நான் தொடங்கி வைத்ததை சன் பிக்சர்ஸ், ரெட் ஜெயன்ட் செய்கிறார்கள் - காதலில் விழுந்தேன் இயக்குனர்.

By Ajju · 27/9/2022

தமிழ் சினிமாவில் படத்தை வாங்கி ரிலீஸ் செய்யும் வழக்கத்தை நான் தான் தொடங்கி வைத்தேன் என்று காதலில் விழுந்தேன் பட இயக்குனர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இயக்குனர் பி வி பிரசாத் இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்திருந்த படம் காதலில் விழுந்தேன். இந்த படத்தில் நகுல், சுனைனா, சம்பத்ராஜ் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்திற்கு விஜய் ஆண்டனி இசையமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அதிக வசூலையும் பெற்றிருந்தது.

அதோடு இந்த படத்தில் இடம்பெற்ற அட்ரா அட்ரா நாக்க மூக்க என்ற பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது என்று சொல்லலாம். மேலும், இந்த படம் இன்றுடன் வெளியாகி 14 வருடங்கள் நிறைவடைந்து இருக்கிறது. இந்நிலையில் இது குறித்து இயக்குனர் பி வி பிரசாத் அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருந்தது, நான் சாதாரண விவசாய குடும்ப பின்னணியில் இருந்து வந்து சினிமாவிற்குள் நுழைந்தவன்.

இயக்குனர் பி வி பிரசாத் அளித்த பேட்டி:

காதலில் விழுந்தேன் படம் உருவானதற்கு என்னுடைய நண்பர்களின் உதவியால் தான். எல்லோரும் பணம் போட்டு தான் அந்த படத்தை தயாரித்தோம். படம் எடுப்பதில் பல சவால்கள் இருந்தது. அத்தனை சவால்களையும் தூக்கி எறிந்து காதலில் விழுந்தேன் படம் வெற்றி பெற்றது. அதுவும் என்னுடைய முதல் படமே மிகப்பெரிய ஹிட் அடித்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அனைத்து விதத்திலும் கொண்டாடப்பட்டாலும் படத்திற்கு என்று இன்னொரு பெருமையும் உண்டு.

படம் ரிலீஸ் செய்யும் நிறுவனம் குறித்து சொன்னது:

அதாவது, இந்த படத்தை நானே இயக்கி தயாரித்தேன். சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டது. இப்படி படத்தை முடித்து காப்பியாக கொடுத்தால் வாங்கி படத்தை ரிலீஸ் செய்யும் வழக்கம் காதலில் விழுந்தேன் படத்தில் தான் தொடங்கியது. நான் தொடங்கி வைத்து தான் இப்போது சன் பிக்சர்ஸ், ரெட் சயின்ஸ், ஏஜிஎஸ் என சினிமா துறையில் உள்ள எல்லா நிறுவனங்களுமே பின்பற்றுகின்றது. ஆனால், எனக்கு ஒரு பெரிய வருத்தம் என்னவென்றால் இந்த படத்தில் நடித்த நகுலும், சுனைனாவும் பெரிய அளவில் வராதது தான்.

இயக்குனர் பி வி பிரசாத் எடுத்த படங்கள்:

இந்த படத்திற்கு பிறகு இவர்கள் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து இருந்தால் முன்னணிக்கு வந்திருக்கலாம். எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் கதை ரொம்ப முக்கியம். காதலில் விழுந்தேன் படத்திற்கு பிறகு நான் 'எப்படி மனசுக்குள் வந்தாய்' என்ற படத்தை இயக்கியிருந்தேன். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. மூன்றாவதாக 'சகுந்தலாவின் காதலன்' என்ற படத்தை எடுத்தேன். நீண்ட நாட்களாக இந்த படம் வெளியீட்க்கு தயாராக இருந்தது. ஆனால், கொரோனா காரணமாக வெளியிட முடியவில்லை.

இயக்குனர் பி வி பிரசாத் நடிக்கும் படம்:

தற்போது அனைத்து பணிகளையும் முடிந்து தீபாவளி கழித்து படம் வெளியாக இருக்கிறது. இதில் ஹீரோ, இயக்குனர், பாடலாசிரியர், இசை என அனைத்துமே நானே செய்திருக்கிறேன். பசுபதி, கருணாஸ், சுமன், நண்டு ஜெகன், மொட்டை ராஜேந்திரன், பானு என பல பேர் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். மேலும், 2025 ஆம் ஆண்டுக்குள் நல்ல கதைக்குள் நடித்து பேசும் படியாக வளர்ந்து நிற்பேன். கண்டிப்பாக சினிமாவில் எனக்கு வெற்றி கிடைக்கும். அந்த வெற்றி என்னுடைய எல்லா வலிகளையும் மறக்கடிக்கும் என்று உற்சாகமாக இயக்குனர் பி வி பிரசாத் கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full