நானும் இப்படிப்பட்ட சினிமாவிற்குள் வந்துவிட்டேன். சுயாதீன படமெடுக்க விரும்புபவர்கள் என்னை அணுகலாம் – ரஞ்சித் திடீர் முடிவு.
தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் பா ரஞ்சித். இவர் 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டகத்தி என்ற படத்தின் மூலம் தான் இயக்குனராக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமாகி இருந்தார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் நடிகர் கார்த்தியை வைத்து வட சென்னையை கதைக்களமாக கொண்டு மெட்ராஸ் என்ற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதனை தொடர்ந்து இவர் தமிழ் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கும் ரஜினிகாந்தை வைத்து கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கி இருந்தார். இவ்விரு படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியாகி இருந்த சார்பட்டா பரம்பரை படமும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் படங்களையும் தயாரித்தும் வருகிறார். தற்போது பா ரஞ்சித் அவர்கள் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி இருக்கிறார். தற்போது பார் ரஞ்சித்தின் நீலம் படத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் சேத்துமான். இந்த படத்தை அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கி இருக்கிறார். இந்த படம் சோனி லைவ் இணையத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் பிரஸ்மீட் சென்னையில் நடைபெற்றது.
பா ரஞ்சித் அளித்த பேட்டி:
இதில் பங்கேற்ற இயக்குனர் பா ரஞ்சித் கூறியிருந்தது, சேத்துமான் திரைப்படம் ஒரு திரைப்படமா? என்பதே எனக்கு முதலில் தெரியவில்லை. அந்தக் கதையை படித்த போது இது ஒரு ஃப்யூச்சர் ப்லிம்மாக இருக்குமா? என்ற சந்தேகமும் எனக்கு இருந்தது. என்னோட சந்தேகத்தை நான் இப்படத்தின் இயக்குநர் தமிழிடமும் கேட்டேன். ஆனாலும், இந்தக் கதை என்னை வெகுவாக பாதித்தது. எனக்கு எப்பொழுதுமே மெயின் ஸ்டிரீம் சினிமாக்களைப் போல Parallel சினிமாக்கள் என்று சொல்லப்படும் சுயாதீனத் திரைப்படங்கள் மீதும் எனக்கு மிகப்பெரிய ஆர்வம் உண்டு.
சுயாதீனத் திரைப்படம் குறித்த தகவல்:
சுயாதீனத் திரைப்படங்களில் இருக்கின்ற சுதந்திரம் பிடிக்கும். அது ஒரு கனவு போன்றது. அந்தக் கனவை யாரும் கட்டுப்படுத்த முடியாது. இது போன்ற திரைப்படங்களை இயக்காமல் நான் கமர்ஸியல் சினிமாவிற்குள் நுழைந்துவிட்டேன். கட்டுப்படுத்த முடியாத யாராலும் தணிக்கை செய்ய முடியாத எண்ணங்களை திரைப்படங்களாக மாற்றுவது மிகவும் முக்கியம் என்று நான் கருதுகிறேன். இலக்கியத்திற்கு இருக்கின்ற கட்டற்ற சுதந்திரம் சினிமாக்களுக்கும் இருக்க வேண்டும் என்பது பிற உலக மொழித் திரைப்படங்களைப் பார்த்து நான் தெரிந்து கொண்ட ஒன்று.
சேத்துமான் படம் பற்றிய தகவல்:
சுயாதீனத் திரைப்படங்களை இப்பொழுது என்னால் எடுக்க முடியாவிட்டாலும் கூட இனி வரும் காலங்களில் அது போன்ற திரைப்படங்களை எடுக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. அதனால் இப்பொழுது சுயாதீனத் திரைப்படங்களை தயாரிப்போம் என்கின்ற எண்ணத்தில் இருந்தேன். அப்பொழுது தான் இயக்குநர் தமிழ் என்னை அணுகி இந்தக் கதையை கொடுத்தார். அதைப் படித்ததுமே எனக்கு அக்கதை மீது மிகப்பெரிய நம்பிக்கை வந்தது. சேத்துமான் திரைப்படம் ஒரு பரிட்ச்சார்த்த முயற்சி தான். இது எப்படி திரைப்படமாக சாத்தியப்படும் என்று கேள்வி எழுப்பினார்கள்? ஆனால், இது ஒரு முக்கியமான திரைப்படமாக வரும் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.
படம் உருவான விதம்:
நீலம் தயாரிப்பில் படம் செய்யும் இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் முழு சுதந்திரம் கொடுத்து வருகிறோம். நீலம் தயாரிப்பில் வந்த படங்களிலேயே இந்தத் திரைப்படம் இயக்குநரின் முழு சுதந்திரத்தோடு வெளியான படம் என்று சொல்லலாம். அவர் என்ன நினைத்தாரோ? அப்படியே படத்தை எடுத்து முடிக்க நாங்கள் உறுதுணையாக இருந்திருக்கிறோம். நான் பெரும்பாலும் கதைகளில் எதை சொல்லலாம்? எதை சொல்லக்கூடாது? என்பதை தீர்மானிக்கும் பொறுப்பைத் தான் நான் எடுத்துக் கொள்வேன். இப்படத்தில் இயக்குநர் தமிழ் எனக்கு அந்த வேலையைக் கூட கொடுக்கவில்லை.
சாதி பிரச்சனை குறித்த கருத்து:
இந்தியக் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை இத்திரைக்கதையில் ஒரு லேயராக கொண்டு வந்தது உண்மையாகவே மிகச் சிறப்பானது. தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் குடியரசு தலைவராகவும் முடியும், சாதிய சிக்கல்களில் சிக்குண்டு போய் அல்லல்படவும் முடியும் என்பதை மிகச் சிறப்பாக காட்டிய திரைப்படம். சிறிய முதலீட்டில் எடுத்து இப்படம் நல்ல லாபத்தை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. இது போன்ற சுயாதீனப் படங்களுக்கு மிகப்பெரிய வணிக சந்தையும் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இது போன்ற கருத்தியல் அம்சம் கொண்ட சுயாதீனத் திரைப்படங்களை எடுக்க விரும்பும் இயக்குநர்கள் நீலம் புரொடெக்சனை அணுகலாம் என்று கூறி இருந்தார்.