தற்போதுள்ள பல பாடகர்கள் இந்த எழுத்தை தவறாக உச்சரிக்கிறார்கள் - ஜேம்ஸ் வசந்தன் போட்ட பதிவு.

By Dhilip Kumar · 11/3/2024

தற்போது உள்ள பல பாடகர்கள் 'க' என்ற எழுத்தை தவறாக உச்சரித்து வருவதாக ஜேம்ஸ் வசந்தன் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.90ஸ் கிட்ஸ்களுக்கு பரிட்சியமான பல தொகுப்பாளர்களில் ஜேம்ஸ் வசந்தனும் ஒருவர். தெளிவான தமிழ் பேசும் தமிழ் தொகுப்பாளர்களில் இவருக்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு. இவர் தமிழ் திரைப்பட இசை அமைப்பாளர், இயக்குனர், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் என பல முகங்களை கொண்டவர்.மேலும், இவர் சுப்பிரமணியபுரம், பசங்க, நாணையம், ஈசன், நாகராஜசோழன் எம்ஏ எம்எல்ஏ போன்ற பல படங்களுக்கு இசையமைத்து உள்ளார்.

இவர் நிறைய ஆல்பம் பாடல்களைக் கூட இசையமைத்து உள்ளார். அதே போல இவை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஒரு வார்த்தை ஒரு லட்சம்' என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். சமீப காலமாக இவரை எந்த ஒரு டிவி நிகழ்ச்சிகளிலோ மேடை நிகழ்ச்சிகளிலோ காண முடிவதில்லை. சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது அனைவர் பற்றியும் புட்டு புட்டு வைத்தார்.

தமிழோடு விளையாடு :

அதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி பல சமூக பிரச்சனைகள் குறித்து பேசி வருகிறார். இப்படி ஒரு நிலையில் ஜேம்ஸ் வசந்தன் மீண்டும் தொகுப்பாளராக களமிறங்க இருக்கிறார். அதே போல தமிழ் மொழி மீது அதிக பற்றுக்கொண்ட இவர் தமிழ் மொழி குறித்த பல சுவாரசிய தகவல்களை அடிக்கடி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

பாடகர்கள் செய்யும் தவறு :

இப்படி ஒரு நிலையில் தற்போது உள்ள பல பாடகர்கள் 'க' என்ற எழுத்தை தவறாக உச்சரித்து வருவதாக ஜேம்ஸ் வசந்தன் பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் பல பாடகர் தமிழில் பாடும்போது 'க' வரும் இடங்களில் 'ஹ' என உச்சரிப்பது வழக்கம். அது சரியன்று. மொழிச்சிதைவுக்கு காரணமான ஒன்று. மொழி முதலில் ஒலி; பிறகுதான் எழுத்து. அதனால் ஒலிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

சில ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த கிறிஸ்தவ நற்செய்திப் பாடல் ஒன்றை இன்று கேட்டேன். 14 மில்லியன் பார்வையாளர்களைச் சென்றடந்த ஒரு நல்ல பாடல். அருமையாய் பாடக்கூடிய ஜோஸப் ஆல்ட் ரின் பாடிய 'ஒரு மகிமையின் மேகம்'.

அவர் பாடியுள்ள விதம் -

ஒரு மஹிமையின் மேஹம் - இந்த
இடத்தை மூடுதே
ஒரு மஹிமையின் மேஹம் - என்
ஜனத்தை மூடுதே
விலஹாத மேஹம் நீர் - முன்
செல்லும் மேஹம் நீர்

வருங்காலத்தில் சரிசெய்துகொள்ள வேண்டும் :

இதை வாசிக்கிற அவரும், பிற நற்செய்திப் பாடகரும் இதை வருங்காலத்தில் சரிசெய்துகொள்ள வேண்டும். இன்றைய திரைப்படப் பாடல்களில் இந்தக் கோளாறு நிறைய நடக்கிறது. பாடலாசிரியர் இல்லாமல் ஒலிப்பதிவு நடக்கிற சூழலில் இது அதிகம் நிகழ வாய்ப்புண்டு. ஆனால், இன்றைய புதிய தலைமுறைப் பாடாலாசிரியர் எத்தனை பேருக்கு தமிழ் தெரியும்! ரசிகருக்கும் இதைத் தட்டிக்கேட்கும், திருத்தும் உரிமையுண்டு. ராகமும், எழுத்தும் அவர்களுடையது. ஆனால், மொழி நம்முடையது. இது சிதைவதைப் பார்த்துக்கொண்டிருக்கக் கூடாது' என்று குறிப்பிட்டுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full