'லக்கி பாஸ்கர்' படம் பார்த்துவிட்டு மாணவர்கள் எடுத்த விபரீத முடிவு, தீவிர விசாரணையில் போலீஸ்

By krithika · 11/12/2024

கடந்த தீபாவளிக்கு இயக்குனர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான் நடித்து தெலுங்கில் உருவான படம் தான் ‘லக்கி பாஸ்கர்’. இயக்குனர் வெங்கி அட்லூரி தனுஷ் நடிப்பில் வெளியான ‘வாத்தி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து மீனாட்சி சௌத்ரி, ராஜ்குமார் காசிரெட்டி, ராங்கி, ஹைப்பர் ஆதி, சாய்குமார், சச்சின் கெடேகர், சூர்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் பேங்கில் கேஷியர் வேலை பார்த்து மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்கிறார் பாஸ்கர் குமார்(துல்கர்). குடும்ப சூழல், கடன் நெருக்கடியால் முதல்முறையாக பாஸ்கர் நேர்மை தவறும் சூழல் உருவாகிறது. அதன் பின்னர் அவர் வாழ்க்கையில் கண்ட ஏற்ற இறக்கங்கள், சவால்களை எப்படி சமாளிக்கிறார் என்பதே படத்தின் மீதி கதை. இந்த கதை 1989இல் நடக்கிறது. த்ரில்லர் படத்திற்கான அம்சங்களை கொண்டுள்ள இந்த படம் நிதி குற்றங்கள் குறித்துப் பேசும் ஒரு பீரியட் திரில்லர் என்று கூறலாம்.

லக்கி பாஸ்கர் :

இந்த படத்தில் ஒரு நடுத்தர வர்க்க மனிதரை கதையின் முக்கிய கதாபாத்திரமாக இயக்குனர் வடிவமைத்திருப்பதால் ரசிகர்களால் தங்களை துல்கருடன் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது.
படத்தில் பாஸ்கராக வரும் துல்கர் சல்மான் நடிப்பில் அதகளம் செய்திருப்பார். குடும்பப் பொறுப்புகளை சுமக்கும் போது அப்பாவியாக இருக்கும் இவர், ஒரு கட்டத்தில் வாழ்வில் உயரும் போது, பணக்கார தோரணைக்கு மாறுவது ரசிகர்களை கவர்ந்து இருக்கும். காட்சிக்கு காட்சி விறுவிறுப்பை கொடுத்து, திரையை விட்டு நகர விடாமல் பார்த்துக் கொள்ளும் வகையில் திரைக்கதையை இயக்குனர் வடிவமைத்திருப்பார்.

நல்ல வரவேற்பு :

படத்தின் பெரும்பாலான வசனங்கள் கைதட்டலை பெரும். மீனாட்சி சௌத்ரி தனது கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்திருப்பார். படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ராம்கியும், சாய்குமாரும் தங்களது கதாபாத்திரத்திற்கு நடிப்பின் மூலம் வலு சேர்த்து இருப்பார்கள். இப்படம் தெலுங்கில் உருவானாலும் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியானது. தீபாவளி முன்னிட்டு வெளியான இப்படத்தை தற்போது வரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்

நான்கு மாணவர்கள் மாயம் :

இந்நிலையில், இந்த படத்தை பார்த்துவிட்டு நான்கு மாணவர்கள் மாயமான செய்திதான் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள மகாராணிப்பேட்டையில் பிரபல தனியார் பள்ளி ஒன்று உள்ளது. அங்கு ஒன்பதாம் வகுப்பு படிக்கும் நான்கு மாணவர்கள் சமீபத்தில் லக்கி பாஸ்கர் படத்தை பார்த்திருக்கிறார்கள். அந்தத் திரைப்படத்தில் கதாநாயகன் பணம், வீடு ஆகியவற்றை மிக எளிதில் சம்பாதிப்பது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

போலீசில் புகார் :

அந்த காட்சிகளை பார்த்த மாணவர்கள் நாங்களும் எளிதில் பணம் சம்பாதித்த பின் இங்கு வருவோம் என்று கூறிவிட்டு ஹாஸ்டலில் இருந்து தப்பி ஓடி உள்ளனர். தற்போது மாணவர்கள் நான்கு பேரும் மாயமானது பற்றி ஹாஸ்டல் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நான்கு மாணவர்களையும் தேடி வருகின்றனர். லக்கி பாஸ்கர் போல் பணம் சம்பாதிக்க ஹாஸ்டலில் இருந்து தப்பி ஓடிய மாணவர்கள் நான்கு பேர் கிரண், கார்த்திக், சரண் தேஜ், ரகு ஆகியோர் என்று தெரிய வந்துள்ளது. தற்போது அந்த நான்கு மாணவர்களையும் சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் தீவிரமாக தேடி வருவதாக கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full