அந்த காலத்தில் இருந்தவர்கள் வீட்டில் அப்படித்தான் இருந்தார்கள். அதை அவர்கள் தவறாக கருதவில்லை - பாலின சமத்துவம் குறித்து பேசிய மாதவன்
தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் மாதவன். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் எழுத்தாளர், படத்தயாரிப்பாளர், நிகழ்ச்சி தொகுப்பாளர் என பன்முகம் கொண்டுள்ளார். இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான ‘அலைபாயுதே’ படம் மூலம் தான் மாதவன் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். இவரின் முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்திருக்கிறார்.
நடுவில் கொஞ்சம் மாதவன் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்டாலும் பிறகு படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அதிலும் சமீப காலமாக மாதவன் நடித்த விக்ரம் வேதா, இறுதி சுற்று போன்ற பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அதுமட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவில் நுழைந்த போது சாக்லட் பாய் என்ற முத்திரையுடன் வந்த மாதவன் தற்போது ஒரு சிறந்த நடிகராக விளங்கி வருகிறார்.
மாதவன் நடிக்கும் படம்:
தற்போது மாதவனே இயக்கி, நடித்திருக்கும் படம் ‘ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட்’. இது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி இருந்தது. மேலும், இந்த படம் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரையரங்கிற்கு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. அதோடு இந்த படம் தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என ஐந்து மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.
மாதவன் நடித்த ‘Decoupled’ என்ற வெப்சீரிஸ்:
அதோடு தற்போது மாதவன் படங்களில் மட்டும் இல்லாமல் வெப் சீரிஸிலும் பட்டைய கிளப்பி வருகிறார். அந்த வகையில் கடந்த வருடம் மாதவன் ‘Decoupled’ என்ற வெப்சீரிஸ்ஸில் நடித்து இருந்தார். இந்த வெப் சீரீஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. மேலும், இந்த வெப்சீரிஸ்ஸில் விவாகரத்து பெற விரும்பும் ஒரு ஜோடி தங்கள் 12 வயது மகளுக்கு தங்கள் விவாகரத்து குறித்து எப்படி சொல்லி புரிய வைப்பது என்று தெரியாமல் தவிப்பது தான் கதை. இந்த தொடரில் பாலின சமத்துவம் பற்றி பேசி இருப்பார்கள். இந்நிலையில் இது குறித்து சமீபத்தில் மாதவன் பேட்டி ஒன்று கொடுத்திருந்தார்.
பாலின சமத்துவம் குறித்து மாதவன் அளித்த பேட்டி:
அதில் அவர் பாலின சமத்துவம் குறித்து கூறியிருப்பது, பாலின சமத்துவம் என்பது ஒன்றும் புதிதல்ல. தற்போது வளர்ந்து வரும் இந்த சமூகச் சூழலில் அவசியமான ஒன்று. நீங்கள் எதை அகற்றினாலும், அகற்றாவிட்டாலும் ஆண்களுக்கான வேலை பெண்களுக்கான வேலை என்று வரையறுக்கும் இந்த விதிகளை அகற்றுங்கள். இதில் ஆண்களை குறை சொல்ல முடியாது. ஏன்னா, அவர்கள் வளர்க்கப்பட்ட விதம் அப்படி. அந்த காலத்தில் இருந்தவர்கள் வீட்டில் அப்படித்தான் இருந்தார்கள். அதை அவர்கள் தவறாக கருதவில்லை. அப்படி இருக்கும் குடும்பம் கட்டுப்பாடான குடும்பம் என்று சொல்வார்கள்.
பெண்களை பற்றி மாதவன் சொன்னது:
ஆனால், அது பெண்களுக்கு பொருத்தம் இல்லாததாக இருந்தது. அது மட்டுமில்லாமல் ஆண்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். ஆண்களை விடவும் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலிமை ஆனவர்கள். சொல்லப்போனால், ஆண்களின் கடைசி காலங்களில் பெண்கள் தான் ஆண்களை பார்த்துக்கொள்கிறார்கள். இந்த உண்மையை ஆண்கள் ஏற்றுக் கொள்வது கடினம். இருந்தாலும் இதுதான் நிஜம். உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால், எங்கள் வீட்டில் என் பாட்டி உட்பட பல வலிமையான பெண்கள் உள்ளார்கள். அவர்கள் தான் குடும்பத்தை தலைமை தாங்கி நடத்தினார்கள்.
ஆண்கள் கவனிக்க வேண்டியது:
எங்கள் வீட்டில் மட்டுமில்லை பெரும்பாலான வீடுகளில் நீங்கள் கவனித்து பார்த்தால் உங்களுக்கு புரியும். தாத்தாவை விட பாட்டி நிறைய காலம் கடைசி வரை வாழ்கிறார்கள். அவர்கள் தான் நம்மை கடைசி காலங்களில் பார்த்துக் கொள்வார்கள். அதனால் நீங்கள் பெண்களை புரிந்து கொண்டு அவர்களின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துங்கள். உங்கள் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த ஆண்கள் இன்னும் தீவிரமாக பாலின சமத்துவம் குறித்த விவாதத்தில் ஈடுபட வேண்டும் என்று கூறி இருக்கிறார்.