தமிழில் பழைய வண்ணாரப் பேட்டை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் மோகன் ஜி. இந்த படத்தை தொடர்ந்து திரௌபதி, ருத்ரதாண்டவம் என்று இரண்டு படங்களை எடுத்த இவர் இறுதியாக இயக்குனர் செல்வராகவனை வைத்து பகாசூரன் படத்தை இயக்கி இருந்தார். இப்படி ஒரு நிலையில் வடதமிழக கோவில் விழாக்களை தடுக்க சதி நடப்பதாக இயக்குநர் மோகன் ஜி குற்றம் சாட்டியுள்ளார். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தீவட்டிப்பட்டி கிராமத்தில் பெரிய மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது.
இந்த கோவிலில் சித்திரை மாதம் வந்தாலே திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு திருவிழா நடைபெற்ற போது இரு சமூக மக்கள் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இந்த விழாபாதியில் நிறுத்தப்பட்டது. பிரச்சனை தீவிரமடைய கோவிலில் நடை சாத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரு தரப்பினரிடையே நடந்த விசாரணையின் போது கோவிலுக்குள் குறிப்பிட்ட சமூகத்தினர் வரக்கூடாது என்று எந்த தடையும் விதிக்கக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இதனைத் தொடர்ந்து வட்டாட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்ற போது அங்கே ஏற்பட்ட தகராறு காரணமாக இரு தரப்பினர் மத்தியில் மோதல் ஏற்பட்டு கலவரம் ஏற்பட்டது இரு தரப்பினர்களும் கற்களை வீசியும், வாகனங்களுக்கு தீ வைத்தும் வன்முறையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் அனைத்து கடைகளும் சாத்தப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கலவரம் தொடர்பாக 23 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
இப்படி ஒரு நிலையில் வடதமிழக கோவில் விழாக்களை தடுக்க சதி நடப்பதாக இயக்குநர் மோகன் ஜி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘ சித்திரைமாதத்தில் தமிழகம் முழுக்க நடக்கும் அம்மன் கோவில் திருவிழாக்களை, முக்கியமாக வடதமிழக கோவில் விழாக்களை தடுக்கவும், திட்டமிட்டு கலவரங்களை உருவாக்கி கோவில்களை மூடவும் ஒரு குறிப்பிட்ட பண்பாட்டு மைய அமைப்பினர் சதிதிட்டம் வகுத்துள்ளதை பத்திரிக்கையாளர் ஒருவர் மூலம் அறிந்தேன்.
அதனால் கோவில் நிர்வாகிகள் கவனமாக, நிதானமாக பேச்சுவார்த்தைகளை கையாளுங்கள். பங்காளி தகராறு போல உங்களுக்குள் இருக்கும் முரண்களை முன் வைத்து பேசினால், உங்கள் மரபு வழி வழிபாட்டை சிதைக்கும். அதனால் சதி வேலை செய்பவர்களை கண்டறிந்து ஊர்மக்களுடன் கலந்து திருவிழாக்களை சிறப்பாக கொண்டாடுங்கள்.
கவனமாக கையாண்டு மாற்று சமூக மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி சூமூகமாக இணைந்து திருவிழாக்களை கொண்டாடுங்கள்.. பாரம்பரியம் காத்திடுங்கள்..’ என்று பதிவிட்டுள்ளார், மோகன் ஜியின் இந்த பதிவிற்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும் ஒரு சில எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அதிலும் சிலர் ‘ என்ன நடந்தது என்று தெரியாமல் உங்கள் லாபத்திற்காக எதை வேண்டுமானாலும் பேசாதீர்கள் என்று கூறி வருகின்றனர்.