மண்வாசனை பாணியில் வெளிவந்த 'ஒண்டிமுனியும் நல்லபாடனும்' படம் எப்படி இருக்கு? முழு விமர்சனம் இதோ
இயக்குனர் சுகவனம் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் படம் ஒண்டிமுனியும் நல்லபாடனும். இந்த படத்தில் பரோட்டா முருகேசன், கார்த்திகேசன், சித்ரா நடராஜன், முருகன், விஜய் சேனாதிபதி, விஜயன், விகடன் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை கருப்புசாமி தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு நடராஜன் சனகரன் இசை அமைத்திருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.
கதைக்களம்:
படத்தில் ஹீரோ பரோட்டா முருகேசன், சிறு வயது மகனின் உயிரை காப்பாற்ற தன்னுடைய காவல் குலதெய்வமான ஒண்டிமுனியனுக்கு கிடாயை பலி கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார். பின் ஹீரோவுடைய வேண்டுதலுமே நிறைவேறி விடுகிறது. இதற்காக இவர் ஒரு கிடா குட்டியை வாங்கி வளர்த்து வருகிறார். ஒரு கட்டத்தில் கிடாவும் அவருடைய மகனும் வளர்ந்து விடுகிறார்கள். பின் கிடாவை ஒண்டிமுனியனுக்கு காணிக்கை கொடுக்க வாய்ப்பு கிடைக்காமலே போகிறது.
காரணம், அந்த ஊரில் இருக்கும் இரண்டு பண்ணாடிகள் இடையே மோதல்கள் அதிகமாக இருப்பதால் கோவில் திருவிழாக்களை நடத்தாமலே வைத்திருக்கிறார்கள். இதனால் ஹீரோ முருகேசன் இருவரையும் சமாதானப்படுத்தி கோவில் திருவிழாவை நடத்த முயற்சிக்கிறார். அவர் எடுக்கும் பல முயற்சிகள் கைவிடப்படுகிறது. இதற்கிடையில் ஹீரோ முருகேசன் உடைய மகள் சித்ராவிற்கு பேசிய நகை போடாததால் மாமியார் வீட்டில் இருந்து விரட்டி விடுகிறார்கள்.
இன்னொரு பக்கம் ஹீரோ மகன் தன் காதலுக்காக மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்குவதற்கு வளர்த்த கிடாவையே வளர்க்க முயற்சி செய்கிறார். இப்படி பல பிரச்சனைகளுக்கு நடுவில் ஹீரோ முருகேசன் தன்னுடைய வேண்டுதலை நிறைவேற்றிய காவல் தெய்வத்திற்கு கிடாயை பலி கொடுத்தாரா? இல்லையா? ஹீரோ மகளின் நிலைமை என்ன ஆனது? ஹீரோ ஆட்டுக்குட்டியை விற்றாரா? என்பதுதான் படத்தினுடைய மீதி கதை. படத்தில் ஹீரோ பரோட்டா முருகேசன் நல்லபாடன் என்ற கதாபாத்திரத்தில் ஏழை விவசாயியாக தன்னுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த படத்தை பார்க்கும்போது அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.
இவர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்தாலும் இந்த படத்தில் அவர் ஒரு முக்கிய ரோலில் நடித்து படத்தை கடைசி வரை தன் தோழில் சுமந்து சென்றிருக்கிறார் என்று சொல்லலாம். பெரிய பண்ணாடியாக இந்த படத்தில் கார்த்திகேசனும், சிறிய பண்ணாடியாக இந்த படத்தில் முருகனும் நடித்திருக்கிறார்கள். இவர்கள் இருவருடைய நடிப்பு பாராட்டுக்குரிய வகையில் உள்ளது.
படத்தில் வரும் மற்ற கதாபாத்திரங்களுமே தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். இயக்குனர் கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்து இருக்கிறார். பாடல்கள் பெரிதாக கவரவில்லை என்றாலும் பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக இருந்திருக்கிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங் எல்லாமே நன்றாக இருக்கிறது. சாதாரண கதைக்களமாக இருந்தாலும் இயக்குனர் அதை சுவாரசியமாக கொண்டு சென்றிருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.
வசனம், கதையின் கரு எல்லாமே கிராமத்து சாயலில் ஒரு மண்ணின் வாழ்வியலை சிறப்பாக காண்பித்து இருக்கிறது. குறிப்பாக, கிளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது. மொத்தத்தில் எல்லோரும் சென்று பார்க்கும் ஒரு உணர்வு பூர்வ படமாக தான் ஒண்டிமுனியனும் நல்லபாடனும் இருக்கிறது.
நிறை:
பரோட்டா முருகேசனின் நடிப்பு
நடிகர்கள் எல்லோருமே தங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்
கதைக்களம் அருமை
பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்
கிளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது
குறை:
பிரபல நடிகர்கள் இல்லை
பாடல்கள் பெரிதாக கவரவில்லை
ஆங்காங்கே சில லாஜிக் குறைபாடுகள்
மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரிதான குறைகள் எதுவுமே இல்லை
மொத்தத்தில் ஒண்டிமுனியனும் நல்ல பாடனும் - உணர்வுபூர்வமான கதை