ரஜினிக்கு படையப்பா படமே பிடிக்கவில்லையா? இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் சொன்ன விஷயம்
ரஜினியின் படையப்பா படம் பற்றி இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது. அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் 1999ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் தேதி தமிழில் வெளியான படம் ‘படையப்பா’.
இந்த படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருந்தார். இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருந்தார். ரஜினிக்கு எதிராக மோதும் பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் சிவாஜி கணேசன், லக்ஷ்மி, சித்தாரா, ராதாரவி, நாசர், மணிவண்ணன், செந்தில், அப்பாஸ், ப்ரீத்தா, அனுமோகன், ரமேஷ் கண்ணா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
படையப்பா படம்:
இதற்கு ‘இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினியின் மாஸ் காட்சிகள் அனைத்தும் இப்படத்தில் பெரிதாகப் பேசப்பட்டது. அப்போது வந்த படங்களில் ‘படையப்பா’ தான் ரூ.50 கோடி மேல் வசூலில் சாதனை படைத்தது. மேலும், இந்த படம் ரிலீஸான போது ரஜினிகாந்திற்கும், ஜெயலலிதாவிற்கும் ஒரு மோதல் இருந்துகொண்டே இருந்தது. அவர்கள் இருவரையும் மையமாக வைத்து தான் இக்கதையை கே.எஸ்.ரவிக்குமார் உருவாக்கியிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், உண்மையில் இந்த ‘நீலாம்பரி’ கேரக்டர் ஜெயலலிதாவை மனதில் வைத்து உருவாக்கப்படவில்லையாம்.
படம் குறித்த தகவல்:
‘பொன்னியின் செல்வன்’ நாவலில் வரும் நந்தினி கதாபாத்திரத்தை மனதில் வைத்து தான் அந்த கேரக்டரை உருவாக்கினாராம் கே.எஸ்.ரவிக்குமார். அதேபோல், ‘நீலாம்பரி’ கேரக்டருக்கு முதலில் பிரபல நடிகை மீனாவை நடிக்க வைக்கலாம் என்று தான் முடிவு செய்திருக்கின்றனர். அதன் பிறகு நடிகை நக்மாவின் பெயர் பரிசீலனையில் இருந்ததாம். பின், தனது தோழியான ரம்யாகிருஷ்ணனை அந்த ‘நீலாம்பரி’ கேரக்டரில் நடிக்க வைத்தார் கே.எஸ்.ரவிக்குமார். மேலும், படையப்பா படம் வெளியாகி இன்றோடு 26 ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது.
கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி:
இப்படி இருக்கும் நிலையில் படையப்பா படம் தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் இயக்குனர் கே.எஸ் ரவிக்குமார், படையப்பா படம் எடுத்து முடிந்ததுமே ரஜினி சாரை பார்க்க சொன்னோம். அப்போது ரஜினி சாரின் நண்பர்களுமே படத்தை பார்க்க வந்தார்கள். படம் முடிந்த பிறகு அருணாச்சலம் கெஸ்ட் ஹவுஸ் போய் இரவு உணவை சாப்பிடலாம் என்று தான் ரஜினி சார் சொன்னார். ஆனால், படம் முடிந்த உடனே அவர் எதுவும் பேசாமல் கிளம்பிவிட்டார். அதனால் ரஜினி சாருக்கு படம் பிடிக்கவில்லையோ என்று நினைத்துக் கொண்டேன். அதற்குப்பிறகு மறுநாள் என்னை அழைத்த ரஜினி சார், எனக்கு படம் பிடித்திருக்கிறது.
ரஜினி திரைப்பயணம்:
நான் இருந்தால் என் நண்பர்கள் நேர்மையாக படத்தை பற்றி சொல்ல மாட்டார்கள் என்று தான் நான் சென்றுவிட்டேன் என்றார். அதற்கு பிறகு தான் எனக்கு நிம்மதியே வந்தது என்று கூறி இருக்கிறார். தமிழ் சினிமாவில் 80 காலகட்டம் துவங்கி தற்போது வரை ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டத்துடன் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருகிறார் ரஜினிகாந்த். ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினியின் ‘வேட்டையன்’ படத்தை ஜெய் பீம் பட இயக்குனர் ஞானவேல் இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் நடிக்கும் ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.