கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக திமுக அரசை வெளுத்து வாங்கிய இயக்குனர் பா ரஞ்சித்

By subhashini · 20/6/2024

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக திமுக அரசை இயக்குனர் பா ரஞ்சித் வெளுத்து வாங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போது தமிழகத்தையே கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் சம்பவம் தான் உலுக்கிக் கொண்டிருக்கின்றது. கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 34க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சில பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இருந்தாலுமே, மருத்துவர்கள் பல பேர் இறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள். அதில் மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால் தான் இந்த உயிரிழப்பிற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிந்திருக்கிறது.

கள்ளக்குறிச்சி சம்பவம்:

அதுமட்டுமில்லாமல் காவல்துறை பொறுப்பு இல்லாமல் இருந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. இதனால் பத்துக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு போட்டிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.

பிரபலங்கள் கண்டனம்:

இது தொடர்பாக விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இதை அடுத்து கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பிரபலங்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என பலரும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் அவர்கள் தமிழக அரசை கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறும் வகையில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார்.

பா. ரஞ்சித் பதிவு:

இந்த நிலையில் இது தொடர்பாக இயக்குனர் பா ரஞ்சித் பதிவு போட்டிருக்கிறார். அதில் அவர், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நிகழ்ந்த கள்ளச்சாராய மரணங்கள் அதிர்ச்சியையும், பெரும் வேதனையையும் ஏற்படுத்துகிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் அலட்சியப் போக்கே இக் கொடுந்துயரத்திற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. அதற்கு வன்மையான கண்டனங்கள்! சம்பந்தப்பட்ட குற்றவாளிகள், இதைத் தடுக்கத் தவறிய அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோரைக் கடுமையாகத் தண்டிப்பதோடு மட்டும் அல்லாமல், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வண்ணம் கடும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

திமுக அரசு குறித்து சொன்னது:

மேலும், சமீப காலமாக தமிழ்நாட்டில் மது மற்றும் போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை வயது வித்தியாசமின்றி, நகரம், கிராமம் என்ற வேறுபாடு இல்லாமல் பெருமளவில் பெருகியிருக்கிறது என்பதை அறிய முடிகிறது. இதனால் அவர்களின் குடும்பங்களும் வாழ்வாதாரமும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையானவர்களை நோயாளிகளாகக் கருதி அவர்களின் நிலையை மாற்ற மாவட்ட ஒன்றியங்கள் தோறும், மறுவாழ்வு மையங்களை உருவாக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துவோம் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full