கேப்டன் நினைவிடத்தில் உதவி கேட்ட தாய், கையில் இருந்த மொத்த பணத்தையும் அள்ளிக்கொடுத்த பாலா.
கேப்டனின் நினைவிடத்தில் உதவி கேட்ட தாய்க்கு பாலா செய்த நிகழ்ச்சியான செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் பாலா.தற்போது இவர் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அதோடு இவர் பல்வேறு நிகழ்ச்சிகளின் தொகுப்பாளராகவும், விஜே வாகவும் பணியாற்றி வருகிறார். மேலும், பாலா நடிகர் மட்டுமில்லாமல், சமூக அக்கறை கொண்ட நபரும் ஆவார்.
இவர் தான் சம்பாதித்த பணத்தின் மூலம் தன் பகுதியில் உள்ள சிறியவர்களை படிக்க வைப்பதுடன், ஆதரவற்ற குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற பெரியோர்களின் மருத்துவ செலவிற்கும் தன்னால் முடிந்த உதவிகளை செய்தும் வருகிறார். இதுவரை மக்களுக்காக தனது சொந்த செலவில் 4 இலவச ஆம்புலன்ஸை வாங்கி கொடுத்து இருக்கிறார் பாலா. அதே போல சமீபத்தில் மிஃஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்து இருந்தார்.
அவரது குடியிருப்பு பகுதியான பல்லாவரம், அனகாபுத்தூர், பம்பல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய் வீதம் 200 குடும்பங்களுக்கு ரூபாய் 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கி இருந்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் தாம்பரத்தில் உள்ள அனகாபுத்தூர் பகுதியில் மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணிகளுக்கான இலவச ஆட்டோ சேவையை வழங்கி இருந்தார் பாலா.
இப்படி பல உதவிகளை செய்து வரும் பாலாவை சிலர் குட்டி ராகவா லாரன்ஸ் என்று கூட அழைத்து வந்தனர். பாலாவை போல பல உதவிகளை செய்து வருபவர் ராகவா லாரன்ஸ். சொல்லப்போனால் பாலாவிற்கு முன்பே பல ஆண்டுகளாக உதவிகளை செய்து வருகிறார் லாரன்ஸ். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு விருது விழாவில் கூட பாலாவை பாராட்டி இருந்தார் லாரன்ஸ்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் கூட திருவண்ணாமலை இரும்பேடு மேனிலைப்பள்ளியில் கழிப்பறை இன்றி சிரமப்பட்ட மாணவர்களுக்கு ராகவா லாரன்சுடன் இனைந்து பாலா கழிப்பறை கட்டி கொடுத்துள்ளார். இது தொடர்பாக நடந்த நிகழ்ச்சியில் லாரன்சோடு பாலாவும் கலந்து கொண்டார். மேலும், இனி வரும் காலங்களில் பாலாவுடன் இணைந்து பல உதவிகளை செய்ய போவதாக கூறி இருந்தார் லாரன்ஸ்.
தொடர்ந்து பல்வேறு உதவிகளை செய்து வரும் பாலாவிற்கு சமீபத்தில் கேப்டன் புரட்சி கலைஞர் விருது கிடைத்து இருந்தது. அந்த விருதை எடுத்துக்கொண்டு கேப்டனின் நினைவிடத்திற்கு சென்று ஆசி வாங்கினார் பாலா. அப்போது +11 படிக்கும் மாணவனின் தாயார் ஒருவர் தனது மகனின் படிப்பிட்டிற்காக பாலாவிடம் உதவி கேட்டார். உடனே தன்னிடம் இருந்த அனைத்து பணத்தையும் எடுத்துக்கொடுத்தார் பாலா. இதனை கண்டு அந்த தாய் கண்ணீர் மல்க பாலாவிற்கு நன்றி தெரிவித்தார்.