மாயி படத்துக்கு அப்புறம் எனக்கு பல படங்களோடு வாய்ப்பு போச்சி - அதுக்கு காரணம் இதான் 'மின்னல் தீபா'

By Rajkumar · 1/12/2021

வடிவேல் சாரோட ஒரே ஒரு சீன் தான் நடித்தேன். அதனாலே என்னுடைய மொத்த கேரியரும் போய்விட்டது என்று மின்னல் தீபா அளித்த பேட்டி தற்போது சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சரத்குமார் நடிப்பில் 2000 ஆம் ஆண்டு சூர்யா பிரகாஷ் இயக்கத்தில் வெளிவந்த படம் மாயி. இந்த படத்தில் வடிவேல் உடைய காமெடிகள் காட்சி வேற லெவல் இருக்கும். அதில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தது 'வாம்மா மின்னல்' என்ற காட்சி தான். படத்தில் வடிவேலுக்கு பெண் பார்க்க போன இடத்தில் நிகழும் காட்சியில் மணப்பெண்ணாக ஒரே ஒரு சீனில் தீபா நடித்திருந்தார். அப்போது பெண்ணை பார்க்கணும் வாம்மா மின்னலு என்று சொன்னவுடன் தீபா மின்னல் போல் வந்து செல்வார்.

அதனாலே அவருக்கு மின்னல் தீபா என்று பெயர் வந்தது. அந்த படத்திற்கு பின் 15 வருட இடைவெளிக்கு பிறகு தற்போது தான் ராஜ வம்சம் என்ற படத்தில் நடித்திருக்கிறார் தீபா. இந்நிலையில் இதுகுறித்து தீபாவிடம் பேட்டி எடுத்த போது அவர் கூறியது, எனக்கு அடையாளம் தந்த படம் மாயி தான். அதுக்கு முன்னாடி நான் பல படங்களில் நடித்து இருந்தேன். ஆனால், அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் ரீச் ஆகவில்லை. மின்னல் என்ற அடைமொழியை வடிவேல் சார் மூலம் தான் எனக்கு கிடைத்தது. இந்த படத்திற்கு பின் உனக்கு டக்கு டக்கு என்று வாய்ப்பு வரும் என்று வடிவேல் சார் சொல்லி இருந்தார்.

அவர் கூட படத்தில் நடித்திருந்தது ஒரு ஜாலியான அனுபவமாக இருந்தது. மேலும், பல வருடங்களுக்கு பிறகு இப்ப தான் படங்களில் நடிக்கிறேன். ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இவ்வளவு இடைவெளிக்கு காரணம் அதே மின்னல் கதாபாத்திரம் தான். வடிவேல் சார் சொன்ன மாதிரி எல்லாம் எனக்கு எந்த ஒரு வாய்ப்பும் வரவில்லை. மக்கள் மத்தியில் மின்னல் கதாபாத்திரம் எவ்வளவு வரவேற்கப்பட்டதோ, அதே அளவுக்கு எனக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனதற்கும் அந்த கதாபாத்திரம் தான் காரணம். ஏன்னா, அந்த சீனில் நான் மாறுகண் இருக்கிற கதாபாத்திரத்தில் நடித்தேன்.

அதனால் நிஜ வாழ்க்கையிலும் எனக்கு மாறு கண்ணு தான் என்று நினைத்து விட்டார்கள். அந்த நேரத்தில் இந்த கேரக்டருக்கு நிஜமாகவே மாறுக்கண் உள்ளவர்களை தான் கூட்டி வந்து நடிக்க வைத்திருக்கிறார்கள் என்று சில பேர் தப்பா சொன்னது மொத்த சினிமா முழுவதும் பரவி விட்டது. நிறைய பேர் அதை நம்பியும் விட்டார்கள். அதனால் எனக்கு வரவேண்டிய வாய்ப்புகள் எல்லாம் தவறிப் போய் விட்டது. இந்த விஷயமே எனக்கு ரொம்ப நாள் கழித்துதான் தெரிந்தது. என்கிட்டயே சில பேர் நேரடியாக இதப்பத்தி கேட்க ஆரம்பித்தார்கள். எனக்கு என்ன பண்றதுன்னு தெரியல? இதைக் கேட்டு எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அதுமட்டுமில்லாமல் எல்லோரிடமும் போய் எனக்கு இந்த மாதிரி பிரச்சனை இல்லை என்று சொல்ல முடியுமா? இல்லை போஸ்டர் ஒட்ட தான் முடியுமா?

அதனாலேயே இது தான் நம் தலைவிதி என்று நினைத்து வீட்டிலேயே இருந்து விட்டேன். அந்த சமயத்தில் பொருளாதார ரீதியாக நான் ரொம்ப கஷ்டப்பட்டு துணி தைத்து சம்பாதித்து வந்தேன் என்று கூறி இருந்தார். கதிர்வேலு இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த படம் ராஜவம்சம். இந்த படத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி, விஜயகுமார் உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப பின்னணியை கொண்ட படம். இந்த படத்தில் தீபா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full