ரஞ்சித் தயாரிப்பில் வெளியாகியுள்ள 'குதிரைவால்' - முழு விமர்சனம் இதோ.
இயக்குனர் மனோஜ் லயனல் ஜோன்சன், ஷியாம் சுந்தர் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள படம் குதிரைவால். இந்த படத்தை யாழி பிலிம்ஸ், நீலம் புரொடக்ஷன்ஸ் சேர்ந்து தயாரித்திருக்கிறது. மேலும், இந்த படத்தில் கலையரசன், அஞ்சலி பாட்டீல், சேத்தன், ஆறுமுக வேல், லட்சுமி பாட்டி உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இருப்பவர் ராஜேஷ். பிரதீப் குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இன்று வெளியாகியுள்ள குதிரை வால் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் வங்கி ஒன்றில் வேலை பார்ப்பவராக கலையரசன் உள்ளார். சரவணன் என்ற கதாபாத்திரத்தில் கலையரசன் நடித்திருக்கிறார். ஒருநாள் தன்னுடைய கனவில் கலையரசன் வாலில்லாத குதிரையையும், சூரியன் மற்றும் சந்திரன் என இரண்டையும் ஒரே நேரத்தில் வானத்தில் பார்க்கிறார். பின் விழித்து எழும்போது கலையரசனுக்கு குதிரை வால் முளைத்தது. தனக்கு ஏன் குதிரை வால் வந்தது என்பது புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார் கலையரசன். பின் தன் கனவுகளுக்கு அர்த்தம் தேடுகிறார். அதனால் கனவுகளுக்கு அர்த்தம் சொல்லும் ஒரு பாட்டி, கணக்கு மூலம் தீர்வு சொல்லும் ஒரு கணித ஆசிரியர், ஜோசியம் பார்க்கும் ஒருவர் ஆகியோரிடம் சென்று கலையரசன் ஆலோசனை கேட்கிறார்.
பிறகு தனக்கு கனவில் ஏதோ ஒன்று நடந்தது என்பதை கலையரசன் உணர்கிறார். கடைசியில் என்ன என்பதை கலையரசன் தேடுகிறார்? கடைசியில் அவருடைய சந்தேகங்களுக்கு விடை கிடைத்ததா? இல்லையா? எப்படி குதிரைவால் வந்தது? என்பது தான் படத்தின் மீதி கதை. ஒரு குழப்பமான மனநிலை கொண்டவராக கலையரசன் படத்தில் நடித்திருக்கிறார். இந்த மாதிரியான கதாபாத்திரத்தை திரையில் காண்பிப்பதற்கு நிறைய மெனக்கெடல் வேண்டும். அதை நடிகர் கலையரசன் சிறப்பாக செய்திருக்கிறார்.
குதிரைவால் வந்த பின் காலை ஒரு விதமாய் மடக்கி மடக்கி நடக்கும் விதமும், ஏதோ ஒரு சிந்தனையில் இருக்கும் முகபாவத்தை காட்டுவதும் என்று பயங்கரமாக ஸ்கோர் செய்திருக்கிறார் கலையரசன். மேலும், படம் முழுவதும் கலையரசனை சுற்றிதான் நகர்கிறது. படத்தில் திடீரென்று நடுவில் அஞ்சலி பாட்டில் வருகிறார். சில காட்சிகளில் வருகிறார். இருந்தாலும் அவருக்கு கொடுத்த காட்சிகளில் கச்சிதமாக நடித்திருக்கிறார். தவிர மற்றபடி சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒன்றுமில்லை. பிளாஷ்பேக்கில் சிறுவயது கலையரசனாக ஒரு சிறு வயது சிறுவனும், அவருடைய தோழியாக ஒரு சிறுமியும் நடித்திருப்பார்கள்.
இவர்களுடைய கிராமத்து நட்பு அழகாக படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. இவர்களுடன் படத்தில் ஆனந்தசாமி, சேத்தன், ஒரு பாட்டி, கே எஸ் ஜி வெங்கடேஷ் என சிலர் வருகிறார்கள். ஒரு குழப்பமான உணர்வுரீதியான காட்சிகளை மக்கள் மத்தியில் ஒளிப்பதிவாளர் கார்த்திக் முத்துக்குமார் சரியாக கொண்டு போய் சேர்த்து இருக்கிறார். பிரதீப் குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். பாடல்கள் மக்கள் மனதில் எதுவும் பதியவில்லை என்று சொல்லலாம்.
பிறகு பிளாஷ்பேக் காட்சிகளில் எம்ஜிஆர் பற்றிய சில விஷயங்கள் காட்டப்படுகிறது. கூர்ந்து கவனித்தால் இது ஒரு காதல் படம் என்று சொல்கிறார்கள். அதற்குள் சில சமூகப் பிரச்சினைகளையும் சேர்த்து தற்போது இருக்கும் காலத்திற்கு ஏற்ற மாதிரி கொடுக்கிறார்கள். இந்த படம் ஒரு வித்தியாசமான, மாறுபட்ட படைப்பு என்றே சொல்லலாம். மேலும், படத்தின் முதல் பாதி முழுவதுமே குழப்பத்திலேயே கதை நகர்கிறது. இரண்டாம் பாதியில் தெளிய வைத்திருக்கிறார் இயக்குனர். இது தமிழ் சினிமாவிற்கு ஒரு முழுக்க முழுக்க ஒரு புதுமையான படைப்பு என்று சொல்லலாம். குறிப்பாக சினிமா விரும்பிகளுக்கு ஏற்ற படமாக உள்ளது.
நிறைகள் :
படத்தில் கலையரசனின் நடிப்பு அற்புதம் என்றே சொல்லலாம்.
புது வித்தியாசமான கதையை இயக்குனர் கையாண்டிருக்கிறார்.
படத்திற்கு ஒளிப்பதிவு பக்கபலமாக அமைந்திருக்கிறது.
படத்தில் நடிகர்களும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.
குறைகள் :
படத்தின் முதல் பாதி குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
ஒரு வித்தியாசமான கதை என்பதால் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்லிட முடியாது.
சினிமா விரும்பிகளுக்கும் மட்டும் பிடிக்கும் படமாக உள்ளது.
படத்தின் இசையில் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம்.
இறுதியாக காசு கொடுத்து சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றம் இல்லை. குதிரைவால் ஒரு சுமாரான படம். ஒரு முறை பார்க்கலாம் என்று கூறப்படுகிறது.
மொத்தத்தில் குதிரைவால் - குழப்பமான ஒன்று.