'அவர் செய்த புண்ணியம் தான் இப்போவரைக்கும்', நடிகர் விவேக்கின் மனைவி எமோஷனல் பேட்டி

By krithika · 18/12/2024

மறைந்த காமெடி நடிகர் விவேக் அவர்களின் மனைவி அளித்திருக்கும் பேட்டி தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் சின்ன கலைவாணர் என்ற பட்டத்தை பெற்று என்றென்றும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் நடிகர் விவேக். இவர் 1990களின் தொடக்கத்தில் காமெடி நடிகராக தமிழ்த் திரையுலகத்தில் தன்னுடைய பயணத்தை தொடங்கி இருந்தார். அதனை தொடர்ந்து இவர் தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக தன்னுடைய நகைச்சுவை திறமையினால் மக்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பின் ஹீரோவாகவும் இவர் சில படங்களில் நடித்திருந்தார்.

அதோடு இவர் நடிகராக மட்டுமல்லாமல் பல்வேறு சமூதாய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியும் இருந்தார். அதிலும் இவர் மறைந்த அப்துல்கலாமின் தீவிர ரசிகர். அவர் மீது கொண்ட பற்றின் காரணமாக இவர் லட்ச கணக்கான மரங்களை நட்டு இருந்தார். அதுமட்டும் இல்லாமல் 1 கோடி மரங்களை நடுவது தான் இவரின் கனவாக இருந்தது. ஆனால், கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 17 ஆம் தேதி நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

விவேக் மறைவு :

பின் தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி விவேக் காலமானார். அவருடைய மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கி இருந்தது. அவர் கடைசியாக 'இந்தியன் 2 ' படத்தில் கமிட் ஆன போது தான் உயிரிழந்தார். இந்த நிலையில் விவேக்கின் மனைவி சமீபத்தில் அளித்த பேட்டியில், ' நான் இப்போது வரை விவேக் நடித்த லெஜெண்ட், இந்தியன் 2 ஆகிய இரண்டு படங்களையும் பார்க்கவில்லை. அதற்குக் காரணம் அந்தப் படங்களை பார்ப்பதற்கான வாய்ப்பு எனக்கு அமையவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

விவேக் மனைவி பேட்டி :

மேலும், அவர் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்ததால், அதில் நடந்த சில விஷயங்கள் எனக்கு நன்றாகவே தெரியும். முதலில் கொரோனாவால் ஷூட்டிங் தடைப்பட்டது. பின் கிரேன் அருந்து விழுந்து துணை இயக்குனர்கள் உயிரிழந்தார்கள். அதனால் சில காலம் மீண்டும் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அதேபோல் விவேக்கும் அந்தப் படத்தின் ஷூட்டிங்கின் போது தான் இறந்து போனார். இப்படி தொடர்ந்து நடந்து கொண்டே இருந்ததால் அந்த சமயத்தில் இயக்குனர் சங்கர் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

சங்கர் சொன்ன விஷயம் :

குறிப்பாக இயக்குனர் ஷங்கருக்கு விவேக் மறைந்தது மிகப்பெரிய பேரிடியாக தான் இருந்தது. மறைவுக்கு வீட்டுக்கு வந்த சங்கர், எங்களிடம் தைரியமாக இருங்கள் என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். அதற்குப் பின் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில், 'விவேக் செய்த புண்ணியம் அவரது குடும்பத்தை காப்பாற்றும்' என்று கூறினார். அவர் சொன்னது உண்மைதான். இப்போது வரை விவேக் செய்த புண்ணியம் தான் எங்களை காப்பாற்றிக் கொண்டிருக்கிறது. அதோடு எனக்கு எல்லா படங்களையும் பார்க்க வேண்டும் என்றெல்லாம் ஆர்வம் இல்லை.

https://www.youtube.com/watch?v=EWFez7RUb5w&t=77s

ரொம்ப பிஸியா இருக்கேன்:

முன்பெல்லாம் ஒரு படத்தில் நடித்தால் அந்தப் படத்தின் சிறப்பு காட்சியை அந்த படத்தில் நடித்தவர்களின் குடும்பத்தினர் வந்து பார்ப்பதற்கு எல்லாம் ஏற்பாடு செய்வார்கள். ஆனால், இப்போதெல்லாம் அப்படி கிடையாது ‌. அதனால் ஒரு படத்தை பார்ப்பதற்காக தனியாக நேரம் ஒதுக்கி தியேட்டருக்கு போய் பார்க்க வேண்டும். ஆனால், இப்ப எல்லாம் நான் பயங்கரமாக பிஸியாக இருக்கிறேன். ஆங்காங்கே சில காட்சிகளை எப்போதாவது பார்ப்பேன். இப்போது வரை நான் இந்தியன் 2 பார்க்கவில்லை என்றாலும், எனது மகள்கள் அந்த படத்தை ஓடிடியில் பார்த்தார்கள் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full