'5ம் 3ம் எட்டே தாண்டா' - 40 ஆண்டுகளுக்கு பின் முந்தானை முடிச்சி பட சிறுவனை பேட்டி கண்ட பாக்கியராஜ்.
முந்தானை முடிச்சு படத்தின் மலரும் நினைவுகளை பகிரும் வகையில் பாக்யராஜ் பதிவிட்டு இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் கே பாக்யராஜ்ஜூம் ஒருவர். இவருடைய இயக்கத்தில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட். இவர் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார்.
அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். மேலும், தமிழ் சினிமாவில் சிறந்த திரை கதை கொடுக்கும் படங்களை எடுப்பது தான் பாக்கியராஜின் தனி சிறப்பு. தொடர்ந்து படங்களை இயக்கி வந்த பாக்கியராஜ் நடிகராகவும் கொடிகட்டி பறந்தார். இறுதியாக இவர் தன் மகனை வைத்து ‘சித்து +2’ படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் படத்தை இவர் இயக்குவது இல்லை என்றாலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்த நிலையில் இவர் நடித்த முந்தானை முடிச்சு படத்தின் மலரும் நினைவுகள் குறித்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, 1983 ஆம் ஆண்டு இவர் இயக்கி நடித்த முந்தானை முடிச்சு படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த படத்தில் பாக்யராஜ், ஊர்வசி, தவக்களை, தீபா, கே.கே.செளந்தர் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். ஏவிஎம் நிறுவனத்தின் தயாரிப்பில் இந்த படம் வெளியாகி இருந்தது. இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அதோடு நடிகை ஊர்வசி அறிமுகமான முதல் தமிழ் திரைப்படம் இது தான். மேலும், இந்த படம் அப்போதே திரையரங்களில் 100 நாட்கள் மேல் ஓடி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சாதனை படைத்தது.
https://www.youtube.com/watch?v=MLLLbjCtzfU&t=204s
பின்னர் இந்த முந்தானை முடிச்சு படத்தினை ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் ரீமேக் செய்திருந்தார்கள். தற்போதும் இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் முந்தானை முடிச்சு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிரபலங்களை பாக்யராஜ் நேரில் சந்தித்து இருக்கிறார். அந்த வகையில் படத்தில் பள்ளிக்கு லேட்டா வரும் ஒரு மாணவன், உங்களுக்கு நேத்து கல்யாணம் ஆயிடுச்சு. ஆத்தா, நீங்க அசதியில் தூங்கி இருப்பாங்க சொன்னாங்க அப்புறம் பெல் அடிச்சுச்சு அதனால தான் கிளம்பி வந்தேன் என்று சொல்லி இருப்பார். அவர் பெயர் தான் சுரேஷ்.
தற்போது அவரை தான் பாக்கியராஜ் சந்தித்து இருக்கிறார். அவர், அந்த படத்தில் நான் நடிக்கும்போது எல்கேஜி படித்தேன். என்னை பொறுத்தவரை ஒரு ஹீரோ என்றால் நடிக்கணும் இயக்கமும் கதை எழுதணும் வசனம் எழுதணும் என்று தான் நினைத்தேன். என்னை பொறுத்தவரை நீங்கள் தான் ஹீரோ. நான் பிகாம் முடித்து இருக்கிறேன். 20 வருடங்களாக ஒரு கம்பெனியில் வேலை செய்து கொண்டிருந்தேன். தற்போது நான் ஒரு கம்பெனி நடத்திக் கொண்டு வருகிறேன். நான் இந்த கம்பெனி தொடங்கி ஒரு வருடம் ஆகிறது. எனக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கிறான். அவன் இப்போது முதலாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.
என்னுடைய திருமணத்தின் போது பத்திரிக்கை எடுத்துட்டு உங்களை பார்க்க வந்தேன். அப்போதுதான் உங்களுடைய மகன் சாந்தனுக்கும் திருமணம் என்று கேள்விப்பட்டேன். அந்த பரபரப்பில் உங்களை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று வந்து விட்டேன். இப்போது நீங்கள் முந்தானை முடிச்சு படத்தில் நடித்த நடிகர்களை தேடிக் கொண்டிருப்பதை கேள்வி பட்டேன். அதற்கு பிறகு தான் நான் உங்களை சந்திக்க வந்தேன். அந்த படத்தில் நடித்த அனுபவம் நன்றாக இருந்தது. உங்களை சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம். இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்று பகிர்ந்து இருக்கிறார்.