சமீபத்தில் வெளியான ஜெய் பீம் படத்தில் வன்னியர்களை தவறாக சித்தரிக்கப்படும் குறியீடுகள் இருப்பதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் தற்போது அந்த குறிப்பிட்ட காட்சியை மாற்றி அமைத்து உள்ளனர் ஜெய் பீம் படக்குழு. தமிழ் சினிமா உலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக சூர்யா ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அதிலும் சமீபகாலமாக சூர்யா அவர்கள் கதைகளை தேர்ந்தெடுத்து படங்களில் நடித்து வருகிறார். மேலும், இவர் நடிப்பில் மட்டுமில்லாமல் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது சூர்யா அவர்கள் இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் ஜெய் பீம் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் சில தினங்களுக்கு முன்பு தான் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. பழங்குடியின மக்களின் வாழ்க்கை குறித்தும், உண்மையாலுமே அவர்களுக்கு நடந்த அநீதியை குறித்தும் சொல்லும் கதையாக ஜெய்பீம் அமைந்துள்ளது. மேலும், இந்தப்படம் மக்களின் மனதில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

அதே போல இந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மக்களின் பாராட்டுகளை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இந்த படத்தில் குருமூர்த்தி என்ற கொடூர வில்லனாக நடித்த இயக்குனர் தமிழின் நடிப்பும் பலரை வியக்கவைத்தது. இந்த நிலையில் உண்மை நடந்த கதையில் அந்தோணி தாஸ் என்ற போலீசை படத்தில் குரு மூர்த்தியாக சித்தரிப்பது ஏன் என்று வன்னியர் சமூகத்தினர் பலர் கேள்வி எழுப்பினர்.

அதோடு குருமூர்த்தியின் வீடு காண்பிக்கப்படும் ஒரு காட்சியில் அக்கினி குண்டத்தோடு இருக்கும் காலெண்டர் ஒன்று இருப்பதையும் குறிப்பிட்டு பல வன்னியர் சமூகத்தினர் கேள்வி எழுப்பினர். அந்த வகையில் திரௌபதி இயக்குனர் மோகனும் இதுகுறித்து கேள்வி எழுப்பி இருந்தார். அதே போல இயக்குனர் கௌதமனும் இந்த விவகாரத்தில் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

Advertisement

இந்த நிலையில் சர்ச்சைக்குரிய ‘ அக்கினி குண்டத்தோடு இருக்கும் காலெண்டர்’ புகைப்படம் லட்சுமி தேவி இடம்பெற்று இருப்பது போல மாற்றப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவை பகிர்ந்துள்ள மோகன், ஜெய் பீம் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.

Advertisement
Advertisement