பரியேறும் பெருமாள் முதல் வாழை வரை- தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ்

By subhashini · 2/9/2024

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து இயக்குனர் மாரி செல்வராஜ் போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் மாரி செல்வராஜ். இவர் 2018ல் ‘பரியேறும்’ பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக மாரி செல்வராஜ் தமிழ் சினிமா இயக்குனராக அறிமுகம் ஆனார். முதல் படமே இவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தது.

இந்த படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கிய ‘கர்ணன்’ , ‘மாமன்னன்’ படங்கள் மிக பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை அடுத்து தற்போது சோசியல் மீடியா முழுவதும் மாரி செல்வராஜின் வாழை படம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. மாரி செல்வராஜ் இயக்கி தயாரித்து இருக்கும் படம் ‘வாழை’. இந்த படம் முழுக்க முழுக்க குழந்தைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தில் கலையரசன், நிகிலா விமல், பிரியங்கா நாயர் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள்.

வாழை படம்:

சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மாரி செல்வராஜ், தன் இளம் வயதிலிருந்து சந்தித்த ஜாதி, மதம் பாகுபாடுகளை மையமாக வைத்து வாழை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சமீபத்தில் வெளியான இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருக்கிறது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமில்லாமல் பிரபலங்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. இந்த படத்தை பார்த்து பிரபலங்கள் பலருமே மாரி செல்வராஜை நேரில் சந்தித்து பாராட்டி வருகிறார்கள்.

பிரபலங்கள் பாராட்டு:

அதுமட்டுமில்லாமல் சில பிரபலங்கள் சோசியல் மீடியாவிலும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
மேலும், பிரபலங்களை தாண்டி அரசியல் கட்சித் தலைவர்களான திருமாவளவன், சீமான், ராமகிருஷ்ணன் ஆகியோரும் மாரி செல்வராஜின் வாழை படத்தை பார்த்து பாராட்டி இருக்கிறார்கள். அந்த வகையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழைபடத்தை பார்த்து பாராட்டி பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும், அவர்களின் வலியையும் பேசும் வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன்.

ஸ்டாலின் பதிவு:

படைப்பாளி மாரி செல்வராஜுக்கு அன்பின் வாழ்த்துகள். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி! பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்! தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜுக்கு மீண்டும் வாழ்த்துகள் என்று கூறி இருக்கிறார்.

மாரி செல்வராஜ் பதிவு:

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாரி செல்வராஜ் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், என் முதல் படமான பரியேறும் பெருமாளிலிருந்து கர்ணன், மாமன்னனை தொடர்ந்து இன்று வாழை வரை என அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு உடனே அழைத்து பெரும் ப்ரியத்தோடு என் படைப்பையும் என் உழைப்பையும் பெரும் நம்பிக்கையோடு கொண்டாடி வரும் தமிழக முதல்வர் மு.ஸ்டாலினுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full