சோ சொன்ன வார்த்தை,கலைமாமணி விருதை வாங்க மறுத்த கண்ணதாசன் - காரணம் என்ன?

By Rajkumar · 27/2/2024

கலைமாமணி விருதை கவிஞர் கண்ணதாசன் வாங்க மறுத்து இருக்கும் காரணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் என்றென்றும் மறக்க முடியாத கவிஞர்களில் ஒருவராக கண்ணதாசன் இருக்கிறார். காலம் கடந்தாலும் இவருடைய பாடல்கள் என்றும் மக்கள் மத்தியில் ஒலிக்கப்பட்டு தான் வருகிறது. சோகம், சந்தோஷம், வெற்றி, தோல்வி என எதுவாக இருந்தாலும் கவிஞர் கண்ணதாசனின் பாடல்கள் தான் கேட்கப்படுகிறது.

இவருடைய பாடல் வரிகள் அழியாத ரகசியம். இவர் கவிஞர் மட்டுமில்லாமல் பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்பட தயாரிப்பாளர் போன்ற பன்முகங்களைக் கொண்டவர். நடிப்பின் மீது கொண்ட காதலால் இவர் தன்னுடைய 16 வயதிலேயே சென்னைக்கு ஓடி வந்து விட்டார். இவர் நடிக்கத்தான் ஆசைப்பட்டார். ஆனால், முதலில் இவருக்கு படங்களில் எழுத வாய்ப்பு கிடைத்தது. இவர் முதன்முதலாக எழுதியது கன்னியின் காதலி படத்தில் இடம்பெற்ற கலங்காத திருமணமே என்ற பாடல் தான்.

அதனை தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படத்திற்கு பாடல்கள் எழுதியிருக்கிறார். கிட்டத்தட்ட 4500க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதி இருக்கிறார். பின் இவர் பல படங்களில் நடித்தும் இருக்கிறார். அதன் பின் இவர் ஆறு படங்களை தயாரித்தும் இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கண்ணதாசன் ஏராளமான நூல்களையும் எழுதி இருக்கிறார். மேலும், இவர் பல படங்களுக்கு கதை மற்றும் வசனமும் எழுதி இருக்கிறார். இதனை அடுத்து ஏழு பத்திரிகைகளில் ஆசிரியர், எழுத்தாளர் போன்ற முக்கிய பொறுப்புகளையும் வகித்திருக்கிறார்.

அதோடு உலகிலேயே தனக்குத்தானே இரங்கற்பா எழுதிக் கொண்ட ஒரே நபர் கண்ணதாசன் தான். தான் இறப்பதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பு இவர் அதை எழுதி விட்டார். இவர் கடைசியாக எழுதிய பாடல் மூன்றாம் பிறை படத்தில் வெளிவந்த கண்ணே கலைமானே என்ற பாடல் தான். கண்ணதாசன் ஒரு பாடல் உடைய காட்சி குறித்து சொன்னாலே போதும் குறைந்தபட்சம் 30 நிமிடங்களில் அந்த பாடல்களை எழுதிக் கொடுத்து விடுவாராம். அந்த அளவிற்கு திறமை கொண்டவர். இப்படிப்பட்ட திறமை வாய்ந்த கவிஞர் கண்ணதாசன் காலகட்டத்தில் ஒரு வருடத்தில் வெளியாகும் அதிக படங்களுக்கு இவர் தான் பாடல் எழுதுவாராம்.

பெரும்பாலும் இவர் எழுதிய பாடல்கள் எல்லாமே நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. மேலும், இவர் திறமைக்காக பல விருதுகளையும் வாங்கி இருக்கிறார். இந்த நிலையில் கவிஞர் கண்ணதாசன் தனக்கு கொடுத்த விருதை வேணாம் என்று நிராகரித்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, 77 லிருந்து 78 காலகட்டத்தில் கண்ணதாசனுக்கு கலைமாமணி விருந்து வழங்குவதாக அறிவித்திருந்தார்கள். அப்போது அவருடன் இருந்த நடிகர் சோவிடம் தொடர்பு கொண்டு கண்ணதாசன், இந்த மாதிரி எனக்கு கலைமாமணி விருது அறிவித்திருக்கிறார்கள். இதனை வாங்குவதா? வேண்டாமா? என்று கேட்டு இருக்கிறார்.

அதற்கு சோ, இந்த விருதை கொடுக்க ஆரம்பித்து 15 வருடங்கள் ஆகிவிட்டது. கவிஞரே, இந்த 15 வருடத்தில் முதல் இரண்டு வருடத்திலேயே உங்களுக்கு அவர்கள் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், கொடுக்கவில்லை. கோட்டா சிஸ்டத்தில் வேண்டப்பட்டவர்களுக்கு கொடுத்துவிட்டு இப்போது உங்களுக்கு கொடுக்க வந்திருக்கிறார்கள். இதை வாங்கினால் உங்களுக்கு ஒன்னும் மரியாதை கெடாது. அந்த விருதுக்கு மரியாதை ஆகிவிடும். அதை வாங்க வேண்டாம் என்று கூறினார். அதன் பின் கண்ணதாசன் கலைமாமணி விருதை வாங்கவே இல்லை. இந்த தகவலை சோ ஒரு பேட்டியில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full