கோடி கோடியா சம்பாதிச்சது எல்லாம் போச்சு, கடன்காரன் ஆகிட்டேன் - ஜென்டில்மேன் தயாரிப்பாளர் குஞ்சுமோன்.

By Arun · 21/8/2023

கோடி கோடியா சம்பாதித்து கடன்காரன் ஆகிவிட்டேன் என்று ஜென்டில்மேன் 2 திரைப்படத்தின் அறிமுக விழாவில் தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் பேசி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிக பிரபலமான தயாரிப்பாளர் கே. டி. குஞ்சுமோன். அதோடு இவருக்கு என்று தமிழ் சினிமாவில் ஒரு தனி இடம் உண்டு. ஆரம்ப காலத்தில் கே. டி. குஞ்சுமோன் அவர்கள் திரைப்பட விநியோகஸ்தராக தான் சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்தார். அதற்குப் பிறகு மலையாளத்தில் மம்முட்டி, நெடுமுடி வேணு உள்ளிட்ட பல நடிகர்களின் வெற்றி படங்களை தயாரித்து இருந்தார். பின் 1991 ஆம் ஆண்டு பவித்ரன் இயக்கிய வசந்தகால பறவைகள் படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. அதனை தொடர்ந்து இவர் ஜென்டில்மேன் படத்தை தயாரித்தார்.

இந்த படமும் மிக பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. அதற்கு பிறகு சிந்துநதி பூ, காதலன், ரட்சகன், காதல் தேசம் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கே. டி. குஞ்சுமோன் தயாரித்திருக்கிறார். கடைசியாக இவர் தயாரித்த படங்கள் நஷ்டம் அடைந்ததால் இவர் தயாரிப்பில் இருந்து விலகி இருந்தார். அதற்குப் பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த கே. டி. குஞ்சுமோன் அவர்கள் தன் மகன் அபியை கதாநாயகனாக வைத்து ‘காதலுக்கு மரணமில்லை’ என்ற படத்தை எடுத்தார். அந்த படம் டீசர் வரை வந்தது. பின் மகன் ஹீரோவாக நடித்த கோடீஸ்வரன் என்ற படத்தையும் தயாரித்தார். ஆனால், முந்தைய படங்களின் நஷ்டத்தினால் தன்னுடைய மகனின் படத்தை வெளியிட முடியாமல் திணறினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கே. டி. குஞ்சுமோன் மீண்டும் தயாரிப்பாளராக தமிழ் திரைஉலகில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

ஜென்டில்மேன் 2 படம்:

இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் தயாரிப்பாளராக அறிமுகமான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க இருப்பதாக அறிவித்து இருந்தார். இந்த படத்திற்கு எம் எம் கீரவாணி இசையமைக்க இருக்கிறார். இவர் ராஜமௌலின் இயக்கத்தில் வெளிவந்த RRR படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைத்து ஆஸ்கர் விருதையும் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தை கோகுல் கிருஷ்ணா இயக்க இருக்கிறார். தற்போது இந்த படத்திற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஜென்டில்மேன் 2 படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றிருக்கிறது. அதில் தயாரிப்பாளரிட்டி கே. டி. குஞ்சுமோன் கலந்து கொண்டு கூறியது, கொரோனாவிற்கு முன்பு
ஜென்டில்மேன் 2 படத்தினுடைய அறிவிப்பை வெளியிட்டோம்.

அப்போதே அட்வான்ஸ் எல்லாம் கொடுத்து பேசி இருந்தோம். கொரோனா காலம் வந்ததால் எல்லாமே மாறிவிட்டது. கதை குறித்து நிறைய வேலை செய்தோம். அதன் பின்னர் இயக்குனர், ஹீரோ, ஹீரோயின் தேர்வு செய்திருந்தோம். அதற்கு பின் எல்லாமே மாறிவிட்டது. இப்போது அந்த படத்தை பற்றி சொல்ல வேண்டும் என்றால் கீரவாணி சார் தான். 200க்கும் மேற்பட்ட படங்களை விநியோகம் செய்து தயாரிப்பாளராக நான் வளரவில்லையே தவிர நான் வளர்ந்திருக்கிறேன். எந்த படம் ஓடும் ஓடாது என்பது எனக்கு நன்றாக தெரியும். ஆடியன்ஸ் பல்ஸ் எனக்கு தெரியும். நஷ்டம் வராத மாதிரி தான் படம் பண்ண வேண்டும். அதற்கு ஹீரோ ஹீரோயினிக்கு நான் முக்கியத்துவம் கொடுக்க மாட்டேன்.

வளர்ந்து வரும் நடிகர்களுக்கு, தொழில் நுட்ப கலைஞருக்கு தான் முக்கியத்துவம் கொடுப்பேன். நான் எப்போதும் ஸ்டோரிக்கு தேவையானவர்களை கொண்டு வருவேன். வைரமுத்து சார் இந்த படத்தில் அழைத்தேன். எனக்காக கதை கேட்காமல் சம்மதித்தார். அட்வான்ஸ் கூட அவர் வாங்கவில்லை. நிறைய அனுபவங்களும் வேதனைகளும் இருக்கு. அத்தனையும் மறந்துவிட்டு இப்போ மூன்று பாடல்கள் கம்போசிங் பண்ணியாயிற்று. கதை திரைக்கதை எல்லாம் மாறிவிட்டது. என்னுடன் இருந்த எல்லோரும் இப்ப பிஸியாக இருக்கிறார்கள். ஒரு வருடம் சொல்ல வேண்டிய அளவிற்கு என்னுடைய கதை இருக்கிறது.

கோடான கோடி பணத்தை நஷ்டத்தில் இழந்திருக்கிறேன். சம்பாதித்தேன் கடன் காரனாகிவிட்டேன். இந்த நிகழ்ச்சிக்கான அழைப்பிதழை ஏவிஎம் உள்ளிட்ட அனைத்து தயாரிப்பாளர்களிடம் கொடுத்திருக்கிறேன். அவர்கள் போட்ட பிச்சையில் தான் நிறைய படங்கள் நான் விநியோகம் செய்தேன்..40 ஆண்டுகளுக்கு மேல் இந்த பீல் டியில் இருக்கிறேன். இந்த தமிழ் மக்கள் என்னை வளர வைத்திருக்கிறார்கள். இத்தனை பேர் எனக்கு ஆதரவாக இருக்காங்க. நான் தளர மாட்டேன். ஜென்டில்மேன் 2 நான் இன்று செய்கிறேன் என்றால் உலகமே அதை எதிர்பார்க்கிறது. அடுத்து ஜென்டில்மேன் 2 ஆடியோவில் சந்திப்போம் என்று உணர்ச்சிபூர்வமாக பேசியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full