நீண்ட இடைவெளிக்குப் பின் சகோதரர்கள் இளையராஜா-கங்கை அமரன் சந்திப்பு புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் திரை உலகில் முன்னணி இசையமைப்பாளராக திகழ்பவர்கள் இளையராஜா, கங்கை அமரன். கடந்த சில ஆண்டுகளாகவே இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பேசாமல் இருப்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இசைக்கவி இளையராஜா குடும்பத்தில் மொத்தம் நான்கு சகோதரர்கள். மூத்தவர் பாவலர் வரதராஜன். இவர் கம்யூனிஸ்ட். இவர் ஊர் ஊராக சென்று தனது பாடல்களின் வழியாக கம்யூனிஸ்ட் கொள்கையைப் பரப்பியவர்.

இவர் தேர்தல் பிரச்சாரம் செய்தவர். அவருக்கு எதிராக பாடிய பாடலின் வடிவம் தான் இளையராஜா இசையமைத்த ஒத்த ரூபாயும் தாரேன் பாடல். இரண்டாவது பாஸ்கர், மூன்றாவது இளையராஜா, நான்காவது கங்கை அமரன் ஆவார். இதில் மூத்த வரை தவிர மீதி மூன்று பேரும் சென்னை வந்து சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்தார்கள். இவர்களை அனைவரும் பாவலர் சகோதரர்கள் என்று தான் அழைப்பார்கள். இந்த நான்கு பேரில் இப்போது இளையராஜாவும், கங்கை அமரனும் மட்டுமே இருக்கிறார்கள்.

Advertisement

இளையராஜா – கங்கை அமரன் இடையே பிரச்சனை:

இவர்கள் இருவரும் தமிழ் சினிமா உலகில் பல படங்களில் இணைந்து ஒன்றாக பணியாற்றினார்கள். இதனிடையே தன்னை படம் இயக்கவோ, இசையமைக்கவோ இளையராஜா அனுமதித்ததில்லை. இதை கங்கை அமரன் ஒருமுறை பேட்டியில் வேதனையுடன் தெரிவித்திருந்தார். இதுபோல் பல விஷயங்கள் இருவருக்குமிடையே சின்னச்சின்ன கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின் கங்கை அமரனுக்கும் இளையராஜாவுக்கும் சின்னராமசாமி பெரியராமசாமி பட தயாரிப்பின் போது பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இளையராஜா – கங்கை அமரன் சந்திப்பு:

அப்போதிலிருந்தே இவர்கள் இருவரும் பேசிக்கொள்வது இல்லை என்றும், எந்த குடும்ப நிகழ்ச்சியிலும் சந்தித்துக் கொண்டதும் இல்லை என்றும் தகவல்கள் வெளியானது. அப்படி தான் பல ஆண்டுகள் இவர்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளாமல் பிரிந்தார்கள். இந்த நிலையில் நேற்று இளையராஜாவும் கங்கை அமரனும் சந்தித்துக்கொண்டனர். அது இரு வீட்டாருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. இந்த சந்திப்பு குறித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து உறவுகள் தொடர்கதை என்று கங்கை அமரன் குறிப்பிட்டிருக்கிறார்.

Advertisement

பாவலர் பிரதர்ஸ் யூனியன்:

இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. மேலும், இதை கங்கை அமரனின் மூத்த மகன் வெங்கட்பிரபு, பாவலர் பிரதர்ஸ் யூனியன் என்று புகைப்படத்தை போட்டு பதிவிட்டிருந்தார். பின் இரண்டாவது மகன் பிரேம்ஜி அதே புகைப்படத்தை பகிர்ந்து இன்று நடந்த சந்திப்பு இறைவனுக்கு நன்றி, உறவுகள் தொடர்கதை என்று பதிவிட்டுள்ளார். இப்படி ஒட்டுமொத்த குடும்பமும் இவர்களின் சந்திப்பை கொண்டாடி வருகிறது.

Advertisement

கங்கை அமரன் சொன்ன விளக்கம் :

இதுகுறித்து கங்கை அமரன் கூறுகையில் அண்ணன் அழைப்பதாக போனில் சொன்னார்கள். நான் இவ்வளவு காலம் அதற்குத்தான் காத்திருந்தேன். உடனே போய் சந்தித்தேன். ஒன்றரை மணிநேரம் பேசிக்கொண்டு இருந்தேன். எந்தச் சண்டை சச்சரவுகளும் இல்லாமல் அருமையாகப் பேசிக்கொண்டு இருந்தார். இனிமேல் சந்தோஷமாக இணைந்திருப்போம். 13 வருடங்களாகப் பேசாமல் இருந்தது பெரும் துயரம். இனிமேல் அது போல் நேராது. எனக்கு இப்போது சந்தோஷமாக இருக்கிறது. மகிழ்ச்சியாக வீட்டுக்குப் போகிறேன் என்றார்.

Advertisement