கடைசி விவசாயி படத்தில் விஜய் சேதுபதி கையில் அணிந்த கடிகாரங்களுக்கு பின் இப்படி ஒரு யூனிவர்ஸ் கதை இருக்கா?

By subhashini · 16/6/2024

கடைசி விவசாயி படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நிறைய கைக்கடிகாரங்கள் அணிந்ததற்கான அர்த்தம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்கள் செல்வனாக திகழ்பவர் விஜய் சேதுபதி. இவருடைய நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளியாகி இருந்தது. காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் தான் இந்த படத்தையும் இயக்கியிருந்தார். மேலும், நல்லாண்டி, யோகி பாபு உட்பட பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்து இருந்தார்கள். இந்த படம் முழுக்க விவசாயம் பற்றியும், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்தும் பேசப்பட்டு இருந்தது. இந்த படத்தில் நல்லாண்டி என்ற முதியவர் மாயாண்டி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கடைசி விவசாயி படம்:

இந்த படம் விமர்சனரீதியாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. பல விருதுகளையும் வாங்கி குவித்து இருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு தேசிய விருது வழங்கப்பட்டிருந்தது. மேலும், இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. இந்த படத்தில் விஜய் சேதுபதி தீவிர முருகன் பக்தர். இதனால் இவர் எப்போதுமே முருகன் கோவிலில் சுற்றிக் கொண்டுதான் இருப்பார்.

விஜய் சேதுபதி ரோல்:

இவர் சிறுவயதிலிருந்தே அவருடைய அக்கா மகளை காதலித்து வந்தார். ஆனால், திடீர் என்று அவருடைய அக்கா மகள் இறந்துவிட்டார். அதற்கு பிறகு தான் விஜய் சேதுபதி மாறிவிட்டார். அப்படி இருந்துமே இவர் தன்னுடைய அக்கா மகள் தன்னுடன் இருக்கிறார் என்றும், முருகர் தன்னிடம் பேசுகிறார் என்றுமே சொல்லிக்கொண்டிருக்கிறார். மேலும் இவருக்கு அடையாளமே கைநிறைய கடிகாரங்கள், நாலைந்து சட்டைகள், ருத்ராட்சம் தான்.

நிறைய கடிகாரம் அணிந்த காரணம்:

மேலும், இவருடைய கையில் இத்தனை கடிகாரங்கள் போட்டு இருந்ததுக்கு பலருமே ஏன்? எதற்கு? என்றெல்லாம் கேட்டிருந்தார்கள். இந்த நிலையில் கடைசி விவசாயி படத்தில் விஜய் சேதுபதி நிறைய கை கடிகாரம் அணிந்து இருந்ததற்கான விளக்கத்தைப் பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம். அதற்கு மல்டி யுனிவர்ஸ் என்று அர்த்தம். உலகங்களில் வாழ்ந்து வருகிறார் என்று மறைமுகமாக இயக்குனர் சொல்லி இருக்கிறார்.

விஜய் சேதுபதி கொடுத்த விளக்கம்:

அவருடைய அக்கா மகளுடன், முருகனுடன் என பல உலகங்களில் விஜய் சேதுபதி வாழ்ந்து வருகிறார். ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு நேரம் என்பதால் அதை உணர்த்தும் வகையில் அவர் அந்த கை கடிகாரத்தை போட்டு இருக்கிறார். ஏற்கனவே இது தொடர்பாக விஜய் சேதுபதி நிகழ்ச்சி ஒன்றில், இந்த கதாபாத்திரம் ரொம்ப ஸ்பிரிச்சுவல் ஆனது. அவன் நிறைய யுனிவர்சில் இருக்கான். அதனால் வேற வேற டைம் இருக்கு. அதை சொல்லத்தான் அந்த வாட்ச் என்றெல்லாம் கூறியிருந்தார்.

behindtalkies AMP · Quick view
View full