சார்பட்டா சந்தோஷ்,வரலக்ஷ்மி நடித்துள்ள 'கொன்றால் பாவம்' எப்படி - முழு விமர்சனம் இதோ.

By Arun · 10/3/2023

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் வரலட்சுமி சரத்குமார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் கொன்றால் பாவம். இந்த படத்தை தயாள் பத்மநாபன் இயக்கி இருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் சந்தோஷ் பிரதாப், சார்லி, ஈஸ்வரி ராவ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர்.

இந்த படம் ஏற்கனவே கன்னட மொழியில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றி கொடுத்திருந்தது. அது மட்டும் இல்லாமல் அந்த மாநிலத்தின் தேசிய விருதையும் இந்த படம் வாங்கி இருக்கிறது. தெலுங்கிலும் இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அதனை தொடர்ந்து தற்போது தமிழில் கொன்றால் பாவம் என்ற தலைப்பில் வெளியாகியிருக்கிறது. அனைத்து மொழிகளிலும் தயாள் பத்மநாபனே இந்த படத்தை இயக்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த படம் மார்ச் 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் செய்தியாளர்களுக்கான சிறப்பு காட்சி சற்றுமுன் சென்னையில் திரையிடப்பட்டிருந்தது. தற்போது இந்த படத்தின் ரிவ்யூ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, படத்தில் மல்லிகாவின் அப்பாவுக்கு உடல்நிலை குறைவு ஏற்படுகிறது. நன்றாக வாழ்ந்த குடும்பம் கடன் கொடுமையில் சிக்கிக் கொள்கிறார்கள். இதனால் குடும்பம் வறுமையின் பிடியில் வாழ்ந்து வருகிறது.

படத்தின் கதை:

வறுமையின் காரணமாக மல்லிகாவிற்கு திருமணம் நடக்காமல் இருக்கிறது. இந்த சமயத்தில்தான் வழிப்போக்கனாக அர்ஜுன் இந்த குடும்பத்தில் சேர்கிறார். அவரிடம் இருக்கும் பணம், நகைகளை பார்த்தவுடன் அந்த குடும்பம் பேராசை படுகிறது. பின் அந்த குடும்பம் பணத்திற்கு ஆசைப்பட்டு அவனை கொள்ள நினைக்கிறது. இறுதியில் அந்த குடும்பம் அர்ஜுனை கொன்றார்களா? பணம், நகைகள் என்னானது? இறுதியில் அந்த குடும்பத்தின் நிலை என்ன? என்பது தான் படத்தின் மீதி.

படத்தின் கதாபாத்திரங்கள் குறித்த தகவல்:

படத்தில் மல்லிகா என்ற கதாபாத்திரத்தில் வரலட்சுமி நடித்து இருக்கிறார். வழக்கம் போல் இவர் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் அசத்தி இருக்கிறார் என்றே சொல்லலாம். வரலட்சுமி அப்பாவாக சார்லியும், அம்மாவாக ஈஸ்வரியும் நடித்திருக்கிறார்கள். திரில்லர் பாணியில் கதையை இயக்குனர் கொண்டு சென்றிருக்கிறார். ஆனால், அதில் இன்னும் சுவாரசியத்தை கொடுத்திருந்தால் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கும்.
பின்னணி இசை ஓகே.

பெரிதாக பாடல் காட்சிகள் எதுவும் இல்லை. முழு படமே ஒரு வீட்டைச் சுற்றியே நகர்கிறது. ஆனால், நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள். ஆசை, பேராசை அதிகமானால் ஒரு மனிதன் என்னெல்லாம் செய்கிறான் என்பதை படத்தின் மூலம் இயக்குனர் உணர்த்தி இருக்கிறார். கிளைமேக்ஸ் காட்சி சிறப்பு. மொத்தத்தில் 'கொன்றால் பாவம் தின்றால் போகும்' என்ற பழமொழிக்கு ஏற்ப கதையின் கரு இருக்கிறது. கொன்றார்களா? தின்றார்களா? என்பதே சஸ்பென்ஸ் ஆக காட்டியிருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full