அவர் எனக்கு மகன் போன்றவர், நான் அவருக்கு சித்தப்பா - சிவராஜ்குமாருக்கு வாழ்த்து சொன்ன கமல்
கடந்த சில வாரங்களாக கமலின் கன்னட மொழி சர்ச்சை தான் பூகம்பமாக வெடித்து கொண்டு இருக்கிறது. கமல் நடித்து இருக்கும் படம் தக் லைப். இந்த படத்தை மணிரத்தினம் இயக்கி இருக்கிறார். இந்த தக் படத்தில் கமல் உடன் சிம்பு, த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன் உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் ஜூன் 5ஆம் தேதி வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் இந்த படத்தினுடைய பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா சென்னை நடந்து இருந்தது. இந்த விழாவிற்கு தக் லைப் பட குழுவினருடன் சிறப்பு விருந்தினராக கன்னட நடிகர் சிவராஜ் குமாரும் வருகை தந்திருந்தார்.
அப்போது விழாவில் சிவராஜ் குமாரை பார்த்து கமல், உயிரே உறவே தமிழே. சிவராஜ்குமார் மற்றொரு மாநிலத்தில் வாழும் என்னுடைய குடும்பம். உங்களுடைய பாசை தமிழில் இருந்து வந்தது. எனவே முதல் வரி உங்களையும் சேர்த்தது என்று கூறி இருந்தார். தமிழில் இருந்து தான் கன்னடம் வந்தது என்று கமல் சொன்னது கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் பூகம்பமாக வெடித்திருக்கிறது. கன்னட ரக்ஷனா வேதிகே உள்ளிட்ட பல கன்னட இயக்கங்கள் கமலின் பேச்சுக்கு எதிர்ப்புகளை தெரிவித்து எச்சரிக்கை விட்டு இருந்தார்கள்.
அதுமட்டுமில்லாமல் சில கன்னட அமைப்புகள் தக் லைப் படத்தினுடைய போஸ்டர்களையும் கிழித்து இருந்திருந்தார்கள்.
கமலுக்கு எதிராக கன்னட அமைப்புகள்:
இதை அடுத்து கமலஹாசன் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்கு கமலஹாசன் தரப்பில் விளக்கம் அல்லது மன்னிப்பு கேட்காவிட்டாலும் கர்நாடகாவில் அவருடைய படங்களை ஓட விட மாட்டோம் என்று சில அமைப்புகள் அழைப்புகள் விடுத்திருந்தது. இதை அடுத்து கமலின் தக் லைப் படம் வெளியிட மாட்டோம் என்று கர்நாடக வர்த்தக சபை கூட்டத்தில் சொன்னார்கள். பின் கமல் அவர்கள் தன்னுடைய ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில் அவர், என்னுடைய தக் லைப் படத்தை வெளியிட கர்நாடக அமைப்பு மற்றும் திரைப்பட வர்த்தக சபை தடை விதிக்கக் கூடாது. பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
கமல் வழக்கு:
இதை அடுத்து கடந்த வாரம் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகா நீதிபதி, மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சனை முடிந்திருக்கும். மக்களின் உணர்வுகளை புண்படுத்தக் கூடாது என்று கூறியிருக்கிறார். இதற்கிடையில் கமலஹாசன், கர்நாடக திரைப்பட வர்த்தக சபையின் தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தார். அதில், என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது. கன்னட மொழியை சிறுமைப்படுத்தும் எண்ணம் எனக்கு கிடையாது என்று கூறியிருந்தார். இதை அடுத்து இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, நீங்கள் அனுப்பிய கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தையே இல்லை. மன்னிப்பு கேட்பதில் உங்களுக்கு அப்படி என்ன ஈகோ? என்று கேட்டிருக்கிறார்கள். அதற்கு கமல், என்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.
நீதிமன்றம் உத்தரவு:
தவறு செய்தால் தான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார். அது மட்டும் இல்லாமல் தக் லைப் படம் கர்நாடகாவில் வெளியாகுவதை ஒத்தி வைப்பதாக கமல் சார்பாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்கள். இதனால் நீதிபதிகள் இந்த வழக்கை ஜூன் 10ஆம் தேதி ஒத்து வைத்திருந்தார்கள்.
நேற்று இந்த வழக்கை வரும் 13ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பதாக உத்தரவிட்டிருந்தார்கள். இதற்கிடையில் நடிகர் சிவராஜ்குமார், என் மீது இருந்த அன்பினால் தான் கமல் அப்படி பேசி இருந்தார். கமலை விமர்சிப்பவர்கள் கன்னட மொழிக்காக என்ன செய்தார்கள்? இந்த பிரச்சனையில் நான் கமலிடம் சென்று மன்னிப்பு சொல்ல முடியாது என்றெல்லாம் கமலஹாசனுக்கு ஆதரவாக பேசி இருந்தார்.
கமல் வாழ்த்து:
இப்படி இருக்கும் நிலையில் நடிகர் சிவராஜ்குமார் அவர்கள் சினிமாவில் நுழைந்து 40 ஆண்டுகள் ஆகிறது. இதற்கு வாழ்த்து கூறி கமலஹாசன் காணொளி ஒன்று வெளியிட்டு இருக்கிறார். அதில், சிவராஜ்குமார் எனக்கு மகனைப் போன்றவர். நான் அவருக்கு சித்தப்பா. ராஜ்குமார் அண்ணா எனக்கு காட்டிய அன்பு எதிர்பாராத அன்பு. சிவான்னாவை பொறுத்தவரை இந்த 40 வருஷம் எப்படி ஓடியது என்று எனக்கே தெரியவில்லை. இன்று மாபெரும் நட்சத்திரமாக உயர்ந்து சாதித்துக் கொண்டிருக்கிற விஷயம் இனியும் சாதிக்க கூடிய விஷயம். எனக்கு ரொம்ப சந்தோஷத்தை கொடுக்கிறது என்று கூறியிருக்கிறார். சர்ச்சைகளுக்கு நடுவில் கமலஹாசனின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.