ஷில்பா ஷெட்டி, ப்ரீத்தி ஜிந்தா வரிசையில் 'Surrogacy' முறையில் குழந்தைக்கு தாயான பிரியங்கா சோப்ரா.

By Arun · 22/1/2022

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ் தம்பதிக்கு வாடகை தாய் மூலம் குழந்தை பிறந்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே ஷில்பா ஷெட்டி, ப்ரீத்தி ஜிந்தா போன்றவர்கள் 'Surrogacy' (வாடகை தாய்) மூலம் தாயான நிலையில் தற்போது பிரியங்கா சோப்ராவும் வாடகை தாய் மூலம் தாயாகி இருக்கிறார். பாலிவுட்டில் முன்னணி நடிகையாக திகழ்பவர் பிரியங்கா சோப்ரா. இவர் இந்திய நடிகை மட்டுமில்லாமல் முன்னாள் உலக அழகியும் ஆவார். இவர் மாடலாக தன்னுடைய கேரியரை தொடங்கினார். பின் பல விளம்பரங்களில் நடித்து வந்தார். பிறகு 2000 ஆண்டில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் பங்குபெற்று வெற்றியும் பெற்று மிகப்பிரபலமானார் பிரியங்கா சோப்ரா.

அதனை தொடர்ந்து இவர் 2002 ஆண்டு மஜீத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் ஹிந்தியில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. தமிழன் படத்திற்கு பிறகு பிரியங்கா சோப்ரா பாலிவுட்டிலேயே தங்கிவிட்டார். தற்போது பிரியங்கா சோப்ரா அவர்கள் ஹாலிவுட், பாலிவுட், வெப் சீரிஸ் என பிஸியாக நடித்து உலக அளவில் மிக பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.

பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனாஸ் திருமணம்:

இதனிடையே பிரியங்கா சோப்ரா அவர்கள் நிக் ஜோனாஸ் என்பவரை காதலித்து வந்தார். பின் இவர்கள் 2018 ஆம் ஆண்டு ஜோத்பூர் அரண்மனையில் கிறிஸ்தவ முறைப்படியும், இந்து மத சடங்குகளின் படியும் திருமணம் செய்து கொண்டார்கள். பிரியங்கா சோப்ரா இந்துமதத்தையும், நிக் ஜோனாஸ் கிறிஸ்தவ மதத்தையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெகு சிறப்பாக நடைபெற்ற திருமணத்தில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனாஸ் விவாகரத்து சர்ச்சை :

அதோடு பிரியங்கா சோப்ராவை விட நிக் ஜோனஸ் 10 வயது சிறியவர். இதனால் இவர்களின் திருமணம் சமயத்தில் பலரால் பலவிதமாக பேசப்பட்டது. பின் சமீபத்தில் பிரியங்கா சோப்ரா தனது சமூக வலைத்தள பக்கத்தில் இருந்து தன்னுடைய பெயருக்கு பின்னால் இருந்த நிக் ஜோனஸ் என்ற பெயரை நீக்கி இருந்தார். இதனால் சோஷியல் மீடியாவில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்து பிரிந்து விட்டார்கள் என்று பல சர்ச்சைகளை கிளப்பி இருந்தார்கள்.

பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனாஸ் குழந்தை பிறந்து உள்ளது:

இந்த சர்ச்சைக்கு அலுவல் ரீதியான வசதிக்காக மட்டுமே பிரியங்கா தனது ஒரே பெயரை பயன்படுத்த முடிவு எடுத்ததாக பிரியங்கா சோப்ராவின் தாயார் மது சோப்ரா விளக்கம் அளித்திருந்தார். இந்நிலையில் தற்போது இத்தம்பதியினர் பெற்றோர்கள் ஆகியுள்ள தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இவர்கள் இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று உள்ளன. இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தையின் பெயர் குறித்து பிரியங்கா இன்னும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரியங்கா சோப்ரா- நிக் ஜோனாஸ் இன்ஸ்டா பதிவு:

இது குறித்து இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்கள். அதில் அவர்கள் கூறியிருப்பது, நாங்கள் வாடகை தாய் மூலம் ஒரு குழந்தையை பெற்று உள்ளோம் என்பதை பெரு மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். அதே வேளையில் நாங்கள் எங்கள் குடும்பத்தின் மீது கவனம் செலுத்துவதால் எங்களின் தனிப்பட்ட சுதந்திரம் கருதி யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். மிக்க நன்றி என்று பதிவிட்டிருந்தார். இவர்களுடைய பதிவிற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full