ஷங்கர் சார் ஆபிசில் சட்டையை கழட்ட சொல்லி அசிங்கப்பட்டு வந்தேன் - எமோஷனலாக கோவை அனுராதா சொன்னது

By subhashini · 4/12/2024

இயக்குனர் சங்கர் குறித்து நடிகர் கோவை அனுராதா கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலும் ஜொலித்தவர் கோவை அனுராதா. இவர் பல சிறந்த நகைச்சுவை நாடகங்களை எழுதி நடித்திருக்கிறார். தொலைக்காட்சிகளிலும் இவர் நடித்த நாடகங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் இவர் பல தொடர்களை இயக்கியும் இருக்கிறார். மேலும், இவர் தமிழகத்தின் தலைசிறந்த நாடக ஆசிரியர், நகைச்சுவை நடிகர் என பட்டம் பெற்றவர்.

இவருடைய நடிப்பு திறமைக்கு பல விருதுகளையும், பரிசுகளையும் பெற்று இருக்கிறார். இவர் பல நூல்களையும் எழுதி இருக்கிறார். இப்படி புகழ்பெற்ற கலைமாமணி கோவை அனுராதா அவர்கள் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் அவர், நான் பத்து வயதில் இருந்தே நடிக்கிறேன். என்னை சுற்றி எப்போதும் பசங்க இருந்து கொண்டே இருப்பார்கள். நான் எந்த படத்துக்கு போனாலும் அந்த படத்தை அப்படியே நடித்துக் காட்டுவேன். எம்ஜிஆர், சிவாஜி இரண்டு பேருமே என்னுடைய உயிர் மாதிரி. எம்ஜிஆர் தன்னுடைய படங்களில் நல்ல விஷயங்களை சமூகத்திற்கு சொல்லி இருக்கிறார்.

கோவை அனுராதா பேட்டி:

அதுமட்டுமில்லாமல் அவர்களுக்கு பின்னாடி சினிமாவே இல்லை என்றெல்லாம் நினைத்திருக்கிறேன். எம்ஜிஆர் சாரை நேரில் சந்தித்து இருக்கிறேன். அவரை நேரில் பார்த்த சமயம் கடவுளை நேரில் பார்த்த அளவுக்கு சந்தோசமாக இருந்தேன். அதேபோல் சிவாஜி சார் மாதிரி யாராலும் நடிக்கவே முடியாது. அவருக்கு பிறகு யாராவது அப்படி நடிப்புத் திறன் உள்ளவர்கள் வந்தார்களா? என்று சொன்னால் எனக்கு தெரியவில்லை. நான் பாலச்சந்தர் சாருடைய நாடகம் பார்த்து தான் நாடகம் போட ஆசை வந்தது. பின் 1965ல் எழுத்தாளர் ஏகாம்பரம் என்ற ஒரு நாடகம் போட்டேன்.

நாடக அனுபவம்:

அந்த நாடகத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதற்கு பிறகு தான் கோயம்புத்தூரில் நண்பர்கள் கலை பண்பாட்டு குழு என்று ஆரம்பித்தேன். கோயம்புத்தூரில் இருந்து சென்னை வந்து நாடகம் போட்ட ட்ரூப்பில் நாங்களும் உண்டு. எங்கள் நாடக குழு பற்றி எல்லா பத்திரிகைகளிலும் எழுதுவார்கள். என் தம்பிங்க நடிக்க ஆர்வமாக இருந்தார்கள். நான் எழுத ஆர்வமாக இருந்தேன். அப்படியே எதார்த்தமாக எங்களுடைய ட்ரூப் அமைந்துவிட்டது. என்னோட பலமே என்னுடைய பாடி லாங்குவேஜ் தான். என்னோட எல்லா நாடகத்திலும் கருத்து நிச்சயமாக இருக்கும். அதேபோல் நாடகங்கள் மூலம் தான் சினிமா வாய்ப்பு வந்தது.

https://www.youtube.com/watch?v=WDp0tct4E1g

ஷங்கர் பட வாய்ப்பு:

ஒரு முறை சங்கர் சார் படத்தில் நடிக்க வாய்ப்பு கேட்டிருந்தார்கள். நண்பன் படத்தில் ஜீவாவின் அப்பா நோயாளியாக இருப்பார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க தான் என்னை அணுகி இருந்தார்கள். ஆனால், அது எனக்கு தெரியாது. என்னிடம் சங்கர் சார் உடைய உதவி இயக்குனர்கள், நீங்கள்தான் அந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று சங்கர் சார் சொன்னதாக வந்து கூறினார்கள். நானும் சங்கர் சாருக்காக நடிக்கப் போனேன். அப்போது என்னை அவர்கள் சட்டையை கழட்டு, பேன்டை கழட்டு என்று நிற்க சொன்னார்கள். நான் ஆரம்பத்தில் தயங்கினேன். பின் நடிப்புக்காக அவர்கள் சொன்னதை செய்தேன்.

வாய்ப்பு நிராகரித்த காரணம்:

போட்டோ எல்லாம் எடுத்தார்கள். அதற்கு பிறகு அந்த படத்தில் வேறு ஒருவரை நடிக்க வைத்தார்கள். எனக்கு பயங்கர ஷாக் ஆனது. இதைப்பற்றி கேட்டதற்கு டெஸ்ட் லுக் எடுத்தோம். ஆனால், நீங்கள் செட்டாகவில்லை என்று சொன்னார்கள். அப்போது தான் எனக்கு நண்பன் படத்தில் நோயாளியாக நடிக்க கூப்பிட்டது தெரிந்தது. எனக்கு பயங்கர கோபம் வந்தது. சங்கர் சார் தான் என்னை நடிக்க சொன்னாரா? நீங்கள் அவர் சொல்லி செய்தீர்களா? அறிவில்லையா? என்று அந்த உதவி இயக்குனர்களை திட்டி விட்டு வந்தேன் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full