கிறிஸ்துவத்தில் மதமாற்றம் என்ற ஒரு விஷயமே இல்லை என்று ஜேம்ஸ் வசந்தன் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் ‘மதமாற்றம்’ என்கிற சொல் இன்று பொதுமக்களும் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு விளம்பரப்படுத்தப்பட்டு அதை இயற்றியவர்கள் நினைத்த இலக்கை விட தீவிரமாக எட்டியிருக்கிறது. உண்மைக்குப் புறம்பான இந்தச் சொல்லை உருவாக்கி பரவவிட்ட அந்த இயக்கத்தின் ஆதி மூளைகள் மனித மனத்தின் பலவீனங்களை நன்கு அறிந்தவர்கள். இல்லையென்றால் இந்தியாவே இதற்கு இரையாகியிருக்க முடியுமா? இது ஏன் உண்மையற்றது? இது எப்படி அவர்கள் சுய லாபத்திற்காகத் திரிக்கப்பட்டிருக்கிறது? இது எப்படி கிறிஸ்தவக் கோட்பாட்டின் அடிப்படைக்கே முரணானது என்பதை விளக்க முற்படுகிறேன். பைபில் அடிப்படையில்தான் இந்த விளக்கங்களை முன்வைக்கிறேன்.

ஏனென்றால் அதுதான் கிறிஸ்தவத்தின் அச்சாணியே. அதுவும் புதிய ஏற்பாட்டின் கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு – இயேசு கிறிஸ்துவின் பிறப்புக்குப் பிறகு நடந்தைவைகளின் பதிவுதான் புதிய ஏற்பாடு. இயேசு கிறிஸ்து போதிக்கத் தொடங்கிய நாளிலிருந்து சிலுவையில் இறக்கும் தருணம் வரை அன்பு, அறம், இரக்கம் என்பவைகளையே போதித்தார். ஒரேயொரு கூட்டத்தை அறவே எதிர்த்தார், விமர்சித்தார், வசைபாடினார் என்றால் அது அன்றிருந்த யூத மதத்தலைவர்களைத்தான்.
இந்த மதத்தலைவர்கள் ஒன்றும் கெட்டவர்களெல்லாம் இல்லை.

Advertisement

அன்றிருந்த தேவாலயத்தில் ஒருவேளை கூட தவறாமல், ஒரு சட்டதிட்டம் கூட மீறாமல், உபவாசம், ஓய்வு நாள் ஆசரிப்பு, பலவேளை ஜெபம் என சடங்காச்சாரங்களையும், விதிமுறைகளையும் அப்பழுக்கின்றிக் கடைபிடித்தவர்கள். அப்படியிருந்தும் ஏன் இவர்களை குற்றவாளிகளென்று கண்டனம் செய்தார்? அவர்கள் வெளிப்புறமான எல்லாவற்றையும் செவ்வனே செய்தார்கள், ஆனால் உள்மனதில் உண்மையான இறைநம்பிக்கையோ, தூய்மையோ இல்லாதவர்கள் என்பது அவருக்குத் தெரிந்ததால். சடங்குகளையும், சம்பிரதாயங்களையும் விரும்புகிறவர் அல்ல கர்த்தர். இன்னமும் சொன்னால், அதை வெறுக்கிறவர்.

மனதின் ஆழத்தில் கடவுளை நேசிக்கிற உண்மையும், அர்ப்பணிப்பும் கொண்டவனைத்தான் அவர் ஏற்றுக்கொள்கிறார். இதுதான் பைபிலின் அடிப்படை. கிறிஸ்தவத்தின் ஆணிவேர்.இதற்குப் பல நுற்றுக்கணக்கான பைபில் வசனங்களை மேற்கோள் காட்டலாம். ஒரேயொரு எளிமையான வசனத்தைச் சொல்கிறேன் – “மனுஷனோ முகத்தைப் பார்க்கிறான்; கர்த்தரோ இருதயத்தைப் பார்க்கிறார்” என்பது. இவ்வளவு தெளிவான போதனையைச் சொல்கிற இந்த நம்பிக்கையில் எப்படி ‘மதமாற்றம்’ என்பது சாத்தியமாகும்?

Advertisement

முதலில் ‘கிறிஸ்தவர் என்பவர் யார்’ என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும். அதை விளக்கும்முன் கிறிஸ்தவ சமூகத்தில் உள்ள சில நடைமுறை உண்மைகளைச் சொல்கிறேன், கேளுங்கள். நீங்கள் வியப்படைவீர்கள்.’பெயர்க் கிறிஸ்தவர்கள்’ (Namesake Christians) என்று கிறிஸ்தவர்களே அவர்களுக்குள் ஒரு பிரிவினரை அழைப்பதுண்டு. இது கிண்டல் அல்ல, எச்சரிக்கை. உண்மையான இறைநம்பிக்கையோ, பக்தியோ, கர்த்தர்மேல் பற்றோ இல்லாமல், குடும்பப் பழக்க வழக்கம் காரணமாகவோ, பெரியவர்களின் கண்டிப்பு காரணமாகவோ, பிறரின் திருப்திக்காகவோ, ஒரு சம்பிரதாயமாகவோ ஞாயிறுதோறும் ஆலயத்துக்குச் சென்று வருகிறவர்களையும், அல்லது பண்டிகை நாட்களில் மட்டும் புத்தாடை உடுத்தி ஆலய ஆராதனைக்கு வந்துபோகிறவர்களையும் இந்தப் பிரிவில்தான் வைப்பார்கள்.

Advertisement

அவர்கள் கிறிஸ்தவர்களே அல்ல என்பது பைபில் அடிப்படையில் எல்லாரும் உணர்ந்த ஒன்று. இப்படிப்பட்டவர்கள் இன்று நேற்றல்ல; இயேசு கிறிஸ்துவின் காலத்திலேயே இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களை இயேசுவே ‘வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைகள்’ (‘whitewashed tombs’) என்று சாடினார். இதற்கு உதாரணமாய் சொல்லவேண்டுமென்றால், “நீ கிறிஸ்தவனா?” என்று 2001-க்கு முன் என்னைக் கேட்டிருந்தால், “நான் கிறிஸ்தவக் குடும்பத்தில் பிறந்தேன், கிறிஸ்தவப் பெயரைக் கொண்டிருக்கிறேன், ஞாயிறுதோறும் ஆலயத்திற்குச் செல்கிறேன், பைபில் படிக்கிறேன், ஜெபிக்கிறேன்.. அதனால் கிறிஸ்தவன்தான். இதில் என்ன சந்தேகம்?” என்று சொல்லியிருப்பேன்.இப்பொழுது கேட்டால் “அன்று நான் ‘வெள்ளையடிக்கப்பட்டக் கல்லறை’, இன்று கிறிஸ்தவன்” என்று ஒப்புக்கொள்வேன்.

இப்படிப்பட்டத் தெளிவான, உறுதியான வெளிப்பாடுகளைக் கொண்டிருக்கிற நம்பிக்கை எப்படி அதற்குக் கொஞ்சமும் ஒவ்வாத ‘மதமாற்றம்’ என்கிற கோட்பாட்டைக் கையிலெடுக்கும்? இது கிறிஸ்தவ சமூகத்தின்மேல் வெறுப்பையும், எதிர்ப்பையும் வரவைக்க ஒரு கூட்டத்தினர் சமைத்த கோஷம். ஆனால், ‘இப்படி யாருமே செய்ததில்லையா? செய்வதில்லையா?’ என்று கேட்பவர்களுக்கு..இருக்கலாம்.. ஆனால் அவர்கள் மெய்க் கிறிஸ்தவராய் இருக்கமுடியாது. அப்படிச் செய்கிறவர்கள் தங்கள் சுயலாபத்துக்காக எதையாவது செய்கிறவர்களாகத்தான் இருக்கமுடியும். நிச்சயம் கடவுளுக்கு மகிமையைக் கொண்டுவருகிறவர்கள் இல்லை. எந்த மெய்யானக் கிறிஸ்தவனும் அதை ஒருநாளும் அங்கீகரிக்க மாட்டான். ஏனென்றால், அதனால் ஒரு பயனும் இல்லை. இதெல்லாம் சரி, அப்புறம் எதுக்கு நாடுநாடாக, ஊரூராகச் சென்று பிரச்சாரம் செய்கிறீர்கள்? என்று கேட்பவர்கள் இதன் அடுத்த பகுதியைப் படியுங்கள்.

Advertisement