நான் மட்டும் அப்படி பண்ணி இருந்தா, இந்நேரத்துக்கு கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட், கல்குவாரி என வசதியாக வாழ்ந்திருப்பேன்.

By subhashini · 6/4/2022

இன்னும் வாடகை வீட்டில் தான் வாழ்ந்து வருகிறேன் என்று கருணாஸ் அளித்து உள்ள பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்பவர் கருணாஸ். இவர் தமிழ் திரைப்பட நடிகர் மட்டுமல்லாமல் இசை அமைப்பாளரும் ஆவார். அதுமட்டுமல்லாமல் இவர் தமிழக அரசியல் வாதியும் ஆவார். நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த ’நந்தா’ என்ற படத்தில் லொடுக்கு பாண்டி என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் கருணாஸ் சினிமா உலகிற்கு அறிமுகமானர். இந்த ஒரு படத்திலேயே இவர் மக்களிடையே பரவலாக பேசப்பட்டார். அதன் பின்னர் கருணாஸ் அவர்கள் பல முன்னணி நடிகர்களின் படங்களில் தன்னுடைய நகைச்சுவை திறனை காண்பித்து உள்ளார்.

பின் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, சாந்தமாமா, ரகளபுரம் ஆகிய படங்களில் ஹீரோவாகவும் நடித்து தமிழ் சினிமா உலகில் தனெக்கென ஒரு முத்திரையை பதித்தார் கருணாஸ். அதுமட்டும் இல்லாமல் இவர் படங்களில் பாடியும் இருக்கிறார். தற்போது இவர் படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். அதே போல இவர் அரசியலில் அதிக ஈடுபட்டு காட்டி இருந்தார். ஆனால், சமீப காலமாக கருணாஸ் அரசியலுக்கு போவதில்லை என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இறுதியாக இவர் சூரரை போற்று, சங்கத்தலைவன் போன்ற படங்களில் நடித்து இருந்தார்.

கருணாஸ் நடிக்கும் படங்கள்:

தற்போது பல ஆண்டுகள் கழித்து மீண்டும் கருணாஸ் ஹீரோவாக களமிறங்கி இருக்கிறார். இந்தப் படத்தை கருணாஸ் ஹீரோவாக நடித்த ‘அம்பாசமுத்திரம் அம்பானி’, படத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.ராம்நாத் தான் இயக்க இருக்கிறார். இந்த படத்தில் கருணாஸுக்கு ஜோடியாக பிக் பாஸ் 2 டைட்டில் வின்னர் ரித்விகா நடிக்க இருக்கிறார். இந்த படத்திற்கு ‘ஆதார்’ என்று பெயர் வைத்துள்ளனர். சமீபத்தில் தான் இந்த படத்தின் பூஜைகள் கூட நடைபெற்று உள்ளது. தற்போது படத்திற்கான வேலைகள் எல்லாம் சென்று கொண்டு இருக்கிறது. பின் கார்த்தி நடித்து வரும் விருமன் என்ற படத்திலும், சசிகுமாருடன் ஒரு படத்திலும் கருணாஸ் நடித்து வருகிறார்.

கருணாஸ்- கிரேஸ் குறித்த தகவல்:

இது மட்டுமில்லாமல் சல்லியர்கள் என்ற படத்தையும் கருணாஸ் தயாரித்து வருகிறார். இப்படி கருணாஸ் தமிழ் சினிமாவில் படு பிசியாக இருக்கிறார். இதனிடையே கருணாஸ் அவர்கள் பாடகி கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிரேஸ் அவர்கள் சினிமாவில் பல படங்களில் பாடி உள்ளார். இவர் அதிகம் தன் கணவன் நடித்த படங்களில் பாடி இருக்கிறார். தற்போது கிரேஸ் அவர்கள் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து இருக்கிறார்.

கருணாஸ் அளித்த பேட்டி:

இந்நிலையில் கருணாஸ் அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர் தன்னுடைய வாழ்கை குறித்து சில விஷயங்களை பகிர்ந்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பது, நான் இதுவரை 140 படங்களில் நடித்து இருக்கிறேன். ஐந்து வருடங்களில் எம்எல்ஏவாக இருந்திருக்கிறேன். ஆனால், இப்போதும் நான் வாடகை வீட்டில் தான் குடியிருந்து வருகிறேன். ஏற்கனவே நான் வைத்திருந்த சொந்த வீட்டை சினிமா எடுத்து நஷ்டம் அடைந்தால் விற்றுவிட்டேன். இதெல்லாம் என்னுடைய சொந்த பிரச்சனை. ஆனால், இப்போது நான் வாழ்வதற்கு பணம் வேண்டும். இந்த நிலையில் எனக்கு நடிக்கவும், பாடவும் மட்டும் தான் தெரியும்.

அரசியல் குறித்து கருணாஸ் கூறியது:

எனவே நடித்து சம்பாதிப்பதற்காக சினிமாவுக்கு வந்துவிட்டேன். அரசியலையும் நான் தொழிலாக எடுத்து செய்திருந்தால் இந்நேரத்துக்கு கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட், கல்குவாரி என வசதியாக வாழ்ந்து கொண்டிருப்பேன். நடித்து தான் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியமே இருந்திருக்காது. மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையில் தான் நான் அரசியலுக்கு வந்தேன். பொதுமக்கள் இடமோ அல்லது பெரிய ஆட்களிடமோ பணம் வசூல் செய்து நான் கட்சி நடத்தவில்லை. என்னுடைய சொந்த கைக்காசை போட்டு தான் சமூக மக்களுக்காக சேவை செய்து வருகிறேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full