தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக நடித்து வரும் இயக்குனர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வரிசையில் இயக்குனராகி நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் சசிகுமார். தற்போது இவர் தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு திகழ்கிறார். இந்நிலையில் இவர் தற்போது நடித்துள்ள படம் “அயோத்தி”. இப்படத்தை டிரைன்ட் ஆர்ட்ஸ் தயாரிக்க இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கியிருக்கிறார். மேலும் சசிகுமார்,பிரியா அஸ்ரானி, யஷ்பால் ஷர்மா, புகழ் என பலர் நடித்திருக்கும் இப்படம் நேற்று வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படி ஒரு நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை தனது முகநூலில் பதிவிட்டுள்ளார் ஜேம்ஸ் வசந்தன். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ”’அயோத்தி’ படம் பார்த்துவிட்டீர்களா, இல்லையா? இல்லையென்றால் பார்த்துவிடுங்கள்.என்னென்னவோ மோசமான படங்களையெல்லாம் பார்த்து நேரத்தை வீணடித்திருக்கிற நாம், ஒரு இரண்டு மணி நேரத்தை உருப்படியாக செலவழிக்க வாய்ப்பு தருகிற படம்.
மலையாளப் படங்களைப் பாருங்கள், எப்படி வித்தியாசமான படங்களை எடுக்கிறார்கள் என்று சொல்லிச் சொல்லி ஆதங்கப்படுவதில்லையா? அதற்கு இணையாக வந்திருப்பதுதான் இந்தப் படம்.ரொம்பப் பெரிதாக எதிர்பார்த்தெல்லாம் செல்லாதீர்கள். எளிமையான ஒரு கதையை தேவையற்ற மசாலாக்கள் எதுவும் இல்லாமல் உணர்வுபூர்வமாகச் சொல்லியிருக்கிற ஒரு நல்ல படம்.
படத்தைப் பற்றி எதுவும் யாரிடமும் கேட்காதீர்கள். போய்ப் பாருங்கள்.உணர்வுகளை அடக்கமுடியாமல் ஓரிரு காட்சிகளில் அழுகை வந்தால் வெட்கப்படாமல் அழுதுவிடுங்கள். அது உங்களுக்குள் இருக்கிற நற்குணத்தின் வெளிப்பாடுதான். நமக்குள் மனிதம் இருக்கிறதா இல்லையா என்பதைச் சோதித்துக் கொள்ள வாய்ப்பு தந்திருக்கிற படம்.கடந்த சில ஆண்டுகளில் சில சுயநலக் கயவர்களால் நாசமாய் போய்க்கொண்டிருக்கிற நல்ல மனித உணர்வுகளை நினைவுபடுத்தி மீண்டும் பழைய நிலைக்கு நம்மை உந்திச் செல்லக்கூடிய ஒரு படைப்பு.
உணர்வு, அழுகை என்றவுடன் ஏதோ சோகப்படம் என்று நினைத்துவிடக் கூடாது. நமக்குள் இருக்கிற நல்லவைகளின் கொந்தளிப்புதான் அது. அவசியம் எல்லா இந்தியனும் பார்க்கவேண்டிய படம் என்று பதிவிட்டுள்ளார். ஜேம்ஸ் வசந்தனின் இந்த பதிவிற்கு முகநூல் வாசி ஒருவர் ‘இந்த பதிவிற்கு எவ்வளோ விளம்பர பணம்’ என்று ஏளனம் செய்து கமன்ட் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த ஜேம்ஸ் வசந்தன் ‘நீ சேர்ந்திருக்கும் இடம் அப்படி. ஒற்றுமையைப் பற்றி பேசினால் உங்களுக்கு எரியுமே’ என்று கூறியுள்ளார்.
சசிகுமார், ஜேம்ஸ் வசந்தனின் மாணவர் என்பதை ஜேம்ஸ் வசந்தனே ஒரு பேட்டியில் பேசி இருந்தார். அதில் கொடைக்கானலில் மியூசிக் டீச்சர் ஆக இருந்தபோது ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவனான சசிகுமார் எனக்கு சினிமாவில் இயக்குனராக வேண்டும் என்பது எனக்கு நீங்க பெரிய மியூசிக் டைரக்டர் ஆகிவிடுவீர்கள் நான் சினிமாவிற்கு இயக்குனராக வரும்போது நீங்கள் என் முதல் படத்திற்கு இசையமைக்க மறுக்கக்கூடாது என்று சொன்னான் ஆனால் அந்தப் பையன் தான் எனக்கு முதல் பட வாய்ப்பு தந்தான் அதுதான் சசிகுமார் என்று கூறி இருந்தார்.