இந்த மூனு விஷயம் மட்டும் பண்ணிடாதான்னு சொன்னார் கண்ணதாசன் - வாலியே சொன்ன அறிய வீடியோ.

By Rajkumar · 6/6/2022

தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற கவிஞரும், பாடலாசிரியருமாக இருந்தவர் வாலி. இவருடைய உண்மையான பெயர் ரங்கராஜன். இவர் திருச்சி மாவட்டம் திருப்பராய்த்துறையில் பிறந்து திருவரங்கத்தில் வளர்ந்தவர். பள்ளி தோழன் பாபு என்பவர் தான் இவருக்கு வாலி என்ற பெயரை சூட்டினார். சிறுவயதிலிருந்தே இவருக்கு ஓவியம், கவிதை மீது அதிக ஆர்வம் கொண்டவர். பின் தன்னுடைய பள்ளிப்படிப்பை முடித்தவுடன் இவர் ஓவியக் கல்லூரியில் சேர்ந்து ஓவியக்கலை பயின்றார். அதற்குப் பின்பு வாலி தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து நேதாஜி எனும் கையெழுத்து பத்திரிகையை தொடங்கியிருந்தார்.

அதன் முதல் பிரதியை வெளியிட்டவர் புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கி. பின்னர் இவருக்கு திருச்சி வானொலிக்கு ‘கதைகள்’, ‘நாடகங்கள்’ எழுதிக்கொடுக்கும் வாய்ப்பு கிடைத்து இருந்தது. மேலும், பத்திரிக்கை பணி, கவிதைகள் எழுதுவது, ஓவியங்கள் வரைவது, வானொலிக்கு கதைகள் மற்றும் நாடகங்கள் எழுதுவது என்று இவருடைய வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. அதன் பிறகு தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்று விளங்கிய ‘டி. எம். சௌந்தரராஜன்’ அவர்களால் சினிமாவிற்கு பாட்டெழுத சென்னைக்கு அழைத்து வரப்பட்டு இருந்தார் வாலி. 1958 ஆம் ஆண்டு அழகர் மலைக் கள்ளன் என்ற திரைப்படத்தில் தன்னுடைய முதல் பாடலை எழுதி இருந்தார் வாலி.

வாலியின் திரைப்பயணம்:

இத்திரைபடத்தில் வாலியின் முதல் பாடலை பி. சுசிலா அவர்கள் பாடியிருந்தார். பின்னர் தொடர்ந்து பல திரைப்படங்களில் பலவிதமான பாடல்களை வாலி எழுதி இருந்தார். இதுவரை வாலி 15000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார். வாலி அவர்கள் பக்தி, நட்பு, காதல், தத்துவம், என அனைத்து விதப் பரிமாணங்களிலும் பாடல்களை எழுதி எல்லா தலைமுறையினருக்கும் ஏற்ற பாடலாசிரியராக புகழ்பெற்றவர். அதோடு இவர் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

வாலி பற்றிய தகவல்:

எழுத்துலகில் ‘மார்கண்டேயக் கவிஞர்’ என அனைவராலும் புகழப்பட்டவர். தன்னுடைய பாடல் வரிகளால் கவிஞர்களை மட்டுமல்லாமல் பாமர மக்களையும் இவர் தலையசைக்க வைத்திருக்கிறார் என்றே சொல்லவேண்டும். இன்னும் சொல்லப்போனால் இன்றைய திரைப்படப் பாடலாசிரியர்கள் இவர் நடையை பின்பற்றியே பாட்டெழுதி கொண்டிருக்கின்றனர். சிறுகதை, கவிதை, உரைநடை என இருபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களையும் இவர் எழுதி இருக்கிறார் ‘கவிப்பேரரசு கண்ணதாசனுக்கு’ பிறகு திரையுலகம் பரிணாம வளர்ச்சியைப் பெற்றது இவரின் காலங்களில் தான் என்பதை யாராலும் மறுக்கவோ, மறைக்கவோ இயலாது.

வாலி அளித்த பேட்டி:

பின் இவர் 2013ஆம் ஆண்டு மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில் கண்ணதாசன் குறித்து வாலி அளித்து இருந்த பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதில் வாலி, கண்ணதாசன் எனக்கு மூன்று கட்டளைகள் போட்டார். என்ன என்று சொன்னார், ஒன்றை விட்டு ஒன்றை நாடாதே. சொந்தப்படம் எடுக்காதே, எந்த காலத்திலும் எந்த கட்சியிலும் சேராதே என்று சொனார். இந்த மூன்று விஷயத்தை கண்ணதாசன் செய்யாமல் இருந்தால் இன்னும் ஒரு தலைமுறை வாழ்ந்திருப்பார். என்னை சினிமா உலகில் அறிமுகப் படுத்தியவர் தான் கண்ணதாசனையும் அறிமுகப்படுத்தி இருந்தார்.

கண்ணதாசன் குறித்து வாலி சொன்னது:

ஆரம்பத்தில் கண்ணதாசன் டயலாக் எழுதுவதற்காக தான் திரையுலகில் அறிமுகமாகி இருந்தார். அவரை பாட்டு எழுதச் சொன்னார்கள். ஆனால், அவருக்கு பாட்டு எழுத எல்லாம் ஆரம்பத்தில் ஆர்வமில்லை. அதற்குப்பின் அவர் பாட்டு எழுதி இருந்தார். இருந்தாலும் அவருக்கு பாடல் எழுதுவதில் ஆர்வம் இல்லாமல் தான் இருந்தார். பின் அவர் பாடல் எழுத எழுத அவருக்கு பாடலின் மீது ஆசை வந்துவிட்டது. அவருக்குள் ஒரு பிரம்மாண்டமான கவிஞர் விழித்தெழுந்து உலகிற்கு காண்பித்தார். நானும் சினிமா உலகில் டயலாக் எழுத தான் வந்தேன். அதற்குப் பிறகுதான் பாடல் எழுத ஆரம்பித்தேன் என்று பல சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full