'ஜீயர்கள் தவிர யாருக்கும் அனுமதி கிடையாது' , கோவிலில் இளையராஜா வெளியேற்றப்பட்டதால் வெடித்த சர்ச்சை

By krithika · 16/12/2024

இசையமைப்பாளர் இளையராஜாவிற்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் ஏற்பட்டிருக்கும் சங்கடம் தான் இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தமிழ் சினிமாவில் இசைஞானி என்ற அந்தஸ்துடன் பல ஆண்டுகளாக இசைத்துறையில் ஜாம்பவானாக திகழ்ந்து வருபவர் இளையராஜா. 70 காலகட்டம் துவங்கி தற்போது வரை இவர் இசைத்து வருகிறார். இவருடைய இசையை ரசிக்காத ரசிகர்கள் யாரும் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும், இவர் 1976 ஆம் ஆண்டு ‘அன்னக்கிளி’ என்ற திரைப்படத்துக்கு இசை அமைத்ததன் மூலம் தான் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து இருக்கிறார். இதுவரை இவர் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் இசையமைத்து இருக்கிறார். அதோடு இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

இளையராஜா திரைப்பயணம் :

இவர் இசையமைப்பாளர், பாடகர் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால், இவர் பாடல் வரிகளை எழுதுபவர் என்று பலருக்கும் தெரியாத ஒன்று. இவர் கர்நாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றவர். இவர் கடைசியாக இயக்குனர் பாரி இளவழகன் இயக்கிய 'ஜமா' படத்திற்கு இசையமைத்திருந்தார். தற்போது இவர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'விடுதலை 2 ' படத்தில் இசையமைத்திருக்கிறார். இப்படம் வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்:

இந்நிலையில், சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள புகழ்பெற்ற ஆண்டாள் கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற இளையராஜா அங்கு சாமி தரிசனம் செய்திருந்தார். இந்து சமய அறநிலைத்துறை சார்பில் இளையராஜாவுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பெரிய பெருமாள் சன்னதி, நந்தவனம், ஆண்டாள் சன்னதி ஆகியவற்றிற்கு சென்று இளையராஜா சாமி தரிசனம் செய்தார். அப்போது ஆண்டாள் கோவில் கருவறைக்கு முன்புள்ள அர்த்த மண்டபத்திற்குள் செல்ல முயன்ற இளையராஜாவை அங்குள்ள ஜீயர்களும், பக்தர்களும் தடுத்து நிறுத்தி இருக்கிறார்கள்.

இளையராஜா வெளியேற்றம்:

அதாவது வரவேற்பில் விதி மீறல்கள் இருப்பதாக கூறி இளையராஜாவை அங்கிருந்து வெளியேற்றி இருக்கிறார்கள். அதனால் கோவில் அர்த்த மண்டபத்தில் இருந்து வெளியே வந்த இளையராஜா அங்கிருந்து சாமி தரிசனம் செய்திருக்கிறார். அதற்குப் பிறகு அங்குள்ள அர்ச்சகர்கள் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்திருக்கிறார்கள். ஆனால், அர்த்த மண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்ட சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

https://www.youtube.com/watch?v=-K7YkVDmQ18

நெட்டிசன்கள் கண்டனம்:

மேலும், இந்த சம்பவம் குறித்து இளையராஜா வருத்தமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். தற்போது இந்த விவகாரத்தில் கோவில் நிர்வாகம், ஜீயர்கள் தவிர வேறு யாருக்கும் அர்த்த மண்டபத்துக்குள் நுழைய அனுமதி கிடையாது. அர்த்த மண்டபத்தில் உற்சவர் சிலைகள் நிரந்தரமாக இருப்பதால் அனுமதி கிடையாது என்று விளக்கம் அளித்துள்ளது. தற்போது இந்தச் செய்தி தான் சோசியல் மீடியாவில் பேசும் பொருளாகி இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full