200 கோடி மோசடி வழக்கு - குற்றவாளியாக நடிகை ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் சேர்ப்பு.

By Rajkumar · 18/8/2022

சுகேஷ் சந்திரசேகர் மீதான மோசடி வழக்கில் குற்றவாளியாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரை சேர்க்கப்பட்டுள்ள தகவல் தற்போது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் சுகேஷ் மற்றும் அவரின் காதலி ஜாக்குலின் பெர்னாண்டஸ் குறித்த சம்பவங்கள் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இந்திய அளவில் அரசியல் புரோக்கராக செயல்பட்டு வந்தவர் சுகேஷ் சந்திரசேகர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பின் அதிமுக கட்சி பிளவு பட்டிருந்தது.

இதனால் இரட்டை இலை சின்னத்தை மீட்பதற்காக டிடிவி தினகரன் தரப்புக்காக தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் சுகேஷ் கைது செய்யப்பட்டார். அதுமட்டும் இல்லாமல் சுகேஷ் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து இருப்பது மத்திய அமலாக்கத் துறைக்கு தெரியவந்தது. இதனால் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக சென்னை, பெங்களூரு உட்பட சுகேஷ் பங்களாக்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத 2 கிலோ தங்கம், 82.5 லட்சம் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 15 சொகுசு கார்கள் என பலவற்றை பறிமுதல் செய்தனர்.

சுகேஷ் மீது மோசடி வழக்கு:

இதனிடையே சிறையில் இருந்தவாறே சுகேஷ் தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி சுமார் 200 கோடி பண மோசடி செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அவர் மீது டெல்லி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். மேலும், இவருக்கு தொடர்புடைய காதலி, பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மீதும் விசாரணை நடத்தப்பட்டது. பின் பண மோசடி வழக்கில் சுகேஷ் உள்பட 6 பேர் மீதும் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து உள்ளார்கள்.

விசாரணையில் நடிகை ஜாக்குலின் கூறியது:

பின் நடிகை ஜாக்குலினை போலீஸ் விசாரித்தது. அதில், சுகேஷ் அரசாங்கத்தின் மிக முக்கியமான நபர் என்றும், அவர் அமித்ஷாவின் அலுவகத்தில் இருந்து வந்ததாக தெரியவந்தது. அதற்கு பிறகு இருவருக்கும் நட்பு ஏற்பட்டது. இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட அமைச்சர் அமித்ஷா போன் நம்பரை பயன்படுத்தி இந்த மோசடியை செய்து இருக்கிறார்கள் என்று தெரிய வந்தது. அவர் நடிகை ஜாக்குலினுக்கு கோடிகோடியாக பணம் கொடுத்து இருக்கிறார்.

போலீஸ் நடத்திய தீவிர விசாரணை:

அதுமட்டுமில்லாமல் தான் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் குடும்பத்தை சேர்ந்தவன் என்றும், சன் டிவி தன்னுடையது தான் என்றும் கூறி இருக்கிறார். இந்த மாதிரி மோசடி எல்லாம் இவர் தன்னுடைய 17 வயதில் இருந்தே செய்திருக்கிறார் என்பது தெரியவந்து இருக்கிறது. சுகேஷ் மீது பல எப்.ஐ.ஆர்.கள் இருக்கிறது என்று அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக சுகேஷ் சந்திரசேகர் அவரது மனைவி லீனா மரியா பால் உள்ளிட்ட 6 பேர் மீது அமலாக்கத் துறை தீவிரமாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி இருந்தது.

குற்றவாளியாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் :

இந்த விசாரணையில் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு சுகேஷ் 10 கோடி அளவில் பரிசுப் பொருட்களை வாங்கிக்கொடுத்து இருப்பது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் இந்த மோசடி வழக்கு தொடர்பாக டெல்லி நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருக்கிறது. அதில் குற்றவாளியாக நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் பெயரையும் சேர்த்து உள்ளது. தற்போது இந்த தகவல் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full