ஐந்து ரூபாய் மட்டும் வாங்கிக் கொண்டு மக்களுக்கு மருத்துவ சேவை செய்பவர் டாக்டர் மாறன் (விஜய்). இந்தச் சேவையைப் பாராட்டி மனிதநேய விருது வழங்குவதற்காக பாரீஸ் அழைக்கப்படுகிறார். இதற்கிடையில் திடீரென ஊரில் சில மருத்துவர்கள் கடத்தப்படுகிறார்கள். கடத்தியது யார் என போலீஸ் நூல் பிடிக்க அது டாக்டர் விஜயின் வீட்டுக்குள் வந்து முடிகிறது. அவரைக் கைது செய்து, “உயிரைக் காக்க நினைக்கும் மருத்துவர் நீ, நீயே எதுக்கு மருத்துவர்களைக் கடத்தியிருக்க?” விசாரணையை ஆரம்பிக்கிறார் போலீஸ் அதிகாரி சத்யராஜ். அதற்கு பதில், ஃப்ளாஷ் பேக்குகள். ஒன்று 1979ல் மதுரையில் வசித்த முறுக்கு மீசை வெற்றிமாறனுடையது. நடந்த கடத்தல்கள் எதற்காக, முறுக்குமீசை விஜய்க்கு என்ன ஆனது, இன்னொரு விஜய் இருக்கிறாரா அல்லது அதே டாக்டர் விஜய்தானா என்பதை எல்லாம் `பீஸ் ப்ரோ’ என அமர வைத்து நிதானமாக சொல்கிறது `மெர்சல்’
படத்தின் பாகுபலி விஜய்தான். டைட்டில் கார்டில் இளைய தளபதியில் இருந்து தளபதிக்கு ப்ரோமோட் ஆகியிருக்கிறார் விஜய். தளபதி என்ற டைட்டிலுக்கும், ஆளப்போறான் தமிழன் என்ற பாடலுக்கும் கூட திரைக்கதையில் சின்ன லாஜிக் பிடித்திருக்கிறார் அட்லி. ஸ்டைலான தாடி, ஃபிட்டான உடம்பு என படத்துக்காக நிறையவே மாறியிருக்கிறார் விஜய். இதைத்தான் இத்தனை நாளாய் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருந்தது. இப்படி சின்ன சின்ன சர்ப்ரைஸ் தொடரட்டும் விஜய். படம் நெடுக நிறைய கன்னிகள். திரைக்கதையின் பிற்பகுதியில் அவை திரும்ப வரும்போது “வாவ்” என்றிருக்கிறது. தனக்காக கட் அவுட் வைக்கப்போகும் சிறுவனிடம் “அதெல்லாம் வேணாம். நாலு பேருக்கு அந்தக் காசுல உதவி பண்ணு” என ஒரு வசனம். நோட் பண்ணுங்க விஜய் ஃபேன்ஸ்
படத்தில் மூன்று கதாநாயகிகள். காஜல், சமந்தா சில காட்சிகளில் வருகிறார்கள். விஜய் சமந்தாவுக்கு இடையிலான காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது. ஆனாலும் பிளாஷ்பேக்கில் கொஞ்சம் வெயிட்டான ரோல் என்பதால் முதலிடம் பிடிக்கிறார் நித்யா மேனன். வடிவேலுக்கு அசம்பாவிதமாய் நிகழ்ந்த ‘கத்திச் சண்டை’யை தவிர்த்துவிட்டு பார்த்தால் இது வெல்கம் கம்பேக். ஆனாலும் விஜய் – வடிவேலு இணையின் டிராக் ரெகார்ட் பார்க்கும்போது காமெடி மிஸ் ஆகும் பீல். அடுத்து, இரண்டு காட்சிகளே வரும் யோகிபாபுவின் காமெடிக்கு பிரமாதமான ரெஸ்பான்ஸ.எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஸ்டைலிஷான கெட்டப் கொடுத்து வழக்கமான வில்லன் வேடத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். மாஸ் படத்துக்கே உரிய குரல் மட்டும் கொடுக்கும் பலவீனமான வில்லனாக வந்து போகிறார். நித்யா மேனன், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சமந்தா, காஜல் அகர்வால், சத்யராஜ், ஹரீஷ் பெரடி, கோவை சரளா என பலர் இருந்தாலும், படம் முழுக்க விஜய் மட்டுமே தெரிகிறார்.
மனிதாபிமானம்ங்கறது ஸ்பெஷல் குவாலிட்டி இல்ல, ஒவ்வொருத்தருக்கும் இருக்க வேண்டிய பேசிக் குவாலிட்டி’ என மேலோட்டமான வசனங்கள் படத்தின் அழுத்தத்தை வெகுவாகக் குறைக்கிறது. மேலும் ஏற்கெனவே நீளமாக செல்லும் படத்தில், அந்த ஃப்ளாஷ் பேக்கும் நீளமாக இருப்பதால் சோர்வடையச் செய்கிறது. வடிவேலுவுக்கு இன்னொரு விஜய் எங்கு இருக்கிறார் என எப்படித் தெரிந்தது, பஞ்சாப் பெண் நித்யா எப்படி மதுரை தமிழ், இப்படியான லாஜிக் களேபரங்கள் அனைத்தையுமே, மேஜிக் என்ற ஒற்றை வார்த்தையில் டிக் அடிக்கிறது மெர்சல். திரைக்கதைக்கு அட்லீ முதல் விஜயேந்திர பிரசாத் வரை நிறைய பேர் உழைத்திருக்கிறார்கள். அவ்வளவு உழைப்பிற்கும் ஒரு மாஸ்டர்பீஸ் திரைக்கதை தந்திருக்கலாம். ஆனால் யூகிக்கும்படியான காட்சிகள் தந்திருப்பது மைனஸ்.
படத்தில் எக்கசக்க குறியீடுகள். வேட்டி சட்டை புகழ் பாடுவது, தலைவன் பன்ச், எம்.ஜி.ஆர் உருவகம், போக பார்ப்பவர்கள் எல்லாம் ‘நீ தெய்வம்யா’ என சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஒரு காட்சியில் கையில் திருப்பி பிடித்த அருவாளோடு ‘ ஒருநாள் எங்க கை ஓங்கும்டா’ என கம்யூனிச பன்ச் பேசுகிறார் விஜய்.
கொண்டாட்ட மனநிலையில், எந்தக் குறைகளும் தியேட்டரில் இருக்கும் போது தெரியவில்லை என்பதால் மெர்சல் மூலம் இன்னொரு ஹிட் பார்சல்.