சாத்தான்குளம் சம்பவம் - ஜெயராஜ் குடும்பத்திடம் உருக்கமாக பேசிய ரஜினி. வைரலாகும் ட்வீட்.
கோவில்பட்டியை அடுத்து உள்ள சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் இருவரின் மரணத்தால் தமிழகமே கொந்தளித்து போய் உள்ளது. சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் (59), அவரது மகன் பென்னிக்ஸ் இம்மானுவேல் (31) பழைய பேருந்து நிலையத்தில் ஏபிஜே செல்போன் கடை ஒன்றை நடத்தி வந்தார்கள். கடந்த 19 ஆம் தேதி ஜெயராஜ் அவர்கள் ஊரடங்கு உத்தரவு அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி கடை திறந்து வைத்ததால் காவல் துறை அதிகாரிகள் கண்டித்தனர். பின் தந்தை,மகன் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து போலீஸ் கடுமையாக தாக்கி உள்ளனர். காவல்துறையினர் தாக்கியதில் இருவருக்குமே பலத்த காயம் ஏற்பட்டு அநியாயமாக உயிர் இழந்து உள்ளார்கள்.
https://twitter.com/karatethiagu/status/1277152867149733894
இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் காட்டுத் தீயை விட வேகமாக கொழுந்து விட்டு எரிகிறது. இந்த கொடூர சம்பவத்திற்கு நியாயம் கேட்டு நாடு முழுவதும் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், நடிகர், நடிகைகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும், காவல்துறையும் தமிழக அரசும் உடல்நலக்குறைவால் தான் இருவரும் மரணம் அடைந்தார்கள் என கூறி வந்தாலும் போலீசார் கண்மூடித்தனமாக தாக்கியதால்தான் இருவரும் உயிரிழந்தனர் என ஊர்மக்களும் உறவினர்களும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
தந்தை மகன் இருவரையும் தாக்கிய காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வியாபாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகிறார்கள். அதோடு இந்த சம்பவம் தமிழகம் தாண்டி சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தன்னுடைய இரங்கலை ரஜினிகாந்த் தெரிவித்ததாக சென்னை முன்னாள் மேயரும், ரஜினிகாந்தின் நண்பருமான கராத்தே தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கிறார்.
https://twitter.com/RIAZtheboss/status/1277161315027398656
அதேபோல் ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளரும் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்பு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் போது சமூகவிரோதிகள் போராட்டத்தில் ஊடுருவியதால் ப்ரச்சனை ஏற்பட்டது என்று ரஜினிகாந்த் கருத்து தெரிவித்து இருந்தார். அது சோசியல் மீடியாவில் விமர்சனங்களுக்குள்ளானது. அப்போது காவல்துறைக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த ரஜினிகாந்த் தற்போது சாத்தான்குளம் சம்பவத்தில் மவுனம் காப்பது ஏன் என்று பலரும் கேள்வி வருகிறார்கள்.