தியேட்டர்களில் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் வேலையெல்லாம் அப்பா செய்திருக்கிறார் - MSV பட்ட கஷ்டங்களை சொன்ன அவரின் மகள்.

By Rajkumar · 31/3/2023

எம் எஸ் விஸ்வநாதனின் வாழ்க்கை குறித்து அவருடைய மகள் லதா மோகன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் மிகப்பிரபலமான பாடகராகவும், நடிகராகவும் புகழ் பெற்று விளங்கியவர் எம் எஸ் விஸ்வநாதன். இவர் 1953 ஆம் ஆண்டு தான் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து இவர் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் 1,700 படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார். மேலும், இவருடைய பாடல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

இதனிடையே இவர் ஜானகி என்பவரை திருமணம் செய்து கொண்டார். விஸ்வநாதன்- ஜானகி தம்பதிக்கு 4 மகன்களும், 3 மகள்களும் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாருமே இசைத்துறையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் எம் எஸ் விஸ்வநாதனின் வாழ்க்கை குறித்து அவருடைய மகள் லதா மோகன் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, அப்பாவுக்கு நாலு வயது இருக்கும்போது அவருடைய அப்பா இறந்துவிட்டார். அதனால் தன்னுடைய மகனுடன் அப்பா வீட்டிலேயே பாட்டி குடியேறி விட்டார்கள். அப்பா நாலாவது வரை தான் படித்தார்.

லதா மோகன் அளித்த பேட்டி:

அப்பாவுக்கு இசை மீது அவருக்கு இருந்த ஆர்வத்தினால் பள்ளிக்கூடம் போகாமல் பாட்டு வாத்தியாரிடம் மியூசிக் கற்றுக் கொண்டார். அப்பவே, அப்பா நிறைய கச்சேரிகளில் எல்லாம் வேலை செய்திருக்கிறார். சினிமா, நாடகத்துறையுடன் ஏற்பட்ட பழக்கத்தினால் சேலம் மாடர்ன் தியேட்டர் உட்பட பல ஊர்களிலும் அவர் வேலை செய்திருக்கிறார். அப்பாவுக்கு நடிக்கிற ஆசையும் இருந்திருக்கு. இதனால் ஒரு சில பட வாய்ப்புகளும் அவருக்கு வந்தது. ஆனால், அப்பா உயரம் குறைவாக இருந்ததால் நடிகைகள் பலரும் அவருடன் நடிக்க தயங்கி இருந்தார்கள். இதனாலையே அப்பா நடிப்பின் மீது இருந்த ஆசையை விட்டுவிட்டு மியூசிக் திரையில் மட்டும் அதிக கவனம் செலுத்தி வந்தார்.

சிறுவயதில் எம்.எஸ்.வி. பட்ட கஷ்டங்கள்:

ஆரம்பத்தில் அவருக்கு இசையிலும் பெரியளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதற்கு பின் தான் அவர் போராடி சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். சினிமாவில் வெற்றி பெறனும் என்ற வைராக்கியத்தோடு குடும்பத்தினரை பிரிந்து ஊர் ஊராக சுற்றிக் கொண்டிருந்தார் அப்பா. ஆனால், தன்னுடைய பையன் எப்படி இருக்கான்? என்று அப்பாவுடைய குடும்பத்தினர் வருஷக் கணக்கில் தவித்து இருப்பார்கள். சபாக்கள், ஸ்டூடியோக்கள், தியேட்டர்களில் தின்பண்டங்கள் விற்பனை செய்யும் வேலையெல்லாம் அப்பா செய்திருக்கிறார்.

சினிமா வாய்ப்பு:

படப்பிடிப்புகளில் சின்ன சின்ன வேலைகள் செய்தும், சினிமாக்காரர்கள் வீட்டிலும் உதவியாளராகவும் வேலை செய்து பல கஷ்டங்களை சந்தித்து இருக்கிறார். பின் சுயமாக பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார். அதற்கு பிறகு தான் அப்பா தன்னுடைய குடும்பத்தினரை வரவழைத்து சேலத்தில் தன்னுடன் தங்க வைத்துக் கொண்டார். கல்யாணம் ஆனதும் அப்பா குடும்பத்துடன் சென்னையில் குடியேறிவிட்டார். இசையமைப்பாளர் சி சுப்பராமன் ஐயாவிடம் உதவியாளராக அப்பா இருந்தார். அவருடைய திடீர் மறைவால் சுப்பராமன் ஐயாவின் கைவசம் இருந்த சில படங்களுக்கு இசையமைக்கிற வாய்ப்பு அப்பாவுக்கு கிடைத்தது. புதுமுகம் என்று அப்பாவுக்கு பலரும் வாய்ப்பு கொடுக்க தயங்கினார்கள்.

குடும்பம் குறித்து சொன்னது:

பிறகு எம் எஸ் வி மியூசிக் போட்டால் தான் படம் ஓடும் என்று அவர்களே சொல்லும் அளவுக்கு தன்னுடைய திறமையால் அப்பா முன்னேறி இருந்தார். அதனால் எங்க குடும்பத்துடைய கஷ்டங்கள் மாறியது. தன் ஏழு பிள்ளைகளையும் சிரமம் இல்லாமல் அப்பா வளர்த்தார். அப்பாவுக்கு மியூசிக் தவிர வெளிஉலகம் எதுவுமே தெரியாது. வீட்டு நிர்வாகம் மொத்தத்தையும் அம்மாதான் பார்த்துக் கொண்டார். அப்பா இறப்பதற்கு சில வருஷங்களுக்கு முன்பே அம்மா இறந்து விட்டார். அதனால் அப்பா மனதளவில் மிகவும் உடைந்து விட்டார். இருந்தாலும், அப்பா எங்களுக்காக சந்தோஷமாக இருந்தார். அர்த்தம் உள்ளதாகவும் அப்பாவுடைய வாழ்க்கை அமைந்தது என்று புன்னகையுடன் லதா மோகன் கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full