'ஜெய் பீம்' - முழு விமர்சனம் இதோ

By subhashini · 2/11/2021

சூரரை போற்று என்று வெற்றிப் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு Ott ரிலீஸ் மூலம் வந்திருக்கிறது சூர்யாவின் 'ஜெய் பீம்' திரைப்படம். தமிழில் கடந்த 2017 ஆம் ஆண்டு அசோக் செல்வனை வைத்து 'கூட்டத்தில் ஒருவன்' என்ற படத்தை இயக்கிய த.செ. ஞானவேல் இயக்கத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் லிஜோமோல் ஜோஸ், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், இளவரசு என்று பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து இருக்கிறார், எஸ்.ஆர். கதிர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். அமேசான் பிரைம் OTT தளத்தில் வெளியாகியுள்ள இந்த படத்தின் முழு விமர்சனத்தை இங்கே காணலாம்.

கதைக்களம் :

இருளர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ராஜாக்கண்ணு (மணிகண்டன்) செங்கெனி ( லிஜோமொள் ஜோஸ் )ஆகிய இவர்களின் வாழ்க்கை போராட்டமே இந்த ஜெய் பீம் படத்தின் மையக் கதை. இருளர் பழங்குடி சேர்ந்த ராஜாக்கண்ணு செங்கல் சூளையில் வேலை பார்த்து வருகிறார். மேலும், பாம்பு பிடித்து அதனை வனப்பகுதியில் விடும் வேலையையும் செய்து தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். அவரது மனைவி செங்கெனி கணவர் மீதும் தன் குழந்தை மீதும் மிகுந்த பாசமாக இருந்து வருகிறார். மேலும், தன்னுடைய இரண்டாம் குழந்தையும் வயிற்றில் சுமந்து வருகிறார்.

குறைவான வருமானம் நிறைய அன்பு என்று சிறிய குடும்பமாக வாழ்ந்து வரும் ராஜாக்கண்ணு ஓலை குடிசையில் இருக்கும் தங்களுடைய குடும்பத்திற்கு ஒரு கல் வீடு கட்டித் தருவது தன் வாழ்நாள் லட்சியமாக கொண்டிருக்கிறார். இப்படி ஒரு நிலையில் அந்த ஊரின் ஊர் தலைவர் வீட்டில் பாம்பு புகுந்து விடுகிறது. அதை பிடிப்பதற்காக ராஜாக்கண்ணுவை அழைத்துச் செல்கின்றனர். அவரும் அந்த பாம்பை பிடித்து வனப்பகுதியில் விடுகிறார். இப்படி ஒரு நிலையில் ராஜாக்கண்ணு பாம்பு பிடிக்க வந்த அதே இடத்தில் தங்க நகை காணாமல் போய் விட அவர் மீது திருட்டுப் பழி வருகிறது.

இதனால் ராஜாக்கண்ணு அவரது மனைவி சகோதரி மற்றும் அவரின் ஒரு சில நண்பர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் செல்கின்றனர். இருளர் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதாலேயே அவர்களிடம் காவல்துறையின் அடாவடி அதிகாரமும் அத்துமீறல்களும் கை ஓங்கியே இருக்கிறது. மேலும், ராஜாக்கண்ணு போலீசாரின் பயங்கர சித்திரவதைகளுக்கு உள்ளாகிறார். அவர்கள் தாங்கள் நகைகளை எடுக்கவில்லை என்று எவ்வளவோ போலீசாரிடம் மன்றாடுகின்றனர். ஆனாலும், அவர்களை தொடர்ந்து சித்திரவதை செய்கின்றனர்.

இப்படி ஒரு நிலையில் கணவனைப் பிரிந்து கர்ப்பிணி பெண்ணாக தவிக்கும் செங்கேணி தன்னுடைய கணவனை தேடி காவல் நிலையத்திற்கு செல்லும் போது அவரும் தரை குறைவாகவே நடத்துகிறார். மேலும், அவரது கணவர் மற்றும் அவரது நண்பர்கள் அனைவரும் தப்பிச் சென்று விட்டதாக காவல்துறையினர் கூறுகின்றனர். உண்மையில் ராஜாக்கண்ணு தப்பித்து இருந்தாரா ? நகையை திருடியது யார்? போன்ற பல கேள்விகளோடு அவர்களுக்கு நியாயம் பெற்றுத்தரும் சந்துரு என்ற வழக்கறிஞராக சூர்யா வருகிறார். பின்னர் சூர்யா அவர்களுக்கு வாதாடி நியாயத்தைப் பெற்றுக் கொடுத்தார் இல்லையா என்பதே இந்த படத்தின் கதை.

பிளஸ் :

ராசாகண்ணுவாக வரும் மணிகண்டன் சிங்கிளாக வரும் லிஜோமோல் ஆகிய இருவருமே ஒரு பழங்குடியினராக, பேசும் மொழி, உடல் மொழி என்று உண்மையில் அந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்து இருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

மேலும், படத்தில் லீடு கதாபாத்திரத்தில் நடித்த நடிகர்களைத் தவிர பழங்குடியினராக வருபவர்கள் காவல்துறையினராக வருபவர்கள் என்று பெரும்பாலானோர் புதுமுகங்கள்தான். ஆனால். அவர்களை திறம்பட கையாண்டிருக்கிறார் இயக்குனர்.

பொதுவாக மாஸ் ஹீரோ படமென்றால் படத்திற்கு தேவையே இல்லை என்றாலும் ஒரு சண்டைக் காட்சியை வைத்து விடுவார்கள். உதாரணத்திற்கு நேர்கொண்ட பார்வை. ஆனால், நல்லபடியாக இந்த படத்தில் அப்படி எந்த ஒரு மாஸ் காட்சியிலும் வைத்து கதையின் சுவாரஸ்யத்தை குறைக்காமல் இருந்தது நல்லது.

அதிகாரக் கட்டமைப்பு தன்னைச் சார்ந்தவர்களைப் பாதுகாக்க என்னவெல்லாம் செய்யும் என்பதை துலக்கமாகக் காட்டப்பட்டுள்ளது.

படம் 1995 ஆம் ஆண்டு காலகட்டத்தில் நடப்பது போல் காண்பிக்கப்பட்டுள்ளது. அதை தன் ஆர்ட் ஒர்க் மூலம் மிகவும் தத்ரூவமாக திரையில் கொண்டு வந்துள்ளார் கலை இயக்குனர்.

பிரகாஷ்ராஜ், ஜெயப்பிரகாஷ் போன்ற சீனியர் நடிகர்களும் குரு சோம சுந்தரம், எம் எஸ் பாஸ்கர் போன்ற கைதேர்ந்த நடிகர்கள் தங்கள் பக்குவமான நடிப்பில் பட்டையைக் கிளப்புகிறார்கள்

மைனஸ் :

சந்துருவாக வரும் சூர்யாவிற்கு படத்தில் பெரிதாக முக்கியத்துவம் இல்லை இருந்தாலும் கதையை நகர்த்தி செல்லக்கூடிய ஒரு வேடத்தில் சூர்யா நடித்திருக்கிறார். இருப்பினும் ஒரு சில சூர்யாவிடம் இருந்து ஒரு மாஸ் எலமண்டை எதிர்பார்க்கும் ஒரு சில சூர்யா ரசிகர்களுக்கு இது ஒரு ஏமாற்றமாக அமையலாம்.

இந்த படத்தில் ஆசிரியராக வரும் கர்ணன் பட நாயகி ரஜிஷா விஜயனிற்கு ஒரு சில காட்சிகளை தவிர பெரிதாக வாய்ப்பு இல்லை.

அட்வகேட் ஜெனரலாக ராவ் ரமேஷ் மற்றும் அரசு வழக்கறிஞராக குரு சோமசுந்தரம் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் சந்துருவுக்குப் பயங்கரமான எதிர் தரப்பாக காணப்படவில்லை.

படத்தின் கடைசி 20 நிமிடங்கள் விறுவிறுவென படத்தை நகர்த்தி சென்று விடுகின்றனர். கிளைமாக்ஸ் காட்சியை தெளிவாக விளக்கி கொண்டு சென்று இருந்திருக்கலாம். அதற்கு பதில் படத்தில் தேவையில்லாத பல பிரேம்களை தூக்கி இருக்கலாம். குறிப்பாக பிலோமின் ராஜ் செண்டு மல்லி பாடலை மட்டுமாவது கத்திரியிட்டிருக்கலாம். 

இறுதி அலசல் -

சமூகத்தில் பழங்குடி மக்கள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் என்பதை உண்மைக்கு நெருக்கமாக இந்தப்படத்தில் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர். இப்படி ஒரு கதையை படமாக எடுக்க தேர்ந்தெடுத்ததற்கு தயாரிப்பாளர் சூர்யாவை விட நடிகர் சூர்யாவை தான் பாராட்ட வேண்டும். படத்தின் பல காட்சிகள் நமக்கு வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படத்தை தான் நினைவுபடுத்தப்படுகிறது. ஒரு சாதாரண குடிமகன் தான் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவன் என்பதால் படும் வேதனை மற்றும் வலயே இந்த 'ஜெய் பீம்' இன்னும் ஒரு படம் வெற்றி கொடுத்தால் சூர்யாவிற்கு ஹாட் ட்ரிக்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full