வாணி போஜனின் முதல் படமான 'ஓ மை கடவுளே' எப்படி இருக்கு ? முழு விமர்சனம் இதோ.

By Rajkumar · 14/2/2020

அஷ்வத் மாரிமுத்து என்ற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ள படம் தான் ஓ மை கடவுளே. இந்த படத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் உட்பட பல நடிகர்கள் நடித்து உள்ளார்கள். இந்த படம் காமெடி, ரொமான்ஸ் கலந்த கலவையாக படம். இந்த படத்தை ராட்சசன் படத்தை தயாரித்த ஆக்சிஸ் பிலிம் பேக்டரி தயாரித்து உள்ளது. இந்த படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து உள்ளார். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி அவர்கள் கவுரவ தோற்றத்தில் நடித்து உள்ளார். இன்று காதலர் தினத்தை முன்னிட்டு இந்த படம் திரையரங்கில் வெளியாகி உள்ளது. இந்த படத்தின் விமர்சனம் இதோ…

கதைக்களம்:

சிறு வயதில் இருந்தே அசோக் செல்வனும், ரித்திகா சிங்கும் நண்பர்களாக இருக்கிறார்கள். வாலிபம் வந்த பின்பும் இவர்களின் நட்பு தொடர்கிறது. ஒரு நாள் இவர்களுடைய நட்பு காதலாக மாறி ரித்திகா சிங் நீ என்னை கல்யாணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்கிறார். அசோக்கும் ஒரு வினாடி கூட யோசிக்காமல் சரி என்கிறார். பின் இவர்கள் இருவருக்கும் திருமணம் ஆகிறது. கல்யாணம் ஆன பிறகு அசோக் எதிர்பார்த்த மாதிரி வாழ்க்கை அமையவில்லை. ரித்திகா சிங் உடன் ரொமான்டிக் பார்வை பார்க்க முடியாமல் அவதிப்படுகிற சூழ்நிலையில் தள்ளப்படுகிறார். இந்த நிலையில் தான் தன் பள்ளி பருவத்தின் இன்னொரு தோழியான வாணி போஜனை காண்கிறார்.

பின் அசோக் செல்வனும், வாணியும் நெருங்கி பழகுகிறார்கள். இதை அறிந்த ரித்திகா சிங் அசோக்கை கண்டிக்கிறார். பின் இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இவர்கள் மோதல் விவாகரத்து செய்ய முடிவு எடுக்கின்றனர். அந்த சூழலில் தான் அசோக் செல்வனுக்கு கடவுள் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், ரமேஷ் திலகமும் கடவுளாக காட்சி அளிக்கிறார்கள். உனக்கு இன்னொரு வாழ்க்கையை தருகிறோம். இந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லாதே என்றும் கூறுகிறார்கள். பின் அவர்கள் அசோக் செல்வனுக்கு டிக்கெட் ஒன்றை தருகிறார்கள். அந்த வாழ்க்கையில் என்ன நடக்கிறது? அவர் யாரை திருமணம் செய்து கொள்கிறார்? யாருடன் வாழ்கிறார்? என்பது தான் சுவாரஸ்யம்.

தன் பள்ளியின் பழைய தோழி வாணி போஜனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறாரா? தன் மனைவி உடன் சேர்ந்து வாழ்கிறாரா? கடைசியில் என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் மீதி கதை. அசோக் செல்வன் இந்த படத்தில் இரண்டு பெண்களிடம் சிக்கி தவிக்கும் தவிப்பில் அழகாக நடித்து உள்ளார். குடும்ப நண்பராகவும், ஜாலியான கணவராகவும் படம் முழுக்க அசோக் செல்வன் நடித்திருக்கிறார். அசோக் செல்வன் இரு பெண்களுடன் இருக்கும் கெமிஸ்ட்ரி சூப்பராக ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. ரித்திகா சிங் நண்பராக இருக்கும் போது வெகுளியாக இருப்பார்.

பின் மனைவி என்று வந்தவுடன் சந்தேகம், கோபம், பாசம் என அனைத்து தரப்பிலும் கச்சிதமாக நடித்துள்ளார். சொல்லப்போனால் ரித்திகா சிங் கதாபாத்திரமாகவே மாறி உள்ளார் என்று சொல்லலாம். வாணி போஜன் இந்த படத்தில் காதல் தேவதையாக வலம் வந்திருக்கிறார். எதார்த்தமான நடிப்பில் இளைஞர்கள் மனதை கட்டிப் போட்டு உள்ளார். இது இவரது முதல் படம் என்று சொல்ல முடியாது அளவிற்கு வாணி நடித்து உள்ளார்.

கௌரவ தோற்றத்தில் நடித்திருக்கும் விஜய் சேதுபதி, ரமேஷ் திலக் கதையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல உதவி உள்ளார்கள். சாரா படத்தில் கொடுக்கும் கவுண்டர் காமெடிக்கு அளவே இல்லை. படத்தின் முதல்பாதி காதலும், மோதலும் ஆக கடந்து செல்கிறது. இரண்டாவது பாதி தான் சுவாரசியமாக கொண்டு சென்றிருக்கிறார்கள். ஒரு காதல் கதையை வித்தியாசமான கோணத்தில் சொல்லி இருக்கிறார் இயக்குனர். லியோன் பின்னணி இசை படத்திற்கு பக்க பலமாக இருக்கிறது.

பிளஸ்:

படத்தில் அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களில் கனகச்சிதமாக நடித்து உள்ளார்கள்.

படத்தில் காமெடிக்கு பஞ்சமே இல்லாமல் இருக்கிறது.

ஒளிப்பதிவு, இசை எல்லாம் படத்திற்கு பக்க பலமாக உள்ளது.

கௌரவ வேடத்தில் விஜய்சேதுபதி அவர்கள் பட்டையை கிளப்பி இருக்கிறார்.

மைனஸ்:

தற்போது வளர்ந்து வரும் காலத்திற்கு விவாகரத்து என்ற பெயரில் கணவன் மனைவிகள் பிரிவது இயல்பான ஒன்றாக மாறிவிட்டது.

முதல் பாதியும், இரண்டாம் பாதியும் ஏதோ சம்பந்தமே இல்லாமல் போல் செல்கிறது.

இரண்டாம் பாதி கொஞ்சம் போரடிக்கும் மாதிரி தான் உள்ளது.

இறுதி அலசல்:

கணவன் மனைவிக்குள் புரிதல் இல்லாமல் இருந்தால் விவாகரத்தில் தான் முடியும். அதை அழகாக கூறியிருக்கிறார் இயக்குனர். காதலர்களாக இருக்கும் போதும் சரி, கணவன் மனைவியாக இருக்கும் போதும் சரி காதல் வேண்டும், புரிதல் வேண்டும் என்பதைச் சொல்லி இருக்கிறார். மொத்தத்தில் "ஓ மை கடவுளே படம் காதல் கலாட்டா".

Tamil Behind Talkies AMP · Quick view
View full