தனது கணவரின் Biopicகாக உருவாக இருக்கும் ‘அமரன்’ படம் குறித்து மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி பதிவிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. கடைசியாக அயலான் படத்தில் நடித்து இருந்தார். இந்த படத்தை ஆர் ரவிக்குமார் இயக்கியிருந்தார்.
அதை தொடர்ந்து இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அமரன் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை கமலஹாசன் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த படத்தினுடைய டீசர் வெளியாகி இருக்கிறது. அதில் 44 ராஷ்ட்ரிய ரைபிள் படை பற்றிய வசனங்களும், தீவிரவாதிகளுடன் சண்டை காட்சிகளும் காட்டப்பட்டிருக்கிறது. மேலும், முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
மேஜர் முகுந்த் வரதராஜன் குறித்த தகவல்:
இந்த நிலையில் மேஜர் முகுந்த் வரதராஜன் குறித்து தான் இங்கு பார்க்க போகிறோம். முகுந்த் வரதராஜன் சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர். முகுந்தனின் அப்பாவுக்கு ராணுவத்தில் சேர வேண்டும் என்று ஆசை. ஆனால், அவரால் செல்ல முடியவில்லை. அவருடைய கனவாக தான் பி காம் ஜர்னலிசம் படித்து முடித்து ராணுவத்தில் சேர்ந்தார் முகுந்த். 2015 ஆம் ஆண்டு 11 ஆம் ஆண்டு ஐநா சபை சார்பில் அனுப்பப்பட்ட அமைதிப்படையில் முகுந்த் இருந்தார். அதற்குப்பின் இவர் மேஜர் ஆகி பல போர்களை சந்தித்து இருந்தார். இந்த ராணுவ போரில் அவர் உடம்பில் நிறைய காயங்களை எல்லாம் வாங்கி இருந்தார். குறிப்பாக, ஒரு முறை முதுகில் ஒரு குண்டை வாங்கி இருந்தார்.
முகுந்த்-தீவிரவாதிகள் சண்டை:
அதுமட்டுமில்லாமல் ஒரு முறை கன்னிவெடியில் முகுந்த் காலை வைத்து வைத்துவிட்டார். மயிரிழையில் அந்த ஆபத்திலிருந்தும் அவர் தப்பித்து விட்டார். இப்படி தேச பாதுகாப்புக்கான பணியை உத்வேகத்துடனும் பெருமையுடன் பார்த்து வந்தார் முகுந்த். 2013ல் காஷ்மீரின் யாச்சு குகன் பகுதியில் உள்ள ஒரு ஆப்பிள் தோட்டத்தில் ஜெய்ஷ் – இ – முகமது அமைப்பை சேர்ந்த அல்தாஃப் பாபா என்ற தீவிரவாதிகள் பதுங்கி இருந்தார்கள். அந்த பகுதியை இந்திய ராணுவத்தின் 44 ராஷ்ட்ரிய ரைஃபிள் படையணி முழுமையாக சூழ்ந்து விட்டது. தீவிரவாதிகளுக்கும் இராணுவ வீரர்களுக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது.
மேஜர் முகுந்த் இறப்பு:
பின் ஒரு கட்டத்தில் புத்திசாலியாக மேஜர் முகுந்த் செயல்பட்டு மொத்த தீவிரவாத கும்பலையும் சுட்டுக் கொன்று விட்டார். இதனால் முகுந்தை பலரும் பாராட்டி இருந்தார்கள். பின் 2014 ஆம் ஆண்டு ஏப்ரலில் மேஜர் முகுந்த் தீவிரவாதிகள் எதிரான சண்டையில் கொல்லப்பட்டார். அந்த சமயத்தில் இவருடைய இறப்பு இந்தியா முழுவதுமே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. எல்லோருமே அவருக்காக அஞ்சலி செலுத்தி இருந்தார்கள். ஒரு ராணுவ வீரருக்கு இந்திய தேசமே சல்யூட் செய்து இருந்தது. பின்னவருக்கு 2015 ஆம் ஆண்டு ஜனவரியில் அசோகா சக்கர விருது வழங்கப்பட்டது. இப்படி புகழ்பெற்ற மேஜர் முகுந்த் வரதராஜனின் கதையில் தான் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
இப்படி ஒரு நிலையில் தனது கணவரின் Biopicகாக உருவாக இருக்கும் இந்த படம் குறித்து பதிவிட்டுள்ள மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து தனது முகநூல் தள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில் ‘அமரன், என்னுள் எப்போதும் நிறைந்திருக்கும் ஒரு பெயர். இதை எப்படிச் சொல்வது என்று நான் ஆயிரம் முறை யோசித்திருக்கிறேன். ஒரு தசாப்தம் கடந்துவிட்ட நிலையில் அவரது நினைவையும் தேசபக்தியையும் வெள்ளித்திரையில் பார்ப்பதற்கான நேரம் இது.
அழியாதத் துக்கம், எல்லையற்ற அன்பு மற்றும் மாறாத நம்பிக்கை கலந்த உற்சாகத்துடன் இப்படத்தைத் திரையில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன். எங்கள் குடும்பம் மற்றும் இதேபோல ஓர் அன்பான ஆத்மாவை ஓர் உயர்ந்த காரணத்திற்காக இழந்த அனைவருடனும் துக்கம், அதே சமயம் வலிமையுடன் துணை நிற்கிறோம். ஜெய் ஹிந்த்” என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த பதிவிற்கு நன்றி தெரிவித்து அமரன் படத்தின் இயக்குனர் பதிவிட்டுள்ளார்.