நான் கட்சி ஆரம்பிக்கிறேன் வந்து சேருங்க - சூப்பர் ஸ்டாரை கலாய்த்த பவர் ஸ்டார்.

By Rajkumar · 1/3/2020

பொதுவாகவே தெலுங்கு மற்றும் பிற மொழிகளில் வெளியான படத்தை தமிழில் டப் செய்தும், ரீமேக் செய்தும் வெளியிடுவது வழக்கமான ஒன்று தான். அந்த வகையில் தற்போது தெலுங்கில் வெளியான படத்தை தமிழில் சிவகாமி என டப் செய்து உள்ளார்கள். இந்த படம் கூடிய விரைவில் ரிலீஸ் செய்ய போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படம் பழைய அம்மன் படங்களை போன்ற கான்செப்டில் இருக்கும் என பலரும் தெரிவித்து வருகின்றனர். இந்த சிவகாமி படத்தின் இசை வெளியீட்டு விழா தற்போது சென்னையில் நடைபெற்றது. அதில் ஜே.எம். பஷீர், நடிகர் ராதாரவி, பவர் ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் அவர்கள் ரஜினிகாந்த குறித்து பேசி உள்ளார். இவர் தமிழ் சினிமா உலகில் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், இயக்குனர் என பன்முகங்கள் கொண்டவர். 2013 ஆம் ஆண்டு நடிகர் சந்தானத்தின் தயாரிப்பில் வெளிவந்த கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் பவர் ஸ்டார் நடித்திருந்தார். அதற்கும் முன்னதாகவே இவர் லத்திகா என்னும் தமிழ் திரைப்படத்தை தயாரித்து நடித்து இருந்தார். அதுமட்டும் இல்லாமல் இவர் அக்குபஞ்சர் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பவர் ஸ்டார் சீனிவாசன் அவர்கள் சிவகாமி படத்தின் இசை வெளியிட்டு விழாவில் கூறியது, நான் படத்தில் நடிக்கும் முன் நடிகர் ராதாரவி இடம் ஆலோசனை கேட்டேன். அவர் என்னை கடுமையாக திட்டி விட்டார். பொறாமையில் தான் சொல்கிறார் என நினைத்து நான் நடிக்க சென்று விட்டேன். ஆனால், அவர் சொன்னது நல்லதற்கு தான் என புரிந்து கொண்டேன். என்னுடைய கஷ்ட காலங்களில் நிறைய நல்ல அறிவுரை தருவார். நான் லத்திகா என்ற படத்தில் ஹீரோவாக நடித்தேன். இந்த படம் நானூறு நாட்கள் ஓடியது. மக்களும் இந்த படத்தை ஏற்றுக் கொண்டார்கள். பின் வில்லனாக ஒரு படம் பண்ணலாம் என்று ஆனந்த தொல்லை என்ற படம் பண்ணினேன்.

நான் சினிமாவில் 40 கோடிகளை இழந்திருக்கிறேன். பிறப்பது ஒருமுறை, இறப்பது ஒருமுறை. ஆனால், வாழும் வரை பெயர், புகழுடன் வாழ வேண்டும் என்பதற்காக ஒரு 40 கோடியை செலவு செய்தேன். என்னை பற்றி சோசியல் மீடியாவில் நல்ல விஷயங்கள் எழுதி உள்ளார்கள். அதே சமயம் என்னை பற்றி கெட்ட விதமாகவும் எழுதி உள்ளார்கள். அதை பற்றி நான் கவலை படவில்லை. நான் எல்லாவற்றிலும் ஜெயித்து வருவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்த சமயத்தில் நான் சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். சீக்கிரமாகவே நீங்கள் கட்சியை தொடங்கி அந்த கட்சியில் என்னை சேர்த்துக் கொள்ளுங்கள். என்னை துணை முதல்வர் ஆக்கி விடுங்கள். இல்லையென்றால் நான் கட்சி ஆரம்பிக்கிறேன். நீங்கள் வந்து சேர்ந்து விடுங்கள் என்று வேடிக்கையாக பேசிருந்தார். தற்போது இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full