வித்தியாசமான கதைக்களத்தில் வெளிவந்த ஆதியின் கடைசி உலக போர் படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ

By subhashini · 20/9/2024

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக ஹிப் ஹாப் ஆதி திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் கடைசி உலகப் போர். இந்தப் படத்தை ஆதியே இயக்கி நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் இந்த படத்தின் மூலம் இவர் தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்து இருக்கிறார். இந்த படத்தில் ஹிப் ஹாப் ஆதியுடன் சேர்ந்து நடராஜன் நட்டி, ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம் புலி, நாசர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

இந்த படத்தினுடைய கதை 2028 ஆம் ஆண்டில் தொடங்குகிறது. தமிழக முதலமைச்சர் உடைய மச்சான் தான் நட்டி. இவர் தான் பினாமி, மற்ற எல்லாமுமே ஆவார். இவர் தான் தமிழக ஆட்சியையே உருவாக்கினார் என்பது போல தன்னை நினைத்து கொள்கிறார். பின் உலகமே தற்போது இரண்டாகப் பிரிந்து இருக்கிறது. ரிபப்ளிக் நாடுகள், மற்ற நாடுகள் என்று இரண்டாக பிரித்திருக்கிறார்கள். இதில் இந்தியா நடுநிலையாக இருக்கிறது.

இந்த நேரத்தில் தான் முதலமைச்சர் மகள் ஆத்மிகா ஹீரோவை காதலிக்கிறார். இன்னொரு பக்கம் பல லட்சம் கோடிகள் ஒரு ஹார்பர் கண்டெய்னரில் இருக்கிறது. இதை வெளியில் கொண்டுவர நடராஜ் ஒரு மிகப்பெரிய கலவரத்தையே உருவாக்குகிறார். ஆனால், கலவரம் கண்ட்ரோல் மீறி போனதால் ராணுவம் களமிறங்குகிறது. தமிழக முழுவதும் ராணுவத்தின் கண்ட்ரோலில் வருகிறது. அதோடு எதிர்பாராத விதமாக ஆதியை தீவிரவாதி லிஸ்டிலும் சேர்க்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் ரிபப்ளிக் நாடுகள் இந்தியாவை தாக்க நினைக்கிறார்கள். இதனால் மொத்த சென்னையும் அழிகின்றது. அதற்கு பிறகு என்ன நடந்தது? என்பது தான் படத்தின் மீதி கதை. இந்த படம் முழுக்க நடராஜ் தான் சுமந்து சென்றிருக்கிறார் என்றே சொல்லலாம். ஆதி தன்னை ஹீரோ என்பதை போல் காண்பிக்காமல் நட்டியை தான் காண்பித்து இருக்கிறார். மேலும், நட்ராஜ் தான் கதையை சொல்லி படத்தை ஆரம்பிக்கிறார்.

உலகம் எப்படி உருவானது என்று கதையை சொல்லி நம்மை படத்திற்குள் கொண்டு செல்கிறார். ஒரு கிங் மேக்கராக அவர் என்னென்னவெல்லாம் செய்தார் என்பதை காண்பிக்கிறார்கள். இவரை அடுத்து படத்தில் வரும் மற்ற நடிகர்களுமே தங்களுடைய அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டை ரிபப்ளிக் கண்ட்ரோலில் தனிநாடாகி ஊர், மொழி, சாதி என்று பேசிய மக்கள் எல்லாமே சாப்பாடுக்கே வழியில்லாமல் படும் கஷ்டத்தை இயக்குனர் காட்டிய விதம் நன்றாக இருக்கிறது. இது அடுத்த தலைமுறைக்கும் சொல்லும் விதமாக இதை உணர்த்துகிறது.

இந்த தலைமுறைக்கு மட்டுமில்லாமல் எதிர்காலத்தினருக்கு சொல்லும் ஒரு மெசேஜாகவும் இந்த படத்தை ஆதி கொடுத்திருப்பது பாராட்டுக்குரிய விஷயம். அதுவும் இவ்வளவு குறைவான பட்ஜெட்டில் சூப்பரான விஎஃப் எக்ஸ் காட்சிகள் செய்திருப்பது அருமையான ஒன்று. ஆனால், இயக்குனர் கொஞ்சம் அழுத்தமாக சில காட்சிகளை சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும். அதோடு இந்த கதைக்கு எமோஷனல் விஷயம் ரொம்பவே வேண்டியது. ஆனால், நிறைய இடத்தில் மிஸ் ஆகிறது.

இதனால் சொல்லிய பல நல்ல விஷயங்களுமே பார்வையாளர்கள் மத்தியில் செல்ல தவறிவிட்டது. ஒளிப்பதிவு சுமார், பின்னணி இசை நன்றாக இருக்கிறது. இதுவரை தமிழ் சினிமாவில் சொல்லப்படாத ஒரு புதுமையான கதையை இயக்குனர் ஆதி கையாண்டிருப்பது பாராட்டுக்குரிய ஒன்று. மொத்தத்தில் ஒரு சுமாரான படமாக இருக்கிறது.

நிறை:

நடராஜ், ஆதியின் நடிப்பு நன்றாக இருக்கிறது

கிராபிக்ஸ் காட்சிகள் சூப்பர், கதைக்களம் நன்றாக இருக்கிறது.

பின்னணி இசை, ஒளிப்பதிவு சூப்பர்

குறை:

கதைக்களத்தை கொண்டு சென்ற விதத்தில் இயக்குனர் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்

எமோஷனல் காட்சிகள் இருந்திருக்கலாம்

சில காட்சிகளை அழுத்தமாக சொல்லி இருக்கலாம்

ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்

மொத்தத்தில் கடைசி உலகப் போர்- முயற்சி

Tamil Behind Talkies AMP · Quick view
View full