சாதி சம்பந்தப்பட்ட திரைப்படங்களை யாரும் விரும்பவில்லை, சர்ச்சைக்கு உண்டாகிய கௌதம் மேனன் பேச்சு
இயக்குனர் கௌதம் மேனன் சமீபத்தில் பேட்டியில் பேசி இருக்கும் விஷயம்தான் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கோலிவுட்டில் பிரபலமான இயக்குனராக திகழ்பவர் கௌதம் வாசுதேவ் மேனன். தமிழ் சினிமா உலகில் காதல், ரொமான்டிக் படம் என்றாலே அது கௌதம் மேனன் தான். இவர் படத்தை பார்ப்பதற்கு என்றே ஒரு தனி ரசிகர் படை இருக்கிறது. அந்த அளவிற்கு இவருடைய படமெல்லாம் மிகப் பெரிய அளவு ஹிட்.
இவர் முதன் முதலாக விளம்பரப் பட இயக்குனராக தான் இருந்தார். முதலில் இவர் இயக்குனர் ராஜீவ் மேனனிடம் தான் உதவி இயக்குனராக இருந்தார். அதற்கு பிறகு தான் இவர் மின்னலே படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். அதன் பின்னர் இவர் காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், என்னை நோக்கி பாயும் தோட்டா போன்ற பல ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார்.
கௌதம் மேனன் திரைப்பயணம்:
மேலும், இவர் இயக்குனர் மட்டுமில்லாமல், நடிகராகவும் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என பல மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். பின் இவர் சிம்புவை வைத்து இயக்கிய வெந்து தணிந்தது காடு திரைப்படம் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். இதை அடுத்து கடந்த ஆண்டு கௌதம் வாசுதேவ் மேனன் எழுதி, இயக்கி எடுத்த படம் ஜோஷ்வா இமை போல் காக்க.
கௌதம் மேனன் படங்கள்:
இந்த படம் இமை திரல்லர் பாணியில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் வருண், கிருஷ்ணா, யோகி பாபு, ராஹோ, மன்சூர் அலிகான், விசித்ரா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பல போராட்டங்களுக்குப் பிறகு வெளியான இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியடையவில்லை. தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் மம்முட்டி நடிப்பில் மலையாளத்தில் உருவாகி இருக்கும் படம் ‘Dominic and the Ladies Purse’. இந்தப் படம் கடந்த ஜனவரி 23 ஆம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.
கௌதம் மேனன் பேட்டி:
தற்போது இந்த படத்தின் ப்ரமோஷன் பேட்டிகளில் கௌதம் மேனன் கலந்து கொண்டு வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர், சில படங்களின் பெயர்களை சொல்ல விரும்பவில்லை. ஆனால், சாதியைப் பற்றிய வெளிவரும் படங்களை இப்போது கொஞ்சம் அதிகமாகிவிட்டதாக தோன்றுகிறது. இப்போது அப்படி நடப்பதில்லை எனத் தெரிந்தும், 80களில் அல்லது 90களில் இப்படி நடந்தது என்று ஒரு கதையை கூறி அதை படங்களாக எடுக்கின்றனர். அது எல்லாம் இப்போது யாரும் விரும்புவதில்லை என்று கூறியிருக்கிறார்.
யாரைத் தாக்கி பேசினார்:
தமிழில் பெரும்பாலும் சாதிய படங்களை எடுப்பவர்கள் பா ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் ஆகியோர் தான். இவர்களின் படம் வரும்போது பெரும்பாலும் இவர்கள் எந்த சாதியினரால் ஹீரோ ஒடுக்கப்பட்டதாக கூறுகின்றனரோ, அதே சாதியினரால் விமர்சனத்திற்கு உள்ளவார்கள். ஒரு சிலர், வேண்டுமென்றே இவர்களின் படங்களுக்கு முறையற்ற விமர்சனங்களையும் கொடுப்பதுண்டு. சமீபத்தில் இயக்குனர் வெற்றிமாறன் 80 களில் நடப்பது போல் 'விடுதலை 2' படத்தை இயக்கியிருந்தார். மாரி செல்வராஜூம், தன் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை 'வாழை' என்ற படமாக இயக்கியிருந்தார். இந்நிலையில்கௌதம் மேனன் இப்படி பேசி இருப்பது தற்போது திரையுலகில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.