மீண்டும் டியூஷன் எடுக்க போராடும் ராஜி, பாண்டியன் முடிவு என்ன? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

By subhashini · 9/11/2024

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் தங்கமயில், தன்னிடம் யாரும் பேசவில்லை என்று தன்னுடைய அம்மாவிடம் சொல்ல, மறுநாள் காலையில் தங்கமயிலின் அப்பா, அம்மா பாண்டியன் வீட்டிற்கு வந்தார்கள். அப்போது எதற்காக என் மகளிடம் யாரும் பேசவில்லை என்று தங்கமயில் அம்மா கேட்க, உங்கள் மகள் செய்த வேலை என்று கோமதி சொன்னார். ஒரு கட்டத்தில், நான் பணத்தை கொடுத்து விடுகிறேன் என்று அவர்கள் சொல்ல, பாண்டியன் பயங்கரமாக கோபப்பட்டார். உடனே தங்கமயிலின் அப்பா- அம்மா இருவருமே பயந்து ஏதேதோ சொல்லி சமாளித்ததால் பாண்டியனும் அமைதியாக விட்டார்.

பின் அவர்கள், குலதெய்வ கோயிலில் பொங்கல் வைப்பதால் எல்லோரையும் அழைக்க, பாண்டியனும் கோவிலுக்கு வர சம்மதித்தார். இன்னொரு பக்கம் தன்னுடைய அப்பா, அம்மா செய்த வேலையை நினைத்து தங்கமயில் புலம்பி கொண்டிருந்தார். மேலும், பாண்டியன் வீட்டில் எல்லோருமே கோவிலுக்கு சென்றார்கள். எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்று தங்கமயில் பயந்து கொண்டு இருந்தார். இன்னொரு பக்கம் தங்க மயிலின் அப்பா, அம்மா கோயிலுக்கு சென்று விட்டார்கள். பின் அங்கு வருபவர்களிடம் ஏதேதோ காரணத்தை சொல்லி சமாளித்தார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

பின் பாண்டியன் குடும்பமும் கோவிலுக்கு வந்ததால் எல்லோரும் சேர்ந்து பொங்கல் வைத்தார்கள். எல்லோருக்கும் தங்கமயில் சாப்பாடு பரிமாறி இருந்தார். அப்போது பாண்டியன் ஓரிடத்தில் நின்று போன் பேசிக்கொண்டிருந்தார். அந்த இடத்திலிருந்த கூரை அவர் மீது சரிந்து விழ பார்த்தது. உடனே தங்கமயில் அவரை தள்ளிவிட்டு காப்பாற்றுகிறார். ஆனால், தங்கமயில் மேல் அந்த கூரை விழுந்ததால் மொத்த பேருமே பதறி போனார்கள். தங்கமயிலின் தலையில் அடிபட்டு இருந்தது. இதனால் பாண்டியன் எமோஷனலாக ஃபீல் பண்ணி இருந்தார்.

நேற்று எபிசோட்:

நேற்று எபிசோட்டில் வீட்டில் எல்லோருமே தங்கமயிலின் உடல்நலத்தை விசாரித்து அவரின் செயலை பாராட்டி இருந்தார்கள். பாண்டியன், கோமதி இருவருமே கோபத்தை மறந்து தங்கமயில் இடம் பேசினார்கள். இது தான் சந்தர்ப்பம் என்று ராஜி, டியூஷன் விஷயத்தை சொல்ல வேண்டும் என்று தன்னுடைய மாமியாரை வழக்கம் போல் மிரட்டுகிறார். அதற்குப்பின் ரூமில் கோமதி, எப்படியாவது ராஜி டியூஷன் விஷயத்தை சொல்லிவிட வேண்டும் என்று நடந்து கொண்டே இருந்தார். பின் கோமதி ஏதேதோ கதையை சொல்ல, பாண்டியன் கோபப்படுகிறார். கடைசி வரை அவரால் சொல்லவே முடியவில்லை.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கிச்சனில் தங்கமயில்- மீனா இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது சரவணன் தன்னை சரியாக கவனித்துக் கொள்வதில்லை என்று வேதனைப்பட்டு தங்கமயில் பேச, மீனா அவருக்கு ஆறுதல் சொல்கிறார். அந்த சமயம் பார்த்து கோமதி வந்தவுடன் தங்க மயிலின் உடல் நலத்தை விசாரிக்கிறார். பின் ராஜி, டியூஷன் எடுக்கும் விஷயத்தை பேசினீர்களா என்று கேட்டதற்கு, கோமதி இல்லை என்று சமாளிக்கிறார்.

சீரியல் ட்ராக்:

பின் பெண்கள் எல்லோரும் தைரியம் கொடுத்து பாண்டியனிடம் பேச கோமதியை அனுப்பினார்கள். கோமதி பயத்தில் என்னென்னவோ சொல்லி உளறுகிறார். இதனால் பாண்டியன் , என்னாச்சு? ஏன் இப்படி பண்ணுற? என்று கேட்க திருப்பியும் கோமதி கிச்சனுக்கு சென்று விடுகிறார். மீண்டும் பெண்கள் எல்லோருமே கோமதிக்கு தைரியத்தை கொடுத்து அனுப்ப அவர் திருப்பியும் சொதப்பி வைக்கிறார். கடைசியில் ராஜி பாண்டியனிடம் டியூஷன் எடுக்கும் விஷயத்தைப் பற்றி பேசுகிறார். அவர் கோபத்தில் பார்க்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full