சீமான் போலீஸ் அதிகாரியாக நடித்து இருக்கும் 'முந்திரிக்காடு' எப்படி ? முழு விமர்சனம் இதோ.

By subhashini · 9/4/2023

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர், நடிகராக திகழ்பவர் சீமான். தற்போது சீமான் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் முந்திரிக்காடு. இந்த படத்தை இயக்குனர் மு களஞ்சியம் இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் பல புது முகங்கள் நடித்திருக்கிறார்கள். தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற பட நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சீமான் அவர்கள் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். ஆவண கொலை பற்றியும், ஜாதி வெறி பற்றியும் மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பல எதிர்பார்ப்புடன் வெளியாகி இருக்கும் முந்திரிக்காடு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் ஒரு கிராமத்தில் வாழும் மக்கள் ஜாதி தான் எல்லாமே என்று வாழ்கிறார்கள். அங்கு ஜாதி மாறி காதலிக்கும் ஜோடிகளை தேடி தேடி வெட்டி கொலை செய்கிறார்கள். அந்த ஊரே ஜாதி வெறி பிடித்து அலைகிறது. அந்த கிராமத்தில் ஐஏஎஸ் கனவுடன் வாழும் ஹீரோயினி தெய்வம் உயர் ஜாதியை சேர்ந்தவர். போலீஸ் கனவுடன் வாழும் ஹீரோ செல்லா கீழ் ஜாதியை சேர்ந்தவர். இவர்கள் இருவருக்கும் மத்தியில் காதல் இல்லை என்றாலும் இருப்பதாக சம்பந்தப்படுத்தி ஊர் முழுவதும் பரப்பி விடுகிறார்கள்.

படத்தின் கதை:

இதனால் அவர்களை துன்புறுத்துகின்றனர். பொய்யாக இவர்களுக்கு மத்தியில் காதல் இருக்கிறது என்று சொன்னதால் உண்மையிலேயே இவர்களுக்கு மத்தியில் காதல் ஏற்பட்டது. இதனால் ஜாதி வெறி பிடித்த கும்பல் இவர்களை கொல்வதில் குறியாக இருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் நாயகியை ஊருக்கு நடுவில் வைத்து முடியை எல்லாம் அறுத்து மாணபங்கம் செய்கின்றனர். இதையெல்லாம் பொறுத்துக் கொண்ட தெய்வம், செல்லா தான் வேண்டும் என்று அடம் பிடிக்கிறார்.

அவளை கொல்ல வேண்டும் என்று அந்த பெண்ணின் உயர் ஜாதியை சேர்ந்தவர்கள் முடிவெடுக்கின்றனர். இறுதியில் கதாநாயகி கொலை செய்யப்பட்டாரா? செல்லாவும் தெய்வமும் இணைந்தார்களா? இந்த ஜாதி வெறிக்கு காரணம் என்ன? இவர்களுக்கு மத்தியில் சீமான் உடைய ரோல் என்ன? என்பது தான் படத்தின் மீதி கதை. நாயகி இந்த படத்திற்கு புது முகமாக இருந்தாலும் படத்தை முழுவதும் சுமந்து செல்கிறார் என்றே சொல்லலாம்.

சீமான் குறித்த தகவல்:

கிளைமேக்ஸ் காட்சியில் இவருடைய நடிப்பு பாராட்டை பெற்றிருக்கிறது. நாயகனாக வரும் புகழ் இன்னும் கொஞ்சம் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், நடிகரும், இயக்குனருமான சீமான் படத்தில் பட்டையை கிளப்பி இருக்கிறார். சாட்டை பட சமுத்திரக்கனி போலவே ஜாதி வெறி பிடித்தவர்களுக்கு அவர் செய்யும் அட்வைஸ் எல்லாம் வேற லெவலில் இருக்கிறது. இந்த படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கிறார். இவர் கட்சிக் கூட்டங்களில், மேடைகளில் பேசுவது போலவே படத்திலும் அடுக்கு மொழியில் வசனம் பேசுகிறார்.

படம் குறித்த விவரம்:

இது பல இடங்களில் க்ளாப்ஸ்களை வாங்கித் தந்திருக்கிறது. இவருக்காகவே இந்த படத்தை பார்க்கலாம் என்று சொல்லும் அளவிற்கு சீமான் நடித்திருக்கிறார். ஆனால், படம் முழுக்க ஜாதி ஜாதி என்று பேசிக் கொண்டிருப்பது பார்வையாளர்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் படத்தில் வரும் காதல் காட்சிகளும், காதலுக்காக போராடும் காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் நிற்கவில்லை. காரணம் படத்தில் எல்லாம் புது முகங்கள்.

படம் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை மெதுவாகவே சென்று கொண்டிருக்கின்றது. பாடல்கள் எல்லாம் ரொம்ப சுமாராக இருக்கிறது. ஜாதி அராஜகத்தை மையமாக வைத்து இந்த படத்தை இயக்கியிருந்தாலும் அதை தெளிவாகவும், இன்னும் கொஞ்சம் அழுத்தமாகவும் இயக்குனர் சொல்லி இருக்கலாம். சொல்ல வந்த கருத்தை தெளிவாக சொல்லியிருந்தால் படம் அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கலாம். படத்தில் நீளமான தேவையில்லாத காட்சிகள் நிறைய இருக்கிறது. இரண்டாம் பாதையின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம். பெரிய எதிர்பார்ப்புடன் இருந்த இந்த படம் ரொம்ப சுமாராக தான் இருக்கிறது.

நிறை:

சீமானின் நடிப்பு சிறப்பு

ஹீரோயினி சிவப்பிரியா மலரின் நடிப்பு நன்றாக இருக்கிறது

ஜாதி வெறி பிடித்தவர்களின் முகத்திரையை காட்டி இருக்கிறது

மற்றபடி சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதாக நிறைகள் இல்லை

குறை:

படம் தொடக்கத்தில் இருந்து இறுதிவரை ஜாதி ஜாதி என்று செல்கிறது

புதுமுக நடிகர்கள்

கதைக்களத்தில் இயக்குனர் இன்னும் கொஞ்சம் மெனக்கட்டு இருக்கலாம்

படத்தின் காட்சிகள் நீளமாக இருக்கிறது

தேவையில்லாத சில காட்சிகள் பார்வையாளர்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தியிருக்கிறது

சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பாடல்கள் இல்லை

மொத்தத்தில் முந்திரி காடு- எதிர்பார்த்த லாபம் இல்லை.

Tamil Behind Talkies AMP · Quick view
View full