'ஜெய்பீம்' ஆஸ்கர் தளத்தில் இடம்பெற காரணம் என்ன ? எப்போது விருது ? - இயக்குநர் ஞானவேல் பேட்டி

By Rajkumar · 22/1/2022

தமிழ் சினிமா உலகில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவராக சூர்யா திகழ்ந்து கொண்டு இருக்கிறார். கடந்த ஆண்டு இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய் பீம் படம் அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். மேலும், இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பாராட்டு மழையை குவித்தது.
ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது இருளர் இன மக்களுக்காக வாதாடிய உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டது தான் ஜெய் பீம். படத்தில் வழக்கறிஞராக சூர்யா நடித்து இருந்தார். இந்தப்படம் மக்களின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

அதோடு இந்தப் படத்தை குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பாராட்டி இருந்தார்கள். இருந்தாலும் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்தியதாக வன்னிய சமூகத்தினர் பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தார்கள். இது ஒரு பக்கம் இருக்க திரைப்படங்களுக்கான ரேட்டிங் குறித்து கணக்கிடும் ஐஎம்டிபி தளத்தில் அதிக ரேட்டிங் பெற்ற ‘ஷஷாங் ரிடெம்ப்ஷன்’ திரைப்படத்தை முந்தி ‘ஜெய்பீம்’ சாதனை படைத்தது.

ஆஸ்கரின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் ஜெய்பீம் படம்:

கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் ஆஸ்கரின் அதிகாரபூர்வ யூடியூப் பக்கத்தில் ஜெய்பீம் திரைப்படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. அதுமட்டுமில்லாமல் ஆஸ்கரின் யூட்யூப் தளத்தில் பதிவேற்றம் செய்த முதல் தமிழ் திரைப்படம் ஜெய்பீம் என்பது குறிபிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் ஜெய் பீம் படம் ஆஸ்கர் விருதுக்கு தேர்வாகி உள்ளது. தற்போது 94வது ஆஸ்கர் விருதுகளுக்கான தகுதிப் பட்டியலில் அனுப்பப்பட்ட 276 படங்களில் ஜெய்பீம் தேர்வாகியுள்ளது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இயக்குனர் ஞானவேல் அளித்த பேட்டி :

இந்நிலையில் இது குறித்து ஜெய்பீம் படத்தின் இயக்குனர் ஞானவேல் அவர்கள் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பது, ஆஸ்கர் விருதுக்கான தகுதிப் பட்டியலில் ஜெய் பீம் படம் இடம் பிடித்து இருப்பது மகிழ்ச்சியான ஒன்று. கடந்த வருடம் ஆஸ்கர் விருதுக்கான காலக்கெடுவுக்குள் படத்தை எடுத்து அனுப்ப முடியவில்லை. ஆஸ்கரின் காலக்கெடு முடிந்து மூன்று மாதங்களுக்குப் பிறகு அதாவது நவம்பர் மாதத்தில்தான் படம் வெளியானது. வருட இறுதி என்பதால் ஆஸ்கர் மட்டுமல்ல கோவா திரைப்பட விழா என எந்த திரைப்பட விருதுகளுக்கு இந்த படத்தை அனுப்ப முடியாத சூழல் ஏற்பட்டது.

ஜெய் பீம் படத்துக்கு கிடைத்த விருது:

அது மட்டுமில்லாமல் கடந்த வருடம் கோவிட் காரணங்களால் படத்தை எடுத்து வெளியிடுவதே சவாலான விஷயமாக இருந்தது. அப்போது விருது பற்றி யாராலும் யோசிக்க முடியாத சூழல் இருந்தது. மேலும், ஜெய் பீம் படம் வெளியான பிறகு மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. தமிழகம் தாண்டி இந்தியா முழுவதும் மக்கள் அதைப் புரிந்து கொண்டு வரவேற்ற விதம் எங்களுக்கு இன்னும் அதிக நம்பிக்கையை ஏற்படுத்தியது. மேலும், அகாடெமி விருதுக்கு அனுப்பட்ட 'ஜெய்பீம்' படத்தில் சில இடங்களில் பாடல்களை நீக்கிவிட்டுதான் அனுப்பி இருக்கிறோம். மேலும் 'குளோடன் குளோப்' பட்டியலில் 'ஜெய்பீம்' இடம் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு தான்.

படத்தை பற்றி இயக்குனர் சொன்னது:

அமேசான் ஒடிடி நிறுவனமும் இந்த படத்தை உலக அளவில் எடுத்து செல்ல முக்கிய தளத்தை அமைத்துக் கொடுத்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆஸ்கர் குழுவிலிருந்து படத்தின் சில காட்சிகளை இணைத்து என்னுடைய பேட்டியும் கேட்டிருந்தார்கள். ஜெய் பீம் கதை என்பது சாதி ரீதியாக ஒருவன் எப்படி ஓடுக்கப்படுகிறது, ஜாதி என்ன செய்கிறது என்பது தான் இந்த படத்தின் மொத்த கதையும். மேலும், அந்த யூடியூப் தளத்தில் பதிவேற்றப்பட்ட மற்ற காணொளிகளை காட்டிலும் அதிக பார்வைகளை ஜெய் பீம் படம் தான் கடந்திருக்கிறது.

ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியல் :

ஒரு படம் நல்ல வரவேற்பைப் பெற்று அடுத்தடுத்த தளங்களுக்கு செல்லும் போது அந்த படத்தில் உள்ள அனைவருக்குமே மகிழ்ச்சியும் பாராட்டும் போய் சேரும் என்று கூறியிருந்தார். மேலும், இந்த ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியல் பிப்ரவரி 8 என்று அறிவிக்கப்படும் என்றும், விருது வழங்கும் விழா மார்ச் 27ஆம் தேதி ஹாலிவுட்டில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இதனால் ஜெய்பீம் படக்குழுவினர் மட்டுமில்லாமல் ரசிகர்களும் ரிசல்ட்டுக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full