தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் லிவிங்ஸ்டன். இவர் நடிகர் மட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தாளராகவும் பணியாற்றினார். ஆரம்பத்தில் திரைப்படங்களுக்காக இவருடைய பெயரை ராஜன் என்று பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. 1988 இல் வெளிவந்த பூந்தோட்ட காவல்காரன் என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். தற்போது இவர் படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
மேலும், இவர் நடிப்பில் வெளிவந்த சுந்தர புருஷன் படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து சுந்தர புருஷன்- 2 படத்துக்கான திரைக்கதையை எழுதி சினிமாவில் ரிலீஸ் பண்ணுவதற்கு லிவிங்ஸ்டன் தயாராக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் கடைசியாக இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த அண்ணாத்தா படத்தில் நடித்திருந்தார்.
லிவிங்க்ஸ்டன் அளித்த பேட்டி:
இந்நிலையில் சமீபத்தில் லிவிங்ஸ்டன் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார். அதில் அவர் கூறி இருப்பது,
நான் சினிமாவில் ஹீரோவானதே ஒரு பெரிய கதை. ஒரு லட்சியத்தால் வைராக்கியதால் தான் நான் ஹீரோ ஆனேன். விஜயகாந்த் சார், நான், இன்னும் மூணு பேர் ரயில் பயணத்தில் சென்று கொண்டிருக்கிறோம். அந்த இடத்தில் தான் முதன் முதலாக நான் ஹீரோவா பண்ணனும் என்று நினைக்கிற விருப்பம் வாய் திறந்து பேசுகிறேன்.
மூணு பேர் செய்த கிண்டல்:
நான் சொன்னதும் பக்கத்தில் இருந்த அந்த மூன்று பேரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். எனக்கு ரொம்ப அவமானமாக போய் விட்டது. நான் கூனிக்குறுகி இருப்பதை பார்த்த விஜயகாந்த் சார் கண் சிவந்து விட்டது. அவர்களை பார்வையாலேயே முறைத்தார். இந்த மாதிரி எல்லாம் நடந்து கொள்ளாதீர்கள் என்று அவர்களை திட்டினார். அந்த நிமிஷம் எனக்குள்ள ஒரு வைராக்கியம் பிறந்தது. இவங்க முன்னாடி ஒரு படத்தையாவது நாம் நடித்து காட்டனும் என்று முடிவு செய்தேன்.
வைராக்கியத்துடன் ஹீரோ ஆனேன்:
அதற்கேற்றவாறு கடவுள் அருளால் அதுவும் நடந்தது. பின் ஹீரோ இடத்தை தக்க வைத்துக் கொள்வது தான் பெரும்பாடு. இஷ்டத்துக்கு சாப்பிட முடியாது, உடம்பை மெயின்டெய்ன் பண்ணனும், வெளியில் சுதந்திரமாக போய் வரமுடியாது, ரசிகர்கள் கூட்டம், சினிமா, பிசினஸ் சூட்சமங்கள் என பல விஷயங்கள் இருக்கிறது. இதெல்லாம் கடந்தால் தான் ஒரு ஹீரோ ஆக முடியும். ஹீரோ சாதாரணமாக கிடைக்கிற விஷயமில்லை. இது எல்லாம் என்னால் தொடர்ந்து செய்ய முடியவில்லை. அதனால் எனக்கு கொஞ்சம் சோம்போறி தனம் வந்துவிட்டது.
என்னுடைய முதல் இன்ஸ்பிரேஷன்:
அதனால் தான் கிடைக்கிற குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். அதேபோல் எனக்கு சினிமாவில் முதல் இன்ஸ்பிரேஷன் என்றால் ரஜினி சார் தான். இதை அவர்கிட்ட நான் சொன்னதே இல்லை. எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும். அவருடைய கடின உழைப்பு, தொழிலை நேசிக்கிறது, எல்லாரையும் சமமாக மதிக்கிறது என்று எல்லா விஷயங்களையும் அவரைப்பார்த்து கத்துக்கணும் என்று பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.