எப்படி இருக்கிறது - 'கூர்மைன்' முழு விமர்சனம் இதோ.

By Ajju · 11/2/2022

இயக்குனர் பிரையன் பி.ஜார்ஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் கூர்மன். இந்த படத்தில் ராஜாஜி, ஜனனி ஐயர், பால சரவணன், ஆடுகளம் நரேன், சூப்பர் குட் சுப்ரமணி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சக்தி அரவிந்த் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் மற்றும் டோனி பிரிட்டோ இசையமைத்து உள்ளார். சைக்கலாஜிக்கல் திரில்லர் படமாக கூர்மன் உருவாகி இருக்கிறது. மேலும், மனதில் உள்ளதை கண்டுபிடிக்கும் ஒரு பாத்திரத்தை முதன்மை கதாபாத்திரமாக கொண்டு வித்தியாசமான முறையில் திரைக்கதையை உருவாக்கி உள்ளார் இயக்குனர். இன்று வெளியாகியுள்ள கூர்மன் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

போலீஸ் பதவியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுகிறார் தனா. பின் இவர் தனது பண்ணை வீட்டில் வசித்து வருகிறார். அவர் மனதில் நினைப்பதை கண்டறிந்து குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் திறமை வாய்ந்தவராக இருக்கிறார். அதன் மூலம் பல உண்மைகள் வெளியில் வருகிறது. ஒருமுறை மாணவியை கற்பழித்து ஆசிட் வீசி கொன்றவனை தனாவின் கட்டுப்பாட்டில் நரேன் விட்டுச் செல்கிறார். அந்த சமயம் பார்த்து அவனும் தப்பித்து செல்கிறான். இந்த விஷயத்தில் உண்மையான குற்றவாளி பிரபல வக்கீல் மகன் தான் என்பதை தனா கண்டுபிடிக்கிறார். பின் தனா அவனை கடத்தி அவன் மூலம் உண்மையை வாக்குமூலமாக வீடியோ பதிவு செய்து கோர்ட்டில் ஒப்படைக்கிறார்.

இதனால் ஆத்திரம் அடைந்த வக்கீல் அடியாட்கள் வைத்து தனாவை கொலை முயற்சி செய்கிறார். இதனால் தனா உயிர் தப்பினாரா? உண்மையான குற்றவாளிக்கு தண்டனை கிடைத்ததா? மீண்டும் தனா போலீஸ் அதிகாரியானாரா? என்பது தான் படத்தின் மீதி கதை. இந்த படம் முழுக்க முழுக்க மைண்ட் ரீடிங் என்ற வித்தியாசமான கான்செப்டில் படம் நகர்வதால் சஸ்பென்ஸ்க்கு பஞ்சமில்லை என்று சொல்லலாம். படத்தில் தனா கதாபாத்திரத்தில் ராஜாஜி நடித்திருக்கிறார்.

இவர் எதிரில் நிற்பவர் மனதில் என்ன நினைக்கிறார் என்பதை கண்டறியும் சக்தி கொண்டவராக இருக்கிறார். மேலும், படத்தில் ராஜாஜி காதல் காட்சி, ஆக்சன், திரில்லர், காதல் சோகம் என அனைத்து காட்சிகளிலும் அற்புதமாக நடித்திருக்கிறார். படத்தில் கதாநாயகியாக ஜனனி அயர் நடித்திருக்கிறார். ஜனனி அயர் மீது ராஜாஜி காதல் கொள்கிறார். அவருடன் வாழும் எதிர்கால வாழ்க்கையை எண்ணி திட்டங்கள் போட்டும் ராஜாஜி வைத்திருக்கிறார். அந்த திட்டம் எல்லாம் ஜனனியின் தாய் மாமனால் சிதைந்து மண்ணோடு மண்ணாக போகிறது.

பின் படத்தில் தன்னை தாக்க வரும் எதிரிகளிடமிருந்து ராஜாதி மோதும் சண்டைக் காட்சிகள் எல்லாம் பரபரப்பாக இருக்கிறது. காதலில் தோற்று இருக்கும் ராஜாஜிக்கு வாழ்க்கை கானல் நீர் போன்றது விரக்தியில் இருக்கிறது. இந்த சமயத்தில் கொலையாளிகள், தேடல் என்று செல்வது அவருடைய வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைகிறது. படத்தில் ஜனனி அயர் குறிப்பிட்ட காட்சிகளே வந்தாலும் தன்னுடைய அழகான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரின் கதாபாத்திரம் அழமாகவும் இருக்கிறது.

இவர்களுடன் பால சரவணன் நடிப்பு நன்றாக உள்ளது. ஆடுகளம் நரேன் வழக்கம் போல் போலீஸ் அதிகாரியாக வந்தாலும் மிரட்டியிருக்கிறார். ஒரு வித்தியாசமான கதையை சைக்கலாஜிக்கல் திரில்லர் திருப்பங்களுடன் இயக்குனர் கொண்டு சென்ற விதம் அருமையாக இருக்கிறது. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் சக்தி அரவிந்தும் பக்கபலமாக இருந்திருக்கிறார். அதுமட்டுமில்லாமல் படத்தில் இசையும் கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. ஒரு புதுவிதமான முறையில் கதையை கொண்டு சென்றிருப்பது ரசிகர்கள் மத்தியில் ரசிக்க வைத்திருக்கிறது.

நிறைகள் :

படத்தில் நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

கதையும், களமும் சூப்பர்.

படத்திற்கு ஒளிப்பதிவும், இசையும் பக்கபலமாக அமைந்திருக்கிறது.

மைண்ட் ரீடிங் என்ற கான்செப்டை வித்தியாசமாக கையாண்டிருக்கிறார் இயக்குனர்.

குறைகள்:

பலரும் புதுமுகமாக தெரிகிறது.

இது கொஞ்சம் காமெடி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

காதல் காட்சிகளை இன்னும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்.

இறுதி அலசல்:

ஆக்சன், திரில்லர் பாணியில் படங்களை எதிர் பார்க்கும் ரசிகர்களுக்கு இது ஒரு நல்ல விருந்து என்று சொல்லலாம். காசு கொடுத்து படம் பார்க்க சென்ற ரசிகர்களுக்கு கூர்மன் ஏமாற்றும் கிடையாது. ஒரு முறை படம் பார்க்கலாம்.

மொத்தத்தில் கூர்மன் - திரில்லர் பிரியர்களுக்கு விருந்து.

Tamil Behind Talkies AMP · Quick view
View full