ராம் சரண் முதல் படத்தை உதாரணம் காட்டி தெலுங்கு சினிமாவில் இருக்கும் நேபோட்டிசம் குறித்து ஓப்பனாக பேசிய நானி

By subhashini · 1/3/2023

வாரிசு நடிகர்கள் குறித்து தன்னை ராம்சரனுடன் ஒப்பிட்டு நானி அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. டோலிவுட்டில் நேச்சுரல் ஸ்டாராக திகழ்ந்து கொண்டிருப்பவர் நானி. இவர் அட்டா சம்மா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படமே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்றுத் தந்திருந்தது. அதனைத் தொடர்ந்து இவர் தெலுங்கில் பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்திருக்கிறார்.

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், வசூலையும் பெற்று தந்திருக்கிறது. பின் இவர் தமிழில் வெப்பம் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தார். அதன் பிறகு தெலுங்கில் வெளியான ஈகா என்ற படத்தை தமிழில் நான் ஈ என்ற பெயரில் வெளியாகி இருந்தது. இந்த படம் நானிக்கு மிகப்பெரிய பெயரை வாங்கித் தந்திருந்தது. இதனை தொடர்ந்து இவர் தமிழ், தெலுங்கு போன்ற பலமொழி படங்களில் நடித்து வருகிறார்.

நானி திரைப்பயணம்:

அந்த வகையில் சமீபத்தில் நானி நடிப்பில் இயக்குனர் ராகுல் சன்கிரித்யன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘ஷ்யாம் சிங்கா ராய்’. இது மறுபிறவியை மையமாக கொண்டு உருவாகி இருந்த படம். இப்படத்தில் சாய் பல்லவி, கீர்த்தி ஷெட்டி, முரளி ஷர்மா உள்ளிட்ட பலர் நடித்து இருந்தார்கள். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய பல மொழிகளில் வெளிவந்து மிகப் பெரிய அளவில் ஹிட் கொடுத்திருந்தது.

நானி நடித்த படங்கள்:

இதை அடுத்து நானி நடிப்பில் வெளிவந்து இருந்த படம் ‘அன்டே சந்தரானிக்கி’ . இந்த படத்தை தமிழில் அடடே சுந்தரா என்ற பெயரில் வெளியாகி இருந்தது. விவேக் ஆத்ரேயா இந்த படத்தை இயக்கி இருக்கிறார். மேலும், இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்து இருக்கிறது. இவர்களுடன் இந்த படத்தில் ரோகிணி, நதியா, ராகுல் ராமகிருஷ்ணா உட்பட பல நடிகர்கள் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை. இருந்தாலும், இந்த படத்தின் பாடல்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

நிஜம் வித் ஸ்மிதா நிகழ்ச்சி:

இதனை தொடர்ந்து தற்போது நானி அவர்கள் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது நானி நடித்திருக்கும் தசரா படம் மார்ச் 30ம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் நானி மற்றும் பாகுபலி பட வில்லன் ராணாவும் தெலுங்கில் ஒளிபரப்பாகும் நிஜம் வித் ஸ்மிதா என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்கள். அப்போது நானியிடம் வாரிசு நடிகர்கள் குறித்த கேள்வி எழுப்பினார்கள். அதற்கு நானி அவர்கள் தன்னை ராம்சரனுடன் ஒப்பிட்டு கூறியிருந்தது, நான் நடித்த முதல் படத்தை ஒரு லட்சம் பேர் மட்டுமே பார்த்தனர்.

வாரிசு நடிகர்கள் குறித்து நானி சொன்னது:

ஆனால், ராம்சரனின் முதல் படத்தை கோடிக்கணக்கான பேர் பார்த்தார்கள். நான் திரைத்துறை சார்ந்த பின்புலத்தில் இருந்து வந்தது கிடையாது. ஆனால், ராம்சரண் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் மகன். அவர் திரைத்துறை பின்புலத்தில் இருந்து வந்தவர். அதுமட்டுமில்லாமல் ராம் சரணின் உறவினர்கள் பவன் கல்யாண், அல்லு அர்ஜுன், அல்லு சிரிஷ், வருண் தேஜ் என பல பேர் திரைத்துறையை சேர்ந்தவர்கள் என்று கூறியிருந்தார். இப்படி நானி அளித்த பேட்டியை பார்த்து ராம்சரண் ரசிகர்கள் கொந்தளித்து கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். இன்னொரு பக்கம் நானி பேசியதில் எந்த தவறும் இல்லை. அவர் உண்மையை தான் பேசுகிறார் என்று ஆதரவும் தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full