30000கும் மேற்பட்ட பாடல்கள் பல விருதுகள் - 28 நாட்கள் மருத்துவமனையில் போராடி உயிரை விட்ட லதா மங்கேஷ்கர்.

By Rajkumar · 6/2/2022

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்கொரோனாவால் உயிரிழந்துள்ள சம்பவம் தற்போது ஒட்டுமொத்த திரை உலகையும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் குறைந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே கொரோனாவின் மூன்றாவது அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதில் கொரோனா வைரசின் உருமாற்ற நிலையான ஓமைக்கரான் வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் நாடு முழுவதும் மாநில அரசுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இப்படி கடந்த மூன்று வருடங்களாகவே கொரோனாவின் தாக்கம் இந்தியாவை விட்டு செல்லவில்லை. இதனால் லட்சக்கண மக்கள் பாதிக்கப்பட்டும், உயிர் இழந்தும் வருகிறார்கள்.

மேலும், கொரோனா தாக்கத்தால் மக்கள் மன ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டு வருகின்றார்கள். சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அதிலும் கடந்த மாதம் மட்டும் பல நடிகர்களுக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த மாதம் ஜனவரி 8ஆம் தேதி பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இன்று அவர் காலம் ஆகி இருக்கிறார்.

லதா மங்கேஷ்கர் இசை பயணம்:

1929 ஆண்டு செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பிறந்தவர் லதா மங்கேஷ்கர். இவரது இயற்பெயர் ஹேமா. ஆனால், அவரது தந்தையின் நாடகங்களில் லத்திகா எனும் பாத்திரத்தில் இவர் நடித்து வந்தார். அதனால் அனைவரும் அவரை 'லதா' என்று அழைக்கத் தொடங்கினர். காலப்போக்கில் அதுவே அவரது பெயராகவும் மாறி போனது. இவரது தந்தை தீனாநாத் மங்கேஷ்கர் மராத்தி மொழியில் நன்கு அறியப்பட்ட பாடகராகவும், நாடக ஆசிரியராகவும் இருந்தவர். பின் 1949ஆம் ஆண்டு மகள் எனும் இந்தி படத்தில் தனது முதல் இசை பாடலை பாடி இசை பயணத்தை தொடங்கினார் லதா மங்கேஷ்கர்.

லதா மங்கேஷ்கர் இசையில் செய்த சாதனை:

அதன் பின்பு பல்வேறு இந்திய மொழிகளில் பல்லாயிரம் பாடல்களை பாடி திரை இசையில் உச்சத்தை தொட்டார் லதா மங்கேஷ்கர். மேலும், 1955- ஆம் ஆண்டு தமிழில் வெளியான மொழிமாற்று படமான 'வானரதம்' படத்தில் தான் இவர் முதலில் பாடியிருந்தார். பின் கமலின் 'சத்யா' படத்தில் "வளையோசை கலகலவென" என்ற பாடலைப் பாடியுள்ளார். பிரபு நடிப்பில் 'ஆனந்த்' படத்தில் பாடிய ஆராரோ பாடல் என பல பாடல்களை பாடி தமிழ் ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். லதா மங்கேஷ்கர் இந்திய இசையுலகில் மெல்லிசை ராணியாக சுமார் அரை நூற்றாண்டு காலம் வலம் வந்தவர்.

லதா மங்கேஷ்கர் வாங்கிய விருது:

அதோடு இவர் இந்தியாவின் இசைக்குயில் என புகழ்பெற்றவர். 30000 படலங்களுக்கு மேல் பாடி சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதை மூன்று முறை பெற்று இருக்கிறார் லதா மங்கேஷ்கர். மேலும், இந்திய சினிமாவில் மிகவும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1989ஆம் ஆண்டு பெற்றார். இந்தியாவின் மிகவும் உயரிய விருதான பாரத ரத்னா விருது 2001ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் எம்.எஸ். சுப்புலட்சுமி பிறகு பாரத ரத்னா விருது பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு முன்னதாக இவர் பத்மவிபூஷன் மற்றும் பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

கொரோனா பாதிக்கப்பட்ட லதா மங்கேஷ்கர்:

இவர் பாடகியாக மட்டும் இல்லாமல் இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் நடித்தும் உள்ளார். இப்படி புகழின் உச்சத்தில் இருந்த பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஜனவரி 8ஆம் தேதி மும்பையில் உள்ள பிரிட்ஜ் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். 28 நாட்களாக இவர் தீவிர தொடர் சிகிச்சை பெற்று வந்திருக்கிறார். இருந்தாலும் இன்று காலை 8 மணிக்கு மேல் லதா மங்கேஷ்கர் இறந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். இதுகுறித்து மருத்துவர்கள் கூறி இருப்பது, இவருக்கு 28 நாட்களுக்கு மேலாக கொரோனா தொற்று இருந்தது.

லதா மங்கேஷ்கர் மறைவு:

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் அவருடைய உடல் உறுப்புகள் பலவும் செயலிழந்துவிட்டது. இன்று காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது என்று கூறியிருக்கிறார்கள். இவருடைய இழப்பு ஒட்டுமொத்த திரை உலகையும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. மேலும், லதா மங்கேஷ்கர் மறைவுக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, மாநில முதலமைச்சர்கள், மாநில ஆளுநர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full