், ஷபீர் கல்லராக்கல், மாறன் என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்த உள்ளார். வெளிநாட்டின் முரட்டு விளையாட்டான குத்து சண்டை விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் பல்வேறு காட்சிகளில் தி மு க வின் ரெபரென்ஸ் படு அதிகமாக தான் இருக்கிறது. மிசா தடைச்சட்டம் ஆட்சி கலைப்பு இனவாதத்தை கடுமையாக சாடிய குத்துச்சண்டை வீரர் முகமது அலி போன்றவற்றின் மூலம் தன்னுடைய அரசியலை பேசியிருக்கிறார் ரஞ்சித். இந்த படத்தில் ரங்கன் வாதியாராக வரும் பசுபதி கூட தி மு க தொண்டனாக தான் காட்டப்பட்டு இருக்கிறது.

Advertisement

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் எம்.ஜி.ஆரைத் தவறாகச் சித்திரித்துள்ளதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கூறியுள்ள அவர், முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் நபர்களை நாம் அறிவோம். ஆனால் 30 ஆண்டுகால நல் ஆட்சியையே திட்டமிட்டு ஒரு படத்தில் மறைத்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித். சமீபத்தில் வெளியாகிய ’சார்பட்டா’ படத்தில் எம்ஜிஆருக்கும் விளையாட்டுத் துறைக்கும் எதுவுமே தொடர்பில்லை என்பது போல காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இத்திரைப்படம் முழுக்க முழுக்க திமுகவின் பிரச்சாரப் படமாகவே எடுக்கப்பட்டுள்ளது.

திரைப் பயணம் தொடங்கி அரசியல் பயணம் வரை விளையாட்டை விடாப்பிடியாய் கைக்கொண்டவர் எம்ஜிஆர். அவர் படங்களை முன்மாதிரியாகக் கொண்டு, ஆயிரக்கணக்கான வீரர்கள் களத்திற்கு வந்து வீரர்கள் ஆகியுள்ளனர். மான்கொம்பு சண்டை, வாள் சண்டை, குத்துச் சண்டை, குதிரையேற்றம் ஒவ்வொரு படத்திலும் விளையாட்டு வீரராகவே வெளிப்படுத்திக் கொண்டவர் எம்ஜிஆர். முக்கியமாக குத்துச்சண்டையை மிகவும் நேசித்த ஒரே அரசியல் தலைவர் எம்ஜிஆர்.

Advertisement

1980ஆம் ஆண்டு தமிழ்நாடு அமெச்சூர் பாக்சர் சங்கத்துக்கான நிதி திரட்டும் வேடிக்கை குத்துச் சண்டையில் பங்கேற்பதாக நாக் அவுட் நாயகன் முகமது அலியை சென்னை அழைத்து வந்தவர் நமது எம்ஜிஆர். போட்டி முடிந்து தன் ராமாவாரம் தோட்டத்திற்கு அழைத்து மீன் குழம்பு பரிமாறினார். அந்த அளவிற்குக் குத்துச்சண்டை மீது காதல் கொண்டிருந்தார் எம்ஜிஆர்.திரையில் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்த எம்ஜிஆர் முதல்வரான பிறகு விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் எண்ணற்ற சலுகைகள் வழங்கினார். நலிவடைந்த வீரர்களுக்கு அரசின் நிதி அளித்து சர்வதேசப் போட்டிகளில் அவர்களைப் பங்கேற்கச் செய்து அழகு பார்த்தார்.

Advertisement

ஆனால் ‘சார்பட்டா’ திரைப்படம் திமுக ஆட்சியில் மட்டுமே விளையாட்டு வீரர்கள், மதிக்கப்பட்டது போலவும் எம்ஜிஆர், அவர்களைக் கைகழுவியது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.எம்ஜிஆர், அவர்களது படங்களில் விளையாட்டு வீரராக ஏற்றுவரும் கதாபாத்திரங்கள் என்னைப் போன்ற எண்ணற்றோருக்கு வீர விளையாட்டுகளின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியது என்று சொன்னால் மிகையாகாது. எத்தனையோ வீரர்களை ஊக்குவித்த எம்ஜிஆரை ’சார்பட்டா’ படத்தில் தவறாகச் சித்திரித்துள்ளது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. மேலும், இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்”.

Advertisement